Home


ஆகிரத் - மறுமை

        ’ஆகிர்’ எனும் சொல்லுக்கு ‘இறுதி’ என்று பொருள். அனைத்திற்கும் ஆதியாகவும், அந்தமாகவும் இருப்பவன் அல்லாஹ்வே. எனவே அல்லாஹ்வுக்கு ‘அவ்வல்’ என்றும் ‘ஆகிர்’ என்றும் திருப் பெயர்கள் உண்டு. ‘ஆகிர்’ என்னும் சொல்லுக்கு ‘மற்றொன்று’ எனவும் பொருள் உண்டு. நிலையற்ற இம்மை (இந்த உலக) வாழ்க்கைக்கு அடுத்து வருவது நிலையான மறுமை (மறு உலக) வாழ்வு. ஆகவே இம்மைக்கு அடுத்தாக வரும் மறுமையை ‘ஆகிர்’ என்ற சொல்லால் குறிப்பர். மறுமையைக் குறிக்கப் பயன்படும் ‘ஆகிரத்’ என்னும் சொல் ‘ஆகிர்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

        இம்மையை ‘தாருல் ஃபனா’ அல்லது ‘தாருத்துன்யா’ என்றும் மறுமையை ‘தாருல் பகா’ என்றும் குறிப்பிடுவர். அல்லாஹ் தான் மனிதனைப் படைத்தான். அவனே மனிதனை மரணிக்கவும் செய்கின்றான். மரணித்தவர்கள் அனைவரையும்  அவனே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புகின்றான். அல்லாஹ்வே வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன். அவனே ஒவ்வொரு உயிரையும்  இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என அதற்குரிய தவணையையும் நிர்ணயிக்கின்றான். நிர்ணயக்கப்பட்ட இத் தவணையினின்றும் ஒரு நொடி முன்பாகவோ, பின்பாகவோ யாரும் இறப்பதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீர வேண்டும்.

        “பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே நாம் உங்களைச் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்." (20:55)

        ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (3:185)

மரணம் :

        மரணம் இரண்டு வகைப்படும். (1) மெளத்துல் இல்திரார் (ஹகீகிய்யி) (2) மெளத்துல் இக்தியார் (இறாதிய்யி) எனப்படும்.

(1.)மெளத்துல் இல்திரார் :

உடலை விட்டு உயிர் நீங்கி விடும் இயற்கை மரணம். இது சாதாரணமாக அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் இம்மை வாழ்வில் முடிவு ஆகும்.

(2.)மெளத்துல் இக்தியார் :

        “மரணத்திற்கு முன்னரே நீங்கள் மரணித்து கொள்ளுங்கள்.” எனும் நபிமொழிக்கிணங்க வாழ்ந்து மனத்தில் இச்சைகளுக்கு அடிமையாகாது. மன இச்சைகளை மரிக்கச் செய்து இதயத்தை உயிர்ப்பித்து உலகச் சம்பந்தங்களிலிருந்து பிரிந்து மரணித்தவர்களைப் போல் பற்றற்று வாழ்வர். இதுவும் ஒருவரை மரணமாகவே கருதப்படும். இந்நிலை “மெளத்துன் நப்ஸ், ஹயாத்துல் கல்பு” எனப்படும்.

மரண விளக்கம் :

        அல்லாஹ் உலகை ஆன்ம உலகம் (ஆலமுல் அர்வாஹ்) என்றும், ஜடஉலகம் (ஆலமுல் அஜ்ஸாம்) என்றும் இருவகையாக அமைத்து, ஆன்ம உலகமாகிய மறுமைக்கு வேண்டிய சாதனங்களைத் தேடிக் கொள்ளும் இடமாக இம்மையை அமைத்துள்ளான். இம்மையின் வாழ்வை ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலமாகவும் இறைவன் நிர்ணயித்துள்ளான். அக்கால வரையறை கழிந்து இம்மையின் வாழ்வு முடிவது (அஜல்) மரணம் எனப்படும். ஒவ்வொருவருக்கும்  குறிப்பிட்ட இக்கால வரையறையினின்றும் ஒரு விநாடியும் அதிகரிப்பதோ, குறைவதோ கிடையாது. குறிப்பிட்ட இத்தவணைக் காலம் வரும் பொழுது உடலினின்றும் உயிர் பிரிக்கப்படுகிறது. நல்லவராயின் அவரது ஆன்மா சுகமான இடங்களிலும், கெட்டவனாயின் அவனது உயிர் துயருற்ற இடங்களிலும் பிரதிபலன்கள் அளிக்கப்படும். இம்மை வாழ்வின் இறுதியாகவும், மறுமை வாழ்வின் தொடக்கமாகவும் மரணம் அமைந்துள்ளது.

