Home


அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி)

                அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) (கி.பி.590-கி.பி.641) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். தானதர்மங்கள், தேவையுள்ளவர்களுக்கு இரங்குதல், தொழுகையில் தனிப்பட்ட அற்பணிப்புடன் தொழுதல் ஆகியவற்றில் தனிச்சிறப்புடன் விளங்கிய அன்னையவர்கள், முதல் கணவராக நபித்தோழரும், நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனுமான ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்களை மணந்து பின்னர் விவாகரத்து ஆனார்கள். மேலும் இறைவனின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களுடன் அன்னையரின் திருமணத்தை இறைவனே நடத்தி திருமறைக் குர்ஆனின் 33:37 வசனம் மூலம் வெளிபடுத்தினான். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார்.

                ஜஹ்ஷ் இப்னு ரியாப் அவர்கள் உமய்யா குலத்தின் பாதுகாப்பில் மக்காவில் குடியேறிய வருக்கும், நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரி உமாமா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும், மகளாக அன்னை ஜைனப்(ரழி) மக்காவில் கி.பி.590ல்  பிறந்தார்கள்.

                அன்னையவர்கள் நபி(ஸல்) அவர்களின் தனிப்பெரும் தளபதியான அப்துல்லா பின் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் தங்கையுமாவார்கள். அன்னையவர்களின் இன்னுமொரு சகோதரர் அபூஅஹ்மத் (ரழி) இஸ்லாத்தைப் பற்றி தனது பாடல்களில் மூலம் எழுச்சியூட்டி வந்த கவிஞருமாவார்கள்.

                அன்னையவர்கள்  இவரது சகோதரரான அப்துல்லா பின் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் அழைப்பின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அழகிய, புத்திக் கூர்மையுள்ள, இரக்க சுவாபமுள்ள என்று எண்ணற்ற பண்புகளை பெற்றவராக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

                அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறிய காரணத்திற்கு தினம் தினம் விதவிதமான கொடுமைகளை முஸ்லிம்கள் மீது அரங்கேற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஆரம்ப கால மக்கா வாழ்க்கை என்பது முஸ்லிம்களுக்கு சொல்லொண்ணா கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. இந்த கொடுமைகள் எல்லாம் சகித்துக் கொண்டு பொறுமையாக இருக்கும் படியும், தைரியமாக இருந்து வரும் படியும் தனது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் வழங்கினார்கள். இன்னும் இறுதியில் குறைஷியர்களின் கொடுமைகள் உச்ச நிலையை அடைந்த பொழுது, தனது தோழர்களை நாடுவிட்டு நாடு துறந்து செல்லும் படிப் பணித்தார்கள்.  முன்னர் அபீசீனியாவிற்கும் பின்பு மதீனாவிற்கும் செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

                அவ்வாறு நாடு துறந்து சென்றவர்களில் ஜஹ்ஷ் குடும்பத்தவர்களும் ஆவார்கள். ஜஹ்ஷ் குடும்பத்தினர் அப்துல்லா பின் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் தலைமையில் ஹிஜ்ரத் செய்தார்கள். அவ்வாறு ஹிஜ்ரத் சென்ற குழுவில், முஹம்மது பின் அப்துல்லா பின் ஜஹ்ஷ் (ரழி), ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி), ஹம்னாத் பின்த் ஜஹ்ஷ் (ரழி), மற்றும் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ்(ரழி) ஆகியோர் இருந்தனர்.

மக்காவிலிருந்து சென்ற முஹாஜிர்களுக்கும், மதீனாவில் வாழ்ந்த அன்ஸார்களுக்கும் இடையே மிகச் சிறந்த சகோதரப் பாசம் உருவாகி, இஸ்லாமிய சகோதரத்துவ சங்கமமாக மதீனா திகழ்ந்தது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மக்களாக காணப்பட்டார்கள். எவரும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை, அவர்களில் ஆணாக இருந்தாலும்  பெண்ணாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், ஆனால் அவர்கள் அனைவரும் இறையச்ச மிக்கவர்களாகவும், நல்ல குணநலன்கள் மற்றும் ஒழுக்கமிக்கவர்களாகவுமே திகழ்ந்தார்கள்.

