தஹஜ்ஜத் தொழுகை
“ஹுஜ்த்” என்ற மூலத்திலிருந்து பிறந்த (தஹஜ்ஜத்) என்ற இச்சொல் இரண்டு வெவ்வேறுபட்ட கருத்துகளை உணர்த்தப் பயன் படுத்தப்படுகிறது. இது உறங்குவதையும், விழித்தெழுவதையும், இரவில் தொழுவதையும், இரவில் குர்ஆன் ஓதுவதையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
தஹஜ்ஜத் தொழுகை பற்றி திருமறை குர்ஆனில்
இச்சொல் குர்ஆனில் ஒரே ஒரு தடவைதான் பயன் படுத்தப்பட்டுள்ளது. “தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.” என்று 17:79.ஆவது திருவசனத்தில் இறைவன் கூறுகிறான். எனினும், இத் தொழுகையைப் பற்றிப் பல இடங்களில் இறைவன் குறிப்பிட்டுள்ளான்.
“பயபக்தியுடையவர்கள் இரவில் சிறிது நேரமேயன்றி உறங்கார்” என்றும், “வைகறையில் எழுந்து தொழுது இறைவனிடம் மன்னிப்புக் கோருவர்” (51:17) என்றும், “இரவில் இறைமுன் நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்குவர்” (25:64) என்றும் கூறுகின்றான். மேலும், 32:16ஆவது திருவசனத்தில், “தங்களின் படுக்கைகளை விட்டு அவர்கள் விலாக்கள் உயர்ந்துவிடும். தங்களின் இறைவனுக்கு அஞ்சியும் அவன் மீது அன்பு கொண்டும் அவர்கள் இறைஞ்சுவார்கள்” என்று இறைவன் கூறியிருப்பது இத்தொழுகையைத்தான்.
தஹஜ்ஜத் தொழுகை கடமையாக இருந்த காலம்
இரவில் நின்று இறைவனைத் தொழுமாறு இறை கட்டளை வந்த பின் பல்லாண்டுகள் - பத்தாண்டுகள் என்றும் கூறப்படுகிறது - அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்கள் தோழர்களும் அவ்வாறே செய்து வந்தார்கள். பின்னர் ஐந்து வேளை தொழுகை கடமையாக்கப்பட்ட பின் இதனைத் தொழுவது கடமை இல்லாமல் ஆகிவிட்டது.
எனினும், கடமையான தொழுகைக்கு அடுத்த இடத்தை இத்தொழுகையே பெற்றுள்ளது. ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குத் தஹஜ்ஜுத்தும், வித்ரும் ஃபர்ளாகும். அவர்கள் சில் பொழுது இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழத் தவறிவிடின் பகலில் அதற்குப் பகரமாகப் பன்னிரெண்டு ரகஅத் நஃபில் தொழுவார்கள். நோய்வாய்ப்பட்டிருப்பின் அமர்ந்து தொழுவார்கள். சூஃபிகள் இவ்விரண்டு தொழுகைகளையும் ஃபர்ளு போன்றே கருதித் தொழுது வருகின்றார்கள். ஆனால், தஹுஜ்ஜுத் ஃபர்ளுக்கு அடுத்த தகுதி படைத்த தொழுகை என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
தஹஜ்ஜத் தொழுகை தொழும் முறை
இது குறைந்தது இரண்டு ‘ரக அத்’ தொழலாம். அதற்கு மேல் எத்தனை ‘ரக அத்’ கள் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். எனினும், இதில் நடுத்தரமானது நான்கு ‘ரக அத்’கள் என்றும் மேலானது எட்டு ‘ரக அத்’ கள் என்றும் பன்னிரண்டு ‘ரக அத்’ கள் என்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது. முதல் இரண்டு ‘ரக அத்’துகளைச் சுருக்கமாகத் தொழுவதும் பாக்கி ‘ரக அத்’துகளை நீளமாக்கித் தொழுவதும் நபியின் வழி முறை (ஸுன்னத்) ஆகும். இதில் நீண்ட நேரம் நின்று ஓதித் தொழுதல் அதிகமான ‘ரக அத்’துகள் தொழுவதை விட ஏற்றமாகும். நியமமாகத் தஹுஜ்ஜுத் தொழுது வருபவர்கள் பகலில் சிறு நேரம் உறங்குதல் ஸுன்னத்.