        அம்ருப்னு ஆஸ் (ரழி) அவர்களின் மரணத் தறுவாயில் “நீங்கள் அடையும் வேதனை எத்தகையது? என அவர்களிடம் வினவிய போது, ‘தன்னுடைய தோளில் ‘ரள்வா’ என்னும் மலை சுமத்தப்பட்டிருப்பது போன்றும், தன்னுடைய ஜீவன் ஊசித்துவாரத்திற்குள் நுழைந்து இழுக்கப்படுவது போன்றும் வானமும் புவியும் ஒன்றோடொன்று உராயும் தருணத்தே, தான் அவற்றிற்கிடையே அகப்பட்டு நசுக்கப்படுவது போன்றும் இருந்தது” என்று கூறியதாக அவரின் மைந்தர் குறிப்பிட்டுள்ளார்.

        கஃபு (ரழி) அவர்கள் மரணத்தின் துன்பத்தைப் பற்றிக் குறிப்பிடுங்கால் “ஒரு முள் மரத்தின் கொப்பை ஒருவனின் வயிற்றுக்குள் விட்டு அதனை வேகமாக இழுக்கும் போது அதன் ஒரு பாதி வயிற்றினுள்ளும், மறு பாதி வயிற்றைக் கிழித்துக் கொண்டும் கையிலும் வந்தால், அம்மனிதன் எத்தகைய துன்பத்தை அடைவானோ அதற்கு நிகரான  துன்பம்” எனக் கூறியுள்ளார்.

        மரணமாகிய மீளாப் பயணத்தை அல்லாஹ் மனிதனுக்கு விதித்திருக்கவில்லை யானால் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்னும் எண்ணமே யாருக்கும் வராது. “நன்னடத்தை உடையோர் எவரென்று சோதிக்கும் பொருட்டே அல்லாஹ் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான்.” (67:2)

        மரணத்தை விலக்கச் சக்தி பெற்றோர் எவரும் இல்லை. “நீங்கள் தகர்த்தெறிய முடியாத கடினமான கோட்டையினுள் அல்லது வேறு எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும்” (4:78) என்று அல்லாஹ் எச்சரிகின்றான். அனைத்துயிர்கட்கும் மரணத்தை விதியாக்கியவன் அவன்.

இறப்பிற்கும் வயதிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இறப்புக்கும் நோய்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஒரு நூறாண்டு வயதடைந்தவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க, இரு தினங்களுக்கு  முன் பிறந்த குழந்தை இறப்பெய்தி விடலாம். மரணப் படுக்கையில் துன்புறும் நோயாளி இருக்க இளைஞர்கள் இறப்பெய்தி விடுகின்றனர். இவையெல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட காலம் வரை மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதைப் புலப்படுத்துகின்றன.

மலக்குல் மெளத் :

        மனிதர்களின் உயிரை வாங்குவதற்கு அல்லாஹ் ‘மலக்குல் மெளத்’ என்னும் வானவரை நியமித்துள்ளான். அவரே உயிரைக் கைப்பற்றுகின்றார். அவர் பெயர் இஸ்ராயீல் ஆகும்.

கப்று - மண்ணறை :

