அன்னை ஜைனப் பின்த் குஜைமா (ரழி)
ஜைனப் பின்த் குஜைமா (ரழி) (கி.பி.595-கி.பி.627) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஏழைகளுக்கு இரங்கக்கூடியவர்களாகவும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக் கூடியவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். ”உம்முல் மஸாக்கின்” (Umm al-Masakin) என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே மரணமடைந்த மனைவிமார்களில் இவரும் ஒருவர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கத்தை அனந்தரங்கொள்ளக் கூடிய பெண்களைத் தான் இறைவன் என்னை மணமுடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளான்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவப்பட்டம் வழங்கப்படுவதற்கு சற்று 14 வருடங்களுக்கு முன் கி.பி.595ல் பிறந்தவர்கள் தான் அன்னையவர்கள். நபி (ஸல்)அவர்கள் மக்காவில் தனது தூதுத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கிய பொழுது, இதுவரை அவரை நன்னம்பிக்கையாளர் என அழைத்துக் கொண்டிருந்த மக்கள் ஒரே நாளில்அவரைத் தூற்றவும், ஏன் கொலை செய்யவும் கூட முயற்சி செய்தார்கள். இந்தநிலையில், மக்காவில் வாழ்ந்த அபுபக்கர் (ரழி) மற்றும் கதீஜா (ரழி) போன்ற சிலர் நபி(ஸல்) அவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்ததோடல்லாமல், இறை விசுவாசிகளாகவும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அந்த ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களில் ஒருவராக அன்னை ஜைனப் பின்த் குஜைமா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் முதன் முதலில் துஃபைல் பின் ஹரித் என்பவரை மணந்து, அவர் சிறிது காலத்திலேயே மரணமடைந்ததால் அவரது சகோதர்ரான உபைதுல்லாஹ் பின் ஹரித்(ரழி) அவர்களை திருமணம் செய்து அவர்களுக்கு பத்து குழந்தைகளுடன் இறைவிசுவாசிகளாக மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். கி.பி.624 ஆம் ஆண்டில் பத்ரு போரில் பெறப்பட்ட காயங்களால் உபைதுல்லாஹ் பின் ஹரித்(ரழி) அவர்கள் சிகிச்சை பலனின்றி ஷகிதானார்கள். அன்னையின் ஏழ்மையால் அதன் பின்பு அன்னையவர்கள் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டிருந்தார்கள். உஹதுப் போர்க்களத்தில் இந்த அருமை நபித்தோழர் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக தியாகம் செய்த பின்பு, அன்னையவர்கள் விதவையாக தனி மரமானார்கள்.
அதே சமயம் ஹம்னாஹ் பின்த் ஜஹ்ஸ் (ரழி) அவர்களது கணவரும் கூட உஹதுப் போர்க்களத்தில் உயிர்த் தியாகியானார். சோகமே உருவான ஹம்னாஹ் (ரழி) அவர்களைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், ”ஒரு பெண்ணின் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் கணவனின் நினைவை வேறு யாராலும் அகற்றி விட முடியாது” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இந்த ஆறுதல் வார்த்தையைக் கேட்ட ஹம்னாஹ் (ரழி) அவர்கள் வெட்கப் பட்டவர்களாக, அனாதைகளாகி விட்ட என்னுடைய குழந்தைகளின் தொந்தரவு தான் அதிகமாக இருக்கின்றது, பொறுமையும், துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் அதற்கான ஆற்றலையும் இறைவன் எனக்கு வழங்கிட, எனக்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் யா ரசூலல்லாஹ்! என்று வேண்டிக் கொண்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனை, ஹம்னாஹ் (ரழி) அவர்கள் தல்ஹா பின்அப்துல்லா (ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டதனால் நிறைவேறியது. இரக்க சுவாபமுள்ள தல்ஹா (ரழி) அவர்கள், ஹம்னாஹ் (ரழி) அவர்களது குழந்தைகளை பாசத்துடன், தனது குழந்தைகள் போல வளர்க்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் ஜைனப் (ரழி) அவர்களும், ஹம்னாஹ் (ரழி) அவர்களைப் போலவே உஹதுப்போர்க்களத்தில் தனது கணவரை இழந்திருந்தாலும், எந்த மனித சக்தியிடமும் தனதுபிரச்னைகளைச் சொல்ல விரும்பாத ஜைனப் (ரழி) அவர்கள், தனது வேதனைகளை இறைவனிடமே முறையிட்டார்கள். தொழுகை மூலமும், திக்ருகள் மூலமும் இறைவனுடைய உதவியைக் கோரினார்கள். அவர்களது பொறுமைக்குப் பரிசாக, நபி (ஸல்)அவர்களின் கோரிக்கை ஜைனப் (ரழி) அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டியது. அன்னையவர்களை மணமுடிக்க விரும்புவதாகவும், அதற்கான சம்மதத்தைத் தரும்படி நபி (ஸல்) அவர்கள் தூது அனுப்பி இருந்தார்கள். நபி (ஸல்)அவர்களின் மனைவியாக வாழ்க்கைப்படுவதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும் என்று சந்தோசத்தில் திளைத்த அன்னையவர்கள், சம்மதத்தை தெரிவிக்க, 400 திர்ஹம்களை மணக்கொடையாகக் கொடுத்து அன்னையவர்களை நபி(ஸல்) அவர்கள் கி.பி.625ல் மணமுடித்துக் கொண்டார்கள்.