தஹஜ்ஜத் தொழுகையில் அதிகமதிகமாகப் பாவ மன்னிப்பு கோரல்
தஹஜ்ஜத் தொழுகையில் இறைவனிடம் அதிகமதிகமாகப் பாவ மன்னிப்புக் கோரல் ஸுன்னத் ஆகும். எனவே, இந்தப் பன்னிரண்டு ‘ரக் அத்’களிலும் ‘ரப்பனா’ எனத் தொடங்கும் 2:201, 2:250, 2:286, 3:8,9, 3:147, 7:23, 10:85,86, 18:10, 23:109, 40:7,9, 59:10, 60:4,5 ஆகிய திருவசனங்களை ஓதுவது மேலானது. இவை அனைத்துமே இறைஞ்சுதல்களாகும்.
தஹஜ்ஜத் தொழுகை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
இரவில் இரண்டு ரகஅத் தஹஜ்ஜுத் தொழுவது, ஒருவனது பாவங்களுக்குப் பரிகாரம் என்றும் அது ஒருவனுக்கு இறையண்மையை எய்துவிக்கும் என்றும் அது இவ்வுலகத்துடையவும் அதன் பாக்கியங்களையும் விட மேலானதென்றும், “என்னைப் பின்பற்றியவர் (உம்மத்து) களுக்குத் துன்பமாயிருக்குமென்று நான் கருதாதிருப்பின் மிஸ்வாக் செய்வதையும், நடு இரவில் இரண்டு ரக அத் தொழுவதையும் வாஜிபாக்கி இருப்பேன்” என்றும் ஒருவர் ஒர் ஆட்டில் பால் கறக்கும் நேரமாயினும் இரவில் எழுந்து தொழின் அவர் இரவெல்லாம் நின்று தொழுதவர் போலாவார் என்றும் அவர் காய்ந்த மரங்களிடையே தளிர்த்த மரம் போலாவார் என்றும் அவர் கேள்வி கணக்கின்றிச் சுவனம் புகுவார் என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், ஒருவன் இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழும் எண்ணத்துடன் படுத்து, உறக்கம் மிகுந்து அதற்கான வேளையில் எழ அவனால் இயலாது போய் விடின் அவன் தஹஜ்ஜுத் தொழுத பலன் எழுதப்படும் என்றும் அவனுடைய உறக்கம் அவனுக்கு இறைவன் அளித்த ‘சதக்கா’ (அறம்) ஆகிவிடும் என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தஹஜ்ஜத் தொழுகை மற்றும் ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) வித்தியாசம்
இரவில் சிறிதேனும் உறங்காமல் இருந்து இரவில் நஃபில் தொழுதால் அதற்கு ‘ஸலாத்துல் லைல்’ (இரவு தொழுகை) என்றும் உறங்கிய பின் எழுந்து தொழின் அதற்கு ‘ஸலாத்துத் தஹ்ஜஜுத்’ (தஹஜ்ஜத் தொழுகை) என்றும் பெயர் கூறப்படுகிறது. ஆனால், ‘ஸலாத்துல் லைல்’ என்பது ஸலாத்துத் தஹ்ஜ்ஜுத்துக்கும் மற்றதுக்கும் பொதுப் பெயராகக் கூறப்படுகிறது. ரமலானிலும் இரண்டு பெருநாள்களின் இரவுகளிலும் இதனைத் தொழுவது மிகவும் ஏற்றமாகும். மக்காவிலும், மதீனாவிலும் தஹுஜ்ஜுத் தொழுகைக்குப் ‘பாங்கு’ சொல்லப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.