        மரணம் அடைந்த மனிதனை அடக்கம் செய்யப்படும் புதைகுழி ‘கப்று’ எனப்படும். இம்மையின் கடைசி இடமாகவும், மறுமையின் முதல் படியாகவும் மண்ணறை அமைந்துள்ளது. “மரணம் எய்தி மண்ணறையைச் சந்திக்கும் வரையிலும் பொருளைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற உலக ஆசையானது மறுமையைப் பற்றிச் சிந்திக்க விடாமல் மனிதனை மறக்கடித்து விடுகின்றது.”(102:1,2) என்னும் இறைவசனத்தில் அல்லாஹ் ‘கப்று’ பற்றிக் குறிப்பிடுகின்றான். எவர் இறைவனின் ஏவல், விலக்கலைப் பேணி நடந்தாரோ அவருக்கு கப்று “சுவனத்துப் பூங்கா”வைப் போன்று அமையும். எவன் மறுமையை மறந்து அதற்குரிய நற்செயல்களைச் செய்யாது இம்மை வாழ்வில் மயங்கி, பொருளாசையும் தீய குணங்களும் கொண்டு, தீய வழியில் சென்று மனக்கவலைகளோடும், மனக்குறைகளோடும் மண்ணறையை அடைகின்றானோ அவனுக்கு கப்றின் வாழ்க்கை நரகப் படுகுழியாக அமையும். இதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கப்றானது சுவனப் பூங்காக்களில் ஒன்றாக இருக்கும். அல்லது நரகத்தின் பயங்கர கிடங்குகளில் ஒன்றாக இருக்கும்” என இயம்பியுள்ளார்கள்.

        ‘கப்று’ என்பது மனிதன் இறுதி நாளை நோக்கிச் செல்லும் பயணத்தின் இடையே தங்கிச் செல்லும் முதல் இடமாகும். அச்சத்திரத்தில் நிகழும் சோதனைகளிலிருந்து ஒருவன் மீட்சி பெற்றால், அதற்குப் பின்னால் ஏற்படும் சோதனைகளிலும் அவன் வெற்றி பெறுவான்.

முன்கர் - நகீர் :

        மரித்தவர்களை மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்ததும், முன்கர் - நகீர் என்னும் இரு மலக்குகள் கொடூரமான தோற்றத்துடன் அன்னாரின் முன் தோன்றி, “உன்னைப் படைத்த இறைவன் (றப்பு) யார்?” “உனக்கு நேர்வழி காட்ட வந்த இறைத்தூதர் யார்?” “உனது மார்க்கம் எது?” என்னும் வினாக்களை கேட்பார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க வாழ்ந்து மரித்த நல்லடியாராயின் அவர் அவ்வினாக்களுக்குத் தம்முடைய இறைவன், “அல்லாஹ்” என்றும், நபி, “முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,” என்றும், தன்னுடைய மார்க்கம், “இஸ்லாம்” என்றும் விடையளிப்பார். அல்லாஹ்வின் கட்டளைப்படி  செவ்வனே ஒழுகியிரா திருப்பின், இரு விழி சிவந்து கனற்பொறி தெறிக்க வரும் அவ்வானவர்களின் கேள்விகளுக்கு மறு மொழி கொடுத்திட அறியாராய்த் துன்புற்றுப் பரிதவிப்பார். கியாமத் நாள் வரை கப்ரின் வாழ்க்கை நீடிக்கிறது.

        மண்ணிலிருந்து அல்லாஹ் மனிதனைப் படைத்தான். சில காலம் பூமியில் வசித்த பின் அவனே மரணிக்கவும் செய்கின்றான். மீண்டும் அப்பூமியிலிருந்தே மனிதனை உயிர்ப்பிக்கின்றான்.  மறுமை நாளில் இறந்தவர் அனைவரையும் எழுப்பிக் கேள்வி கணக்குக் கேட்கப்படும். விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியதேயாகும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்நாளில் சமாதிகளில் புதைந்து கிடப்போரை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான். (22:7) அவர்களின் செயல்கள் பற்றி வினவப்படும். இவ்வாறு அவர்களிடம் கேள்வி கணக்குக் கேட்கும் போது யாதொரு ஆத்மாவுக்கும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. அவர்கள் செய்த நன்மையோ, தீமையோ ஒரு கடுகளவு ஆயினும் அதனையும் அல்லாஹ் மிக நுட்பமாக கணக்கிட்டு நல்ல அமல்கள் புரிந்தோருக்குப் பரிசும், தீய கருமங்கள் செய்தோருக்கு தண்டனையும் வழங்குவான்.