அன்னை ஹஃப்ஸா (ரழி) மற்றும் ஆயிஷா (ரழி) ஆகியோர்களின் இல்லத்திற்கு அருகேஅன்னை ஜைனப் (ரழி) அவர்களுக்கு இல்லம் கட்டி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஒருவராக மலர்ந்தார்கள். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களைமுற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)
மேலும்,
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. (33:32)
என்ற மேற்கண்ட வசனத்திற்கு இலக்கணமாக பிறருக்குக் கொடுத்துதவி வாழ்ந்தார்கள் அன்னையவர்கள். ஏன்..! இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே, அன்னையவர்களை – ஏழைகளின் தாய் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக் கூடியவர்களாக இருந்தார்கள். பசியுடன் அல்லது தேவையுடையவர்களாக யாரையும் காண அன்னையவர்கள் சகிக்க மாட்டார்கள். இன்னும் ஏழைக்கு இரங்கும் இவர்களது தயாள குணத்தை அன்றைய கவிஞர்கள் கூட சிலாகித்துத் தங்களது பாடல்களில், உதாரணங் கூறிப் பாடியுள்ளனர்.
இப்னு கதீர் அவர்களின் கூற்றுப்படி, மேற்கண்ட சிறப்பை அன்னையவர்கள், தனது தயாள குணத்தின் காரணமாகவே பெற்றுக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
கஸ்தலானி என்பவரது கூற்றுப்படி, இஸ்லாம் தனது வெளிச்சப் புள்ளிகளை விதைக்கு முன்பே அன்னையவர்கள் தயாள குணம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறிப்பிடுகின்றார்.
பிறவியிலேயே அவரிடம் காணப்பட்ட இந்த தயாள குணம் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டவுடன், இன்னும் அதிகப்படியாக தாராளமாக பிறருக்குவாறி வழங்கக் கூடியவர்களாக அவர்களை மாற்றியது.
அன்னையவர்கள் நபி(ஸல்) அவர்களை மணந்து கொள்வதற்கு முன்பாகவே, ஆயிஷா (ரழி) அவர்களும், ஹஃப்ஸா (ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர்களின் மனைவி மார்களாக வாழ்ந்து வந்தார்கள். ஜைனப் (ரழி) அவர்கள் கணவரை இழந்து கைம்பெண்ணாக வாழ்ந்து பின்பு நபி (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் காரணத்தினால், அன்னையவர்களின் மீது இருவரும் அதிக பாசமும், நேசமும்கொண்டார்கள். இன்னும் கணவரை இழந்த துக்கத்தில் இருந்த அவர்களுக்கு, மேற்கண்ட இருவரின் துணையும், ஒத்துழைப்பும் ஆறுதலைத் தந்தது. இன்னும் அன்னையவர்களிடம் காணப்பட்ட அந்த அருங்குணமான ஏழைகளுக்கு இரங்கும் தன்மை அவர்களது கவலையைப் போக்கும் மருந்தாகவும் அமைந்து விட்டது. பிறரது துன்பத்தைக் கண்டு இரங்குவதன் மூலம், தனது துன்பத்தை மறந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை மணந்ததன் பின்பு வெறும் ஒரு வருடமும் சில மாதங்களுமே அன்னையவர்கள் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் கி.பி.627ல் மரணமடைந்த பொழுது, அவர்களுக்கு வெறும் 31 வயது தான் ஆகியிருந்தது.
நபி(ஸல்) அவர்கள் முன்னின்று ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற, அன்னையவர்கள் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் முதன் முதலாக அன்னை கதீஜா (ரழி)அவர்களை இழந்தார்கள். அதன் பின் அன்னை ஜைனப் (ரழி) அவர்களை இரண்டாவதாக இழந்தார்கள்.
அல்லாஹ்..! அவர்களின் மீது கருணை மழையைப் பொழிவானாக..! அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.