இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 6)
அண்டை வீட்டார் உறவு
அண்டை வீட்டார்
இஸ்லாத்தின் இலட்சியமான உலக அமைதியைக் காண குடும்பத்திலிருந்து அமைதியை சமுதாயத்திற்குப் பரப்ப வேண்டும். பல குடும்பங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு குடும்பத்திற்கும், சார்ந்திருக்கும் அடுத்த குடும்பத்திற்கு மிடையே உறவைப் பலப் படுத்த வேண்டும். அண்டை வீட்டினரிடையே உள்ள கடமைகள் தான் குடும்பங்களை இணைக்கும் பாலமாக, சங்கிலியாக உள்ளது. அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். முதலாவது உறவுக்காரராக உள்ள முஸ்லிம்; இரண்டாவது உறவு இல்லாத முஸ்லிம்; மூன்றாவதாக முஸ்லிம் அல்லாதார். இஸ்லாமியச் சட்டப்படி மூன்று வகையினருக்குமே மூன்று விதக் கடமைகளுள்ளன. அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், சொந்தக்காரராக இருந்தாலும், பந்தமில்லாதவராக இருந்தாலும் அவர்களுடன் நேசம் கொண்டு ஒத்து வாழ வேண்டும் என்று தான் இஸ்லாம் இயம்புகிறது. இப்படி நேச உறவு இருந்தால் ஒரு ஊரில் வகுப்புக் கலவரமோ, ஒரு நாட்டில் இனக்கலவரமோ, அண்டை நாடுகளுக்கிடையே போரோ நடக்காது.
திருமறையில் அண்டை வீட்டார்
திருமறையில், “....... தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) ….” (4:36) என்று கூறி பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், ஏழைகளுக்கு அடுத்தபடியாக அந்நியரான உறவினர்கள், உறவல்லாதவர்கள் இவர்களுடன் நன்மை செய்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இன்னும் “தன் அண்டை வீட்டாருக்கு நல்லவராய் இருப்பவரே இறைவனிடம் அனைவரினும் மேலானவர்; என்றும், அண்டை வீட்டாருக்கு நன்மை புரிபவர் தான் உண்மை விசுவாசி; என்றும், நீர் நன்மை செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் ஒருவர் நல்லவராவார்; அன்றி நீர் தீமை செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் ஒருவர் தீயவராவர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் அண்டை வீட்டுக்காரருடன் நடந்து கொள்வது பற்றி கூறியுள்ளார்கள். அண்டை வீட்டினர் ஒருவருக் கொருவர் நன்மை புரிபவராகவும், தீமையை விட்டும் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பு
ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் வழங்கிக் கொள்ள வேண்டும். கறி சமைக்கும் போது அண்டை வீட்டாரையும் கருத்தில் கொண்டு குழம்பை (நீர் ஊற்றி) பெருக்கிக் கொள்வீர்களாக” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அற்பப் பொருளாக இருந்தாலும் அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பு நல்கும் போது அன்பும், பாசமும் வளரும். சாந்தியும், சமாதானமும் நிலவும். “அண்டை வீட்டார் அளித்த எந்தப் பொருளையும் அற்பமானது என்று கருதக்கூடாது; அது ஒரு ஆட்டுக்குளம்பாயிருப்பினும் சரியே!” என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். வீட்டின் இருபுறம் இரண்டு வீட்டார்கள் இருக்கின்றனர். ஆனால் தமது தேவை போக மேல் மிச்சமாக இருக்கும் அன்பளிப்பு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால், ‘அவ்விருவரில் உமக்கு மிகவும் சமீபத்திலுள்ள வாசல் உடையவருக்கு அனுப்புவீராக!’ என்றும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
அண்டை வீட்டாரை ஆதரிப்பீராக!
ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்களிடம், “யாரசூலல்லாஹ்! ஒரு பெண் தன்னுடைய ஏராளமான தொழுகையாலும், நோன்புகளாலும், தர்மத்தாலும் பிரபலமாகி இருக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தனது அண்டை வீட்டார்களை துன்புறுத்துகின்றாள்.” என்று கூறிய போது, “அவள் (இதன் காரணமாக) நரகத்திலிருப்பாள்” என்று எச்சரித்துள்ளார்கள். “ஒருவருடைய கரங்களை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறுகிற வரையில் அவன் உண்மை விசுவாசியாக மாட்டான்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பல தடவைகள் பெருமானார் (ஸல்) அவர்கள், “அண்டை வீட்டார் உம்மிடம் ஆதரவு வேண்டினால் அவரை ஆதரிப்பீராக! உதவி கோரினால் உதவி புரிவீராக! அவருக்குத் தேவைப் பட்டால் உபகாரம் செய்வீராக! அவர் நோயுற்றால் சென்று விசாரிப்பீராக! இன்னும் அவர் மரணமடைந்தால் அவர் ஜனாஸாவுக்குப் பின் செல்வீராக! அவருக்கு நன்மை ஏற்பட்டால் மனமார வாழ்த்துவீராக! அவருக்கு துன்பம் ஏதும் ஏற்பட்டால், அவரைத் தேற்றுவீராக! அவரை விட்டும் காற்றைத் தடுக்கும் முறையில் (உயரமான) கட்டிடம் எழுப்பாதிருப்பீராக! இன்னும் அவரைத் தொந்தரவு செய்யாதிருப்பீராக!
நீர் ஒரு பழம் வாங்கும் போது அவருக்கும் (ஒரு துண்டு) அளிப்பீராக! நீர் (அவ்வாறு) செய்ய இயலாவிட்டால், அவற்றை உமது வீட்டிற்குள் இரகசியமாகக் கொண்டு செல்வீராக! மேலும் அவருடைய குழந்தைகள் பெருமூச்சு விடும் படி உமது குழந்தைகள் அந்த பழத்துடன் வெளியேறாதிருக்கச் செய்வீராக! என்று எடுத்துரைத்தார்கள்.
உலகில் சாந்தி சமாதானம் நிலவ
அண்டை என்றுரைக்கும் போது ஒருவருடைய வீட்டை ஒட்டியுள்ள வீட்டாரையும், ஒரு கிராமத்திற்கு அடுத்துள்ள கிராமத்தையும், ஒரு மாவட்டத்திற்கு அடுத்துள்ள மாவட்டத்தையும், ஒரு மாநிலத்தை அடுத்துள்ள மாநிலத்தையும், ஒரு நாட்டை அடுத்துள்ள நாட்டையும் குறிக்கும். எனவே அண்டை வீட்டில் துவங்கும் நல்லுறவு அடுத்தடுத்த நாடுகளுக்கும் இடையே சுமூக நிலையை உறுவாக்கி உலகில் சாந்தி, சமாதானத்தை நிலவ வழிகோலும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.