அஃமால் நாமா :

        அஃமால் நாமா என்பது ஒவ்வொருவரும் இப்பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த அனைத்துக் கருமங்களையும் பற்றி எழுதப்பட்டுள்ள செயல் பதிவேடாகும். உலகில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களும் அம்மறுமை நாளில் அவர்களுக்கு மீண்டும் நினைவில் வந்து விடும். அல்லாஹ் ஒவ்வொருவரையும் கியாமத் நாளில் தனித்தனியே விசாரணை செய்து நன்மை தீமைகளை (மீஸான்) தராசிலிட்டு நிறுத்துப் பார்க்கின்றான்.

        “ஒவ்வொரு மனிதனின் செயல்கள் பற்றிய விரிவான தினசரிக் குறிப்புக்கள் அவனுடைய கழுத்தில் மாட்டப்படும். மறுமை நாளில் அது அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துத் தரப்படும். அதனை அவன் விரித்துப் பார்ப்பான் (17:13) அப்போது அவனை நோக்கி இன்று உன் கணக்கை நீயே படித்துப் பார்த்துக் கொள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (17:14)

        உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரின் நன்மை தீமைகளைக் கணக்கிடுவதற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கிறாமன் காத்திபீன் என்னும் இரு வானவர்கள் அவரவர் எழுதி வைத்துள்ள நன்மை தீமை குறித்த செயல் ஏடுகளைத் தர, அவற்றை அல்லாஹ் மீஸான் தராசிலிட்டு நிறுக்கின்றான். யாருடைய நன்மைத் தட்டு கனத்திருக்கிறதோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பட்டோலையை அவரது வலக்கரத்தில் கொடுக்கின்றான். (84:7) அவ்வாறு வலக்கரத்தில் பட்டோலை கொடுக்கப்பட்டவர்கள் மிக இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு (84:8) மிகுந்த மகிழ்ச்சியுடன் சுவனபதியிலுள்ள தன்னுடைய குடும்பத்தாரிடம் செல்வர். (84:9)

        மறுமை நாளில் கேள்வி கணக்குக் கேட்கும் போது யாருடைய தீமைத்தட்டு கனத்திருக்குமோ அவருக்கு இடது கையில் முதுகுப்புறமாக அவரது பட்டோலை கொடுக்கப்படும். அவ்வாறு முதுகுப் புறமாகப் பட்டோலை கொடுக்கப்பட்ட மனிதன் தனக்குக் கேடு தான் என்று சப்தமிட்டுக் கொண்டே சஞ்சலத்துடன் நரகில் நுழைவான். (84:10-12)

மீஸான் - தராசு :

        கியாமத் நாளில் அல்லாஹ் ஒவ்வொருவர் செய்த நன்மை தீமைகளின் நிறையை மீஸான் என்னும் தராசிலிட்டு நிறுத்து அவற்றிற்குத் தக்க கூலிகளைத் தருகின்றான். அத்தராசு ஒரு துலாக் கோலும், ஒரு நாக்கும், இரு பெரிய தட்டுக்களும் உடையது. ஒரு தட்டு சுவனத்தைச் சார்ந்தும், மற்றொரு தட்டு நரகத்தைச் சார்ந்தும் நிற்கும். அத் தராசை ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம் கரத்தில் கொண்டு அதன் நாக்கை கவனத்துடன் பார்த்து கொண்டிருப்பார்கள். சாட்சியத்திற்காக மீக்காயீல் (அலை) அவர்கள் அருகில் நின்று கொண்டிருப்பார்கள். அல்லாஹ் இது பற்றி தன் அருள் மறையில், “மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் யாதொன்றையும் குறைத்தோ கூட்டியோ அநியாயம் செய்யப்பட மாட்டாது. நன்மையோ தீமையோ ஒரு கடுகின் அளவாயிருந்தாலும் அதனையும் நிறுக்கக் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும், வேறொருவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை” என்று குறிப்பிடுகின்றான்.

ஸிராத் பாலம் :

        ஸிராத்துல் முஸ்தகீம் எனப்படும் பாலம் ஜஹன்னம் என்னும் நரகத்தின் மேல் அமைந்துள்ளது. உரோமத்தைக் காட்டிலும் மெல்லியதாகவும், வாளைக்காட்டிலும் கூர்மையாகவும் இருக்கும். இதனை மக்கள் அனைவரும் கடந்து சென்று அக்கரையிலுள்ள சுவனத்தில் சேர்தல் வேண்டும். எவர் இவ் உலகத்தில் “ஸிராத்துல் முஸ்தகீம்” எனும் நேரான வழியில் நடந்தாரோ அவரே இப்பாலத்தை இலகுவாய்க் கடந்து செல்வார். இப்பூமியில் நேர்வழியைப் பின்பற்றி நடவாதவன் இப்பாலத்தைக் கடக்க இயலாமல் நரகில் வீழ்வான்.

        ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் வணக்க ஒழுக்கங்களுக்கேற்ப இப் பாலத்தில் செல்வார்கள். சிலர் பலவீனத்தால் தத்தளித்து உடலில் காயம்பட்டு நடப்பர். சில முஸ்லிம்கள் இறைவன் விதிப்படி நடக்காத காரணத்தால் கால் சறுகி, அந்த ஜஹன்னமாகிய நரகில் வீழ்ந்து தமது குற்றங்களுக்குரிய தண்டனையைப் பெற்று பின்னர் மீட்சி பெறுவர். அப்பாலத்தை ஈமானில்லாதவர் அறவே கடக்க முடியாமல் முகங்கவிழ எரி நரகில் வீழ்ந்து முடிவற்ற வேதனையை எய்துவர். (அல் ஹதீஸ்)

ஹெளலுல் கெளதர் :

        சுவனத்து ஆறு அல்லது தடாகம் ‘கெளதர்’ எனப்படும். சுவனத்தின் ஆறுகள் பற்றி நபிகள் பெருமானார் (ஸல்) குறிப்பிடும் போது, அவற்றின் கரைகளில் நாற்காலிகளும், கூடாரங்களும் இருக்கும். அவற்றில் ஓடும் தண்ணீர் மிகத் தெளிவாகவும், தேனைக்காட்டிலும் இனிமையுடையதாகவும், நுரையைக் காட்டிலும் மென்மை மிக்கதாகவும் இருக்கும். இவ்வுலகிலுள்ள இனிமை மிக்க பொருட்களை விட இனிமை மிக்கதாயிருக்கும். ஒவ்வொரு ஆற்றின் அகலமும் 500 ஆண்டுத் தொலைவு கொண்டது. இதன் நீரின் நிறம் பாலைக்காட்டிலும் வெண்மைமிக்கது. இதன் மண் இனிய கஸ்தூரியைப் போன்றது. இதில் நீரருந்தும் கோப்பைகள் விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக்கன. இந் நீரை ஒரு முறை அருந்தியவருக்கு பின்னர் எப்போதும் தாகமே தோன்றாது. இதில் தம்முடைய உம்மத்துக்கள் அதிகம் பேர் நீர் அருந்துவர். இதுவே தம்முடைய தடாகம் என அண்ணலார் கூறியுள்ளார்கள். மிஃராஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த கெளதரின் அழகைக் கண்டு ஆச்சரியமுற்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் வினவிய போது அவர்கள், இறைவன் உமக்கு வழங்கியுள்ள கெளதர் இதுதான் எனக்குறிப்பிட்டனர்.

        மறுமை நாளில் யாவரும் ஒன்று திரட்டப்பட்டுக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் மஹ்ஷர் மைதானத்தின் அருகில் அமைந்திருக்கும் இத்தடாகத்திற்கு ஹெளலுல் கெளதர் எனபடும். இத் தடாகத்திற்கு சுவனத்தின் கெளதர் நதியிலிருந்து நீர் பாய்ந்து கொண்டிருக்கும். மாந்தர் அனைவரும் விசாரணைக்காக நின்று கொண்டிருக்கும் மறுமை நாளில் கடுமையான சூரிய வெப்பத்தால் ஒவ்வொருவருக்கும் தாங்க முடியாத தண்ணீர்த் தாகம் ஏற்படும். தாகத்தால் தவித்துத் தம்மிடம் ஓடிவரும் தம் உம்மத்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) இந்நீரைப் புகட்டுவார்கள். நற்பேறு இல்லாதவர்கள், மாபாதக பாவங்கள் செய்தோர் இந்நீரை அருந்த அனுமதிக்கப் படாது தள்ளப்படுவர்.

