முர்ஜிகள்
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-7)
மூன்றாவது கலீபாவாகிய ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்களைக் கொன்றுவிட்ட குழப்பக்காரர்களே நான்காவது கலீபாவாக ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களைப் பிரகடனம் செய்தார்களல்லவா, இதற்கு சாதக பாதகமாக இரு பிரிவினராக முஸ்லிம்கள் பிரிந்தனர். இந்தப் பிரிவின் மூலம் இரு தரப்பினருக்குமிடையே ஜமல் யுத்தம், சிப்பீன் யுத்தம், நஹர்வான் யுத்தம் என்று மூன்று போர்களே நடைபெற்று விட்டன.
இந்த பகையின் காரணமாக ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களின் தரப்பைச் சார்ந்தவர்களாகச் சொல்லிக் கொண்டவர்கள், முந்திய மூன்று கலிபாக்களையும், அவர்களை ஆதரித்து நின்ற நாயகத் தோழர்களையும், ‘காபிர்’கள் என்று கூறினர். இதற்குப் பதிலாக ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காபிர்கள் என்று அடுத்த தரப்பினர் கூறலாயினர். அமீர் முஆவியாவின உமையாக்களை காபிர்கள் என்பதில் மட்டும் இந்த இரு தரப்பினரும் ஒன்றுபட்டுக் கூறினர்.
இதன் விளைவாக இந்த இரு தரப்பையும் சேராத ஒரு பிரிவினர் தோன்றினர். எண்ணிக்கையில் மிகமிகக் குறைவான இவர்களை முர்ஜி பிரிவினர் என்று அழைக்கப் பட்டது.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
என்ற கலிமா சொல்லியவர்களெல்லாம் முஸ்லிம்களே. இந்த முஸ்லிம்களிடையே ஒருவரையொருவர் காபிர் என்று தீர்ப்புக் கூற முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் தம் செயலுக்காக இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் முடிவுக்குக் காத்திருக்க வேண்டியவர்கள். இந் நிலையில் முஸ்லிம்களிடையே ஒருவரையொருவர் காபிர் என்று தீர்ப்புக் கூற யாருக்கும் உரிமையில்லை. இந்தத் தீர்ப்புக்குரியவன் இறைவனேயாகும். இத்தகைய விஷயங்களை இறைவனிடமே விட்டு விட்டு, நம் செயல்களில் களங்கமேற்படாமல் காத்துக் கொள்வோம் என்று முர்ஜிகள் கூறலாயினர். முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பிரிவுகளும் பிளவுகளும் தோன்றச் செய்து இதனால் யுத்தகளத்தில் அழிந்து போகாமல் தடுக்கவே முயன்றனர்.
துரதிஷ்டவசமாக இவர்களும் இரு பிரிவாகப் பிரிந்தனர். உள்ளத்தால் ஒப்புக்கொண்டு விட்டாலே ஈமான் பூர்த்தியாகி விடும் என்றனர் ஒரு சாரார். உள்ளத்தால் ஒப்புக்கொண்டு விட்டால் மட்டும் போதாது, நாவினாலும் அதைக் கூற வேண்டுல் என்றனர் மற்றொரு ஊரார். இந்த இரு பிரிவினரும் ஈமானின் பூரணத்துவத்திற்குச் செயலின் முக்கியத்துவத்தை இணைக்கவில்லை. மன்னிக்கப் படாத குற்றமென்று குர்ஆன் குறிப்பிடும் பாபத்தைத் தவிர மற்ற பாபங்களைச் செய்தவர்கள் ஈமானுடையவர்களானால் இறுதித் தீர்ப்பு நாளில் மன்னிப்பைப் பெறுவார்கள். ஈமான் என்பது குறைவதோ கூடுவதோ அல்ல என்று கூறி இந்த பிரிவினரும் ஈமானுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கினர். வெறும் நம்பிக்கையோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனாக முடியாது, அதற்கேற்ற நடத்தையும் வேண்டும் என்பதை இவர்கள் முக்கியமாகக் கருதவில்லையாதலால் நடத்தையில் குறைபாடுடையவர்களும் ஈமானுடையவர்களாக இப் பிரிவில் இணைந்தனர். இவர்கள் கூட்டம் பெருகியது.
உமையா கலீபாக்களையும் இவர்கள் எதிர்க்கவில்லை; அப்பாஸிய கலீபாக்களையும் எதிர்க்கவில்லை, கலீபாவாக இருந்த மாமூன் ரஷீத் இவர்களின் கொள்கைகளை ஆதரித்தார். இவர்களின் பிரதானக் கொள்கைகளில் பெரும் பாலானவற்றை சுன்னத் ஜமாஅத்தார் ஏற்றுக் கொண்டனர். இதனால் இந்த முர்ஜி பிரிவினரையே சுன்னத் ஜமாஅத்து தன்னுள் இணையச் செய்து விட்டது.
_____________________________________________________________________________________________________
இன்ஷா அல்லாஹ் தொடர் - 8 “வஹ்ஹாபிகள்” மற்றும் “ஸனூஸிகள்” விரைவில்... தொடரும்…
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.