மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா
பன்னிரண்டாவது நூற்றாண்டில் ஒர் இரவு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஆளுநராக இருந்த சையிது இப்ராஹிம் அவர்களின் கனவில் தோன்றி, தமிழ்நாடு சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யுமாறு பணித்ததற்கேற்ப, அவர்கள் தமிழ்நாடு புறப்பட்டு வந்த குழுவினரில் சையிது இப்ராஹிம் வலீயுல்லாஹ் அவர்களுக்கு உறுதுணையாக வந்தவர் இஸ்கந்தர் துல்கர்னைன்.
ஜித்தாவின் ஆளுநராக இருந்து பணியாற்றிய இஸ்கந்தர் துல்கர்னைன் அவர்கள், சையிது இப்ராஹிம் அவர்களுடன் தமிழ்நாடு வந்து, அவர்கள் நடத்திய போர்களிலெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை சுல்தான் சையிது இப்ராஹிம் பவுத்திர மாணிக்கத்திலிருந்து அரசோச்சிய சமயம், இஸ்கந்தர் துல்கர்னைன் மதுரையின் ஆளுநராக இருந்து பணியாற்றினார்.
இவர் திருப்பரங்குன்றத்தின் மீது ஒரு பள்ளிவாயிலை நிர்மானித்தார். அப் பள்ளி வேலை முற்றுப் பெறும் நிலையில் அங்கு இவர் எதிரிப் படைகளால் சூழ்ந்து கொள்ளப்பட்டார். இவரின் அடக்கவிடம் அம்மலை மீது உள்ளது. அதனை தரிசிக்க மக்கள் சென்று கொண்டுள்ளனர்.
இஸ்கந்தர் என்பதை தமிழ் கூறும் நன்மக்கள் சிக்கந்தர் என்று அன்புடன் அழைக்கின்றனர். இவர் இங்கு அடங்கப் பெற்றிருப்பதன் காரணமாகத் திருப்பரங்குன்றத்தை முஸ்லிம்கள் ”சிக்கந்தா மலை” அல்லது “சிக்கந்தர் பாவா மலை” என்று கூறுகின்றனர்.
பிற்காலத்தில் மதுரையை ஆண்ட முதுகுளத்தூரின் மண்ணின் மைந்தன் மதுரை நாயகம் கான் சாகிபு சிக்கந்தா மலை பள்ளி வாயிலை முழுமைப் படுத்தியதோடு இவரின் அடக்கவிடத்தின் மீது கட்டிடமும் எழுப்பி, அதன் பராமரிப்புக்காக மான்யமும் வழங்கினார்.