ஷஃபாஅத் :

        மறுமையில் ஒவ்வொருவரிடத்தும் அவரவர் செயல்கள் பற்றிக் கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு, அவற்றிற்கு தக்க கூலி கொடுக்கப்படும். அழிந்து விடக் கூடிய அற்ப இன்பங்களை நிலையெனக் கருதி, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிப்பட்டு நடக்காத குற்றவாளிகளான தன்னுடைய உம்மத்தவர்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய நரக வாழ்க்கையினின்றும் அவர்கள் மீட்சி பெறுவதற்கு நபிகளார் அல்லாஹ்விடத்தில் மன்றாடிப் பரிந்துரை செய்வார்கள். தன்னுடைய உம்மத்தவர்களுக்கு இவ்வாறு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்பு வேண்டிச் செய்யும் பரிந்துரையை ஷஃபாஅத் எனப்படும்.

சுவர்க்கம் :

        அல்லாஹ்வுக்கு பயப்பட வேண்டிய முறையில் பயந்து அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நல்லடியாராகவே இருக்கும்படியும், அவ்வாறே மரிக்கும்படியும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.(3:102) எவர்கள் (ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சுவனபதிகளில் புகுத்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்? (4:122)

அல்லாஹ் தன்னுடைய கட்டளைகட்கிணங்கி வாழ்ந்தவர்களுக்கு சுகம் மிக அளிக்கக் கூடிய சுவனபதியின் வாழ்வையும் சித்தப்படுத்தி வைத்துள்ளான். நிச்சயமாக முஃமின்களுக்கு சுவனபதி உண்டு. அதைக் கிரையப்படுத்துவதற்காக அன்னாரின், உயிரையும் உடைமைகளையும் அல்லாஹ், அவர்களிடம் கிரயத்திற்கு வாங்கினான். இதனால் மறுமையில் சந்தோஷம் பெறத்தக்க  பெரிய இலாபம் உண்டு என்றும் குறிப்பிடுகின்றான்.

        அல்லாஹ் தன்னுடைய அடியானை பொருள் நஷ்டத்தைக் கொண்டும், மனைவி மக்களின் கஷ்டத்தைக் கொண்டும், ஏனையவற்றால் அச்சமூட்டுவது கொண்டும், சில சமயம் பசியினால் பீடிக்கச் செய்தும் சோதிக்கின்றான்.  அது சமயம் மெய்யான அடியான் எதுவரினும் வரட்டும்; அனைத்தும் அல்லாஹ்வின் செயல், அவனே இவை யாவற்றையும் எனக்குத் தந்தருள் புரிந்தவன். மீண்டும் யாவும் அவனிடமே செல்லக் கூடியது. அல்லாஹ் எதைச் செய்தாலும் நான் பொறுமையுடன் சகித்துக் கொள்வேன் எனக் கூறித் தன் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு அவனுக்கு முற்றிலும் பயந்து வாழ்ந்தவர்களை மறுமை நாளில் சுவர்க்கத்தின் பால் கூட்டங்கூட்டமாகக் கொண்டு வரப்படும். அதன் சமீபத்தில் அவர்கள் வரும் சமயம் அதன் வாயில்கள் திறக்கப்பட்டு அதன் காவலர்கள் அவர்களை நோக்கி உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள்! நீங்கள் இதில் நுழைந்து என்றென்றும் இங்கேயே தங்கிவிடுங்கள் என்றும் கூறுவார்கள். (39:73) அதற்கு அச்சுவனவாசிகள், அல்லாஹ்வைப் புகழ்ந்து அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சுவனபதியில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான் என்று கூறுவார்கள். (39:74)

        சுகமிக்க சுவனபதியில் சுகமான இருக்கைகளில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். மிகத் தெளிவான ஊற்றுகளின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். அது மிக்க வெண்மையானதாகவும், குடிப்போருக்கும் அது மிக்க இன்பமானதாகவுமிருக்கும். அதில் போதையே இராது. அதனால் அவர்களின் அறிவும் நீங்கி விடாது. அவர்களிடத்தில், கீழ் நோக்கிய அடக்கமான பார்வையையுடைய ஹுருல்ஈன் என்னும் கண்ணழகிகளும் இருப்பார்கள். அவர்களின் நிறம் இலேசான மஞ்சள் வர்ணம் கொண்ட நெருப்புக் கோழியின் முட்டை போன்றதாகும். (37: 43-49)

        அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்த நல்லடியார்கள் தாங்கள் திருப்தியடையும் படியான சுகபோகத்தில், மேலான சுவனபதியில் இருப்பார்கள். அதன் கனிகள், இவர்கள் நின்று கொண்டிருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் எந்நிலையிலிருந்தாலும் அவர்களின் கைக்கு எட்டக் கூடிய அளவில் இவர்களை நெருங்கி இருக்கும்.

