113. சூரத்துல் ஃபலக்(அதிகாலை)
மக்கீ, வசனங்கள்: 5
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ:1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
113:1 قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ
113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2 مِنْ شَرِّ مَا خَلَقَۙ
113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3 وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ
113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:4 وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ
113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5
113:5 وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
114. சூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1114:1 قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 مَلِكِ النَّاسِۙ
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;
114:3 اِلٰهِ النَّاسِۙ
114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.
114:4 ۙ الْخَـنَّاسِ ۙ مِنْ شَرِّ الْوَسْوَاسِ
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
பாதுகாப்பு தேடப்படும் இரண்டு அத்தியாயங்கள்
சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ்
திருக்குர்ஆனில் இறுதியாக இடம் பெற்றுள்ள இவ்விரு அத்தியாயங்களுக்கும் பெயரே "பாதுகாப்பு தேடப்படும் இரண்டு அத்தியாயங்கள்" என்பதாகும். இவ்விரு அத்தியாயங்களை அல்லாஹுத் தஆலா நமக்கு அனைத்து தீங்குகளிலிருந்து பாதுகாப்பு தேடும் துஆவாகவும், நோய் நிவாரணி ஆகவும் அருளியுள்ளான். இவ்விரு அத்தியாயங்களும் அருளப்பட்ட காரணம் என்னவெனில்,
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மீது பொறாமை கொண்ட யூதன் லபீத் இப்னு அஃஸம் என்பவன், நபியவர்களுக்கு தீங்கு செய்யநாடி அவர்களிடம் பணிவிடை செய்த யூதச்சிறுவன் மூலம் அண்ணலார் பயன்படுத்தும் சீப்பை பெற்று, அதன் பற்களையும் அதில் சிக்கியுள்ள முடிகளையும் கொண்டு, தன்னுடைய பெண்மக்களின் மூலம் மந்திரித்து ஊதி ஆண் ஈச்சமரத்தின் பாளையில் வைத்து கட்டி சூனியம் செய்து ஒரு கிணற்றிற்குள் வைத்து விட்டான்.
இதன் காரணமாக, நபியவர்கள் கடுமையான உடல் வலி ஏற்பட்டு சிரமப்பட்டார்கள். தாம் செய்யாத ஒன்றை தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறைவனிடம் இதிலிருந்து நிவாரணம் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். வல்ல ரஹ்மான் ஜிப்ரீல்(அலை) மூலம் இவ்விரு அத்தியாயங்களையும் இறக்கியருளி நபியவர்களுக்கு நிவாரணம் அளித்தான். இந்த இரு சூராக்களிலும் சேர்த்து (5+6=)11 ஆயத்து(வசனங்)கள் உள்ளன. ஒவ்வொரு ஆயத்தையும் ஓதும்போது, 11 முடிச்சுகள் போட்டு சூனியம் செய்யப்பட்ட 11 கட்டுகளும் அவிழ்ந்து நபியவர்களுக்கு பூரண சுகம் கிடைத்தது.
தன்நிகரற்ற அத்தியாயம்:
இன்றிரவு என் மீது இறக்கப்பட்ட ஆயத்துகளை நீர் அறிவீரா? அவ்வாயத்துகள் நிகரற்றவை. இதற்கு முன் இதுபோன்ற ஆயத்துகள் காணப்படவில்லை, அவை ''குல்அவூது பிரப்பில் ஃபலக்சூராவும், குல் அவூது பிரப்பின்னாஸ் சூராவும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பத்இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
உக்பதிப்னு ஆமிரே! அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதும், விரைவில் அவனிடம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான, ''குல் அவூது பிரப்பில் ஃபலக்'' சூராவைவிட வேறொரு சூராவை நீர் ஓதிட முடியாது. ஆகவே, உம்மால் இயன்ற அளவு அதைத் தொழுகையில் ஓத முடிந்தால் ஓதி வருவீராக!'' என்று தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
பாதுகாப்பு அரண்:
உக்பத் இப்னு ஆமிர் (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் 'ஜுஹ்ஃபா' 'அப்வா' என்ற இடங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தேன், அப்போது திடீரென சூறாவளிக் காற்றும் கடும் இருளும் எங்களைச் சூழ்ந்து கொண்டன. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ''குல் அவூது பிரப்பில் ஃபலக்'', ''குல் அவூது பிரப்பின்னாஸ்'' ஆகிய இரு சூராக்களை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடத் தொடங்கினார்கள். மேலும், உக்பாவே, நீரும் இவ்விரு சூராக்களை ஓதிப் பாதுகாப்புத் தேடும், பாதுகாவல் தேடும், எவரும் இந்த சூராக்களைப் போல வேறு எதைக் கொண்டும் பாதுகாப்புத் தேடவில்லை. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட இவ்விரு சூராக்களைப் போன்று வேறு எந்த துஆவும் இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த சூராக்களுக்கு வேறு எதும் நிகரில்லை, என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இமாமத் செய்யும் போது தொழுகையில் இந்த சூராக்களை ஓதக் கேட்டேன்' என ஹஜ்ரத் உக்பத் இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள், சொல்வீராக!'' என்றார்கள். நான் மவுனமாக இருந்தேன், மறுபடியும் சொல்! என்று சொல்ல, நான் மவுனமாக இருந்தேன். மூன்றாவது முறை மீண்டும் சொல்!' எனப் பணித்தார்கள், யாரஸூலல்லாஹ்! என்ன சொல்வது?'' என்று கேட்டேன். காலை மாலை மூன்று முறை குல்ஹுவல்லாஹு அஹத்'', குல் அவூது பிரப்பில் ஃபலக்'', குல் அவூது பிரப்பின்னாஸ்'' ஓதிக்கொள்ளும்! இந்த சூராக்கள் நோவினை தரும் எல்லாப் தீங்குகளிலிருந்தும் உம்மைப் பாதுகாக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
நோய் நிவாரணி:
ஆயிஷா(ரழி) கூறினார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்றபோது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.
(புகாரி : 5748)
தூங்கும் போதும், எழுந்திருக்கும் போதும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் இவ்விரு சூராக்களை ஓதிவருமாறு நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளதின் மூலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புமிக்கது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே, நாமும் ஓதி நல்லருளை பெற்றிடுவோம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.