இந்த முன்மாதிரி மிக்க சமூகத்தில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, தனது மைத்துணியான ஜைனப் (ரழி) அவர்களுக்கு, தனது வளர்ப்பு மகனும் மற்றும் தன்னிடம் அடிமையாயிருந்து பின்னர் உரிமை விடப்பட்டவருமான ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்களை மண முடித்து வைக்க நிச்சயம் செய்யத் தீர்மானிக்கின்றார்கள்.  நபி (ஸல்) அவர்களின் இந்த முடிவைக் கேள்விப் பட்ட ஜைனப் (ரழி) அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் விடுகிறார்கள். இன்னும் தான் ஒரு கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்த பெண், இன்னும் அடிமையாயிருந்து பின் உரிமை விடப்பட்ட ஒருவரைத் தன்னால் மணந்து கொள்ள இயலாது என்பதையும் தெரிவிக்கின்றார்கள். இருவரும் மணமுடித்துக் கொண்டால்,  இருவரது வாழ்வும் அமைதியாகக் கழியுமா என்பதிலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால்  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதனை நான் முடிவு செய்து விட்டேன், அதற்கு ஸைனபே நீங்கள் சம்மதித்துத் தான் ஆக வேண்டும் என்று கூறி விடுகின்றார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கீழ்க்கண்ட வசனம் இறக்கியருளப்படுகின்றது :

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் (33:36)

                இருவருக்கும் அதன் பின்னால் திருமணம் முடித்து வைக்கப்படுகின்றது, இருவரும் வெவ்வேறு சூழ்நிலைப் பின்னணியில் வளர்ந்தவர்கள் என்பதால், அவர்களால் இணைந்து சந்தோஷமாக வாழ இயலாமல் இருந்தது இன்னும் அவர்களது வாழ்வில் அமைதி என்பது இல்லாமலேயே இருந்தது.

                இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்த காரணத்தினால், அவர்களது உறவில் விரிசல்கள் அதிகமாக விழ ஆரம்பித்தன, இன்னும் ஒரு ஆண் தனது மனைவியிடம் என்னென்ன மரியாதைகளை எதிர்பார்ப்பானோ, அத்தகைய மரியாதைகள் எதனையும் ஜைனப் (ரழி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள இயலவில்லை. மிகவும் மனம் நொந்த நிலையில் ஒருநாள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்கள், இந்தத் திருமணத்தின் மூலமாக தான் மிகவும் வேதனையடைந் திருப்பதாகவும், என்னைப் போலவே ஜைனப் (ரழி) அவர்களும் இருப்பதாகவும் கூறுகின்றார்கள். இவருக்கான அறிவுரை அவரை படைத்த இறைவனிடமிருந்தே வந்தது, இறைவன் வஹியின் மூலம் இவ்வாறு அறிவித்துக் கொடுத்தான்,

''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்”   (33:37)

இன்னும் பல முயற்சிகள் செய்தும், இருவரது வாழ்வும் அமைதியாகக் கழிவதற்கும் பதிலாக, அமைதியிழந்த நிலையிலேயே கழிந்தது, இறுதியாக ஜைனப்(ரழி) அவர்களை, ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்கள் மணவிலக்குச் செய்து விட்டார்கள்.

                அரபுக்களிடம் ஒரு பழக்கம் ஆரம்ப காலத்திலிருந்த நிலவி வந்தது, அதன்படி ஒருவர் தனது வளர்ப்பு மகனால் மணவிலக்குச் செய்யப்பட்ட அல்லது விதவையாகி விட்ட மனைவியைத் திருமணம் செய்ய முடியாது. அது தவறான செயலாகக் கருதப்பட்டது. இந்த அறியாமைக் காலத்து மூடப்பழக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்த இறைவன், ஒருநாள் ஜைனப் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மணமுடிக்கப் படுவார்கள் என்ற செய்தியை ரகசியமாகத் தெரிவித்து வரும் படிப்பணிக்கின்றான். இந்த இறைச் செய்தியை கேட்ட நபி (ஸல்) அவர்கள், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள், இது அரபுக்களின் வாழ்க்கைப் போக்கிற்கு முற்றிலும் மாற்றமானதாயிற்றே என்று அவர் மிகவும் கவலைப் படுகின்றார்கள். இவ்வாறு தனக்கும் விவாக விலக்குப் பெற்ற ஜைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடக்குமென்று சொன்னால், அதுவே சமூகத்தில் குழப்பத்தையும், இன்னும் அவமானத்தையும் தேடித் தந்து விடுமே என்றும், அதன் பின்விளைவு முஸ்லிம்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விடுமே என்று பயப்படுகின்றார்கள். ஆனால் இந்த முடிவு வல்லோனாம் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்பதால், அதனைச் செயல்முறைப் படுத்தும்படி அவனிடமிருந்து கட்டளையும் இப்பொழுது வழங்கப்பட்டு விடுகின்றது,

                நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள்புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர்உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர்பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்துவிட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

                ஜைனப் (ரழி) அவர்கள் தனது இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை முடித்த பின்னர், ஜைனப் (ரழி) அவர்களை தான் மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து, ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்களிடம் அதற்கான தகவலை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுகின்றார்கள். அந்த செய்திக்கு உடனே பதில் கூறாத ஜைனப் (ரழி) அவர்கள், தனது இறைவனிடம் இதற்கான வழிகாட்டு தலைக்கோரி, அதன் பின்னர் அதற்கான பதிலைத் தெரிவிப்பதாகக் கூறி ஜைது பின் ஹாரிஸா (ரழி) அவர்களை அனுப்பி விடுகின்றார்கள்.

                அதன் பின் தனக்கு வழிகாட்டுமாறு, இறைவனிடம் முறையிடுகின்றார்கள். அவர் அதற்கான நாட்டத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து, திருவசனம் அருளப்படுகின்றது, அதில், இருவரது திருமணத்தையும்  அதற்கான சம்பிரதாயங்களையும் இறைவன் தனது வானலோகத்திலேயே தானே நடத்தி விட்டதாக அறிவிக்கின்றான். இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட உத்தரவை அடுத்து, திருமணத்திற்காக செய்யப்படுகின்ற அறிவிப்புகள், உற்றார், நண்பர்களுக்குத் தெரிவித்தல் போன்ற எந்த சம்பிரதாயங்களும் இன்றி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நேரடியாக ஜைனப் (ரழி) அவர்களது இல்லத்திற்குச் செல்கின்றார்கள், ஒருவீட்டிற்குள் நுழையும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எந்த சம்பிரதாயங்களையும் கடைபிடிக்காமல், ஜைனப் (ரழி) அவர்களுக்குக் கூட இது பற்றித் தெரிவிக்காமல் ஜைனப் (ரழி) அவர்களது வீட்டில் நுழைகின்றார்கள். இது குறித்து சிலமுக்கியக் குறிப்புகள் இங்கு நோக்கத்தக்கவை :

                திருமறைக் குர்ஆனின் கட்டளையே, இந்தத் திருமணத்திற்கான பொறுப்பாளராகவும், சாட்சியமாகவும் ஆக்கப்படுள்ளது.

                அந்த அறியாமைக்கால நடைமுறையின் வழி வந்த அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகனுக்கு, இரத்த உறவில் பிறந்த மகனைப் போன்றே கருதப்பட்டு வந்த நிலைமாற்றப் படுகின்றது, இதன் மூலம் அன்றைய அறியாமைக்காலப் பழக்கத்தில் இருந்த தகப்பனார் தனது வளர்ப்பு மகனின் விதவை அல்லது மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ள இயலாது என்ற நடைமுறை தடை செய்யப்படுகின்றது.

                நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில், தனது திருமணமானது தனது குடும்பத்தாரால் நிச்சயிக்கப் பட்டதல்ல, அது தன்னைப் படைத்த இறைவனால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்டது என்று பெருமைபட மற்ற அன்னையர்களிடம் கூறி, ஜைனப் (ரழி) அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்களாம்.

                 திருமணத்தைப் பற்றி நயவஞ்சர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கேலிசெய்த பொழுது அதற்கு இறைவன் இவ்வாறு தனது திருமறையின் மூலமாகப் பதிலளிக்கின்றான்.

நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்  இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்பட மாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (33:38-39)

                முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)

                இதற்குப் பின்பாக இறைவன் தத்துப் பிள்ளைகளினுடைய நிலைகள் குறித்த இஸ்லாமிய சட்ட திட்டங்கள் என்னவென்பதை இங்கே விவரிக்கின்றான்,

உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்;. (33:4-5)

                மேலும், இந்த திருமணத்திற்குப் பின்பு இறைவன் பெண்கள் ஹிஜாப் அணியவேண்டியதன் அவசியம் சம்பந்தமான வசனத்தை இறக்கியருளியதோடு, இன்னும் இதற்குப்பின்பு வேறு எவரும் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்வது மற்ற ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற வசனத்தையும் இறக்கியருளினான்.

                ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவார்கள், மதிப்பிலும், அந்தஸ்திலும் எனக்கு நிகரானவர் என்று ஜைனப்ப் (ரழி) அவர்களைப் பற்றிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் மிக நெருக்கத்தை விரும்பக் கூடியவர்களில் இவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் நெருக்கம் மற்றும் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே இறைவனுக்கு உவப்பைத் தரக் கூடிய தான தர்மங்களில் தாரளப் போக்குடையவர்களாகவும், உறவினர்களிடையே உறவை நன்முறையில் பேணக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

                மதீனாவில் கெட்ட பேச்சுக்கள் மக்களிடையே அதிகமாகி விட்டன என்று ஆயிஷா (ரழி) அவர்கள் தவறான முறையில் குற்றச்சாட்டை நபி (ஸல்) அவர்களது முன்னிலையில் வைத்த பொழுது, அது பற்றி நபி(ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களின் கருத்தைக் கேட்டார்கள். அப்பொழுது  அன்னையவர்களின் மேன்மையான குணம் வெளிப்பட்டது, அதுவே பதிலாகவும் வெளிவந்தது. இதில் நான் எனது மூக்கை நுழைக்க விரும்பவில்லை, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளுக்குத் துணை போவதன் மூலம், எனது காதுகளையும், எனது கண்களையும், எனது நாவையும் அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக ஆயிஷா (ரழி) அவர்களிடம் நற்குணங்களையும், இறைவனுக்குப் பயந்த பண்பையும் தான் நான் கண்டிருக்கின்றேன் என்று கூறினார்கள். இன்னும் அவர்களிடம் ஒற்றுமை, நேர்மை மற்றும் கண்ணியம் போன்ற நற்பண்புகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவர்களைக் கண்டிருக்கின்றேன். இன்னும் அவர்களிடம் நல்லனவற்றைத் தவிர, அதுவன்றி வேறு எதனையும் நான் கண்டதில்லை என்றும் கூறினார்கள்.

                ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி இப்படிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனது சக்களத்தி என்ற முறையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எனக்கெதிரான கருத்துக்களைப் புனைந்து கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில், எனது வாழ்வில் நான் மிகக் கடுமையான சோதனைக்குட்பட்டிருந்த அந்த நாளில், முழு உலகமே முற்றிலும் எனக்கெதிராக மாறி இருந்த அந்த நாளில், எனக்கு ஆறுதல் தரக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நான் எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

                நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் தனது மனைவிமார்களது இல்லங்களுக்குச் சென்று அவர்களது உடல் நலம், தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மனைவியின் இல்லத்திலும் சம அளவு நேரத்தைக் கழிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருநாள் அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் தனது உறவினர் ஒருவரின் மூலமாக உயர்தரமான தேனை பெற்றுக் கொண்டார்கள். தேன் என்பது நபி(ஸல்) அவர்களின் விருப்பமான உணவாகவும் இருந்தது. எனவே, அவ்வாறு ஜைனப் (ரழி) அவர்களின் வீட்டில் தேன் வழங்கப்படும் நாட்களில், அதன் சுவையையும், அதன் மணத்திற்காகவுமே சற்று அதிக நேரம் தங்கி விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

                நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களது வீட்டில் மட்டும் அதிக நேரத்தைச் செலவிடுவதன் காரணமாக, தங்களது நேரம் வந்தும் இன்னும் நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் வரவில்லையே என்று ஒவ்வொரு மனைவிமார்களும் அமைதியிழந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மற்ற மனைவிமார்களில் ஆயிஷா (ரழி), சௌதா (ரழி) மற்றும் ஹஃப்ஸா (ரழி) ஆகியோர் ஒரு திட்டத்தைத் தயாரித்தனர். நபி(ஸல்) அவர்களுடன் தங்கும் முறை தங்களுக்கு வரும் பொழுது, இவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து ஒருவித நாற்றம் வருவதாகச் சொல்ல வேண்டும் என்று இவர்களுக்குள் முடிவாகியது. இவ்வாறாக அனைவரும் ஒரே செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது, நபி(ஸல்) அவர்கள் அதனை உண்மை என நம்பி, தான் அருந்திய தேன் தான் இப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்று நம்ப ஆரம்பித்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னை எப்பொழுது தூய்மையான நிலையில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள் இன்னும் அதில் அதிகக் கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்பதால், தேன் அருந்துவதை விட்டு விடுவார்கள் என்று தான் இந்தத்திட்டத்தை அந்த மூன்று அன்னையர்களும் தயாரித்தனர்.

                இவர்கள் போட்டி பொறாமையின் காரணமாக இப்படியொரு திட்டத்தைத் தயாரித்தார்கள் என்பதை விட, நபி(