        மனிதன் அனுபவிக்கும் முழு இன்பத்தின் உச்ச கட்டமே சுவனம் எனப்படும். எந்த இன்பத்திற்குப் பின் துன்பமும் துக்கமும் வராதோ அவ் இன்பவாழ்வே சுவர்க்க வாழ்வு ஆகும்.

எட்டு சுவனபதிகளின் விளக்கம் :

1.

தாருல் குல்து

தண்டனை பெற்று மீண்டவர்கள் பெறும் சுவனம்.

2.

தாருல் மகாம்

ஸதகா, ஜக்காத்து கொடுத்த கொடையாளிகள் பெறும் சுவனம்.

3.

தாருஸ்ஸலாம்

பொறுமையைக் கைக் கொண்டோர் பெறும் சுவனம்.

4.

தாருல் கறார்

சொல்லும் செயலும் ஒத்த உலமாக்கள் பெறும் சுவனம்.

5.

ஜன்னத்துல் அத்னு

தவமென்னும் வணக்கம் செய்தோர் அடையும் சுவனம்.

6.

ஜன்னத்துல் மஃவா

மூவாசைகளையும் வெறுத்த வலிமார்கள் அடையும் சுவனம்.

7.

ஜன்னத்துல் நயீம்

அல்லாஹ்வுக்காக உயிர் துறந்த ஷுஹதாக்கள் பெறும் சுவனம்.

8.

ஜன்னத்துல் பிர்தௌஸ்

தீனின் தூண்டுகோலான நபிமார்கள் பெறும் சுவனம்.

        இவ்வெட்டு சுவனபதிகளுக்கும் அதிபதி ரிள்வான் (அலை) ஆகும்.

        சுவர்க்கவாசிகள் சுவனத்திற்குச் செல்லும் போது அதன் அதிபராகிய ரிள்வான் (அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் “அவர்கள் தாமாகப் போக வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாமாகப் போவதில் பரதேசிகள் போவது போன்று, நீவிர் அழைத்துச் சென்றால் அடிமைகள் போவது போன்றும் ஆகிவிடும். ஆகவே நானே என்னிடமுள்ள மரியாதைகளை அவர்களுக்கு அளித்துச் செல்ல வைப்பேன்” என்று குறிப்பிடுகின்றான்.

        சுவனவாசிகள் அவரவர் உயர்வுக்கு ஏற்ப சுவனபதி்யின் வாயில்களை அடைந்ததும், வானவர்கள் “ஸலாம்” உரைத்து, நீங்கள் பாக்கியவான்கள்; ஆகவே நீங்கள் இதில் என்றென்றும் நிலையாகத் தங்கி விடுங்கள் என வாழ்த்துக் கூறி வரவேற்பார்கள். சுவர்க்கத்தில் ” “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. அதன் வழியாக  நோன்பாளிகள் நுழைவார்கள். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.

நரகம் :

        அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து, அழிந்து போகும் அற்ப இன்பங்களைத் தரும் இம்மை வாழ்வே நிரந்தரமானது எனக் கொண்டு நற்செயல்கள் புரியாது, தீச்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் நரகத்தை ஆயத்தப் படுத்தி வைத்துள்ளான்.

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள். (6:120) என்று அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுவதிலிருந்து பாவத்திற்கு உரியது கொடிய தண்டனை என்பதை உணரலாம்.

மறுமை நாளில் நிராகரித்தோர் யாவரும் கூட்டங்கூட்டமாக நரகத்தின் பால் ஓட்டி வரப்படுவார்கள் அதன் சமீபம் அவர்கள் வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். நரக நெருப்பு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (70:15) அது தோல்களை எரித்து மூளையை உருக்கிவிடும். (70:16) வரம்பு மீறிய அவர்கள் அதில் பல யுகங்கள் தங்குவார்கள். (78:23) அதில் அவர்களுக்குத் தாகம் தோன்றும் போது கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர அவர்கள் அங்கு வேறு எத்தகைய பானத்தையும் குளிர்ச்சியையும் சுகிக்க மாட்டார்கள். (78:24-25) அவர்களுக்கு அளிக்கப்படும் வேதனை ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கையும் இழந்து விடுவார்கள். (43:75)

இத்தகைய எல்லையற்ற வேதனையை நுகர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் நரகத்தின் அதிபதியான மாலிக்கை நோக்கி “மாலிக்கே, உமதிறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடட்டும். எங்களுக்கு விடுதலை கிட்டும் என்று சப்தமிட்டுப் பிதற்றும் போது அதற்கு அவர் இங்கு மரணத்தை நீங்கள் அடைய முடியாது. இவ்வேதனையை அனுபவித்துக் கொண்டே நீங்கள் இருக்க வேண்டியது தான்” என்று கூறுவார். (43:77) அவர்களுக்கு மிகுந்த பசி ஏற்படும் போது அதைத் தீர்க்க அவர்கள் உணவாகப் புசிப்பதெல்லாம் கள்ளி இனங்களைத் தான். மெய்யாகவே அந்த கள்ளி நரகத்தின் மரம் ஆகும். அதன் கிளைகள் பாம்பின் படம் போன்றிருக்கும். அது அவர்களின் பசியை நீக்காது. எனினும் அவற்றையே அவர்கள் புசிப்பார்கள். (37:64,65,66) பருகுவதற்கு கொதித்துக் காய்ந்த சீழ் ஜலமே தரப்படும். நரகிலிருந்து அவர்கள் வேறெங்கும் செல்லவும் இயலாது. செல்லவும் மாட்டார்கள். (37:67,68)

        அவர்கள் உட்கொள்ளும் உணவும், குடிப்பும் மிகவும் அருவருப்பானவை. மேலும் அதிகமான பசியையும் தாகத்தையும் அவை உண்டாக்குமேயன்றி அவற்றைத் தணிக்கா. நரகத்தில் கிடந்து இத்தகைய கொடிய வேதனையை நுகர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் திணறிக் கத்துவார்கள். அவ்வாறு ஒருவர் போடும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. (21:100) அவர்கள் என்றென்றும் அக் கொடு நரகில் தங்கி விடுவார்கள். அவர்களை காப்பாற்றுவோரையும் அத்துன்பத்திலிருந்து மீட்டு, உதவி செய்வோரையும் அவர்கள் அங்கு காணமாட்டார்கள். நரகத்தில் அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் பொசுக்கும் நாளில் “எங்களுடைய கேடே, நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா? (33:65-66) அவ்வாறு  வழிப்பட்டிருந்தால் இத்தகைய வேதனை எங்களுக்குக் கிடைத்திராதே. “எங்களுக்கு  நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம்” எனக் கதறி அழுவார்கள்.

        அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்த பாவிகளான மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹ் நரகைப் படைத்திருக்கின்றான். இதயம் இருந்தும் இவ்வுலகிலுள்ள அத்தாட்சிகளைக் காணாமலும் செவிகள் இருந்தும் நல்லுபதேசங்களைச் செவியுறாமலும் வாழ்ந்த மனிதர்களுக்கு அல்லாஹ் நரக வேதனையைச் சித்தப் படுத்தி வைத்துள்ளான். இவர்கள் விலங்குகளை விட கேவலமானவர்கள். (7:179) என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

        இறைகட்டளைகளைப் புறக்கணித்த பாவிகளுக்காகத் தயார் செய்யப்பட்ட துன்பமிக்க இடமே நரகம் ஆகும். அது நெருப்பினால் நிரப்பப்பட்ட ஒரு பெரும் கிடங்கு. அதற்குள் நெருப்பால் படைக்கப்பட்ட, உலகில் எங்கும் காணவியலாத மிக பயங்கரமான உயிரினங்கள் காணப்படும். அங்கிருக்கும் விரிப்புகளும் போர்வைகளும் நெருப்பினால் ஆனவை. நரகவாசிகள் அங்கு அடைவதெல்லாம் அளவற்ற துன்பமேயாகும்.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musa Nabi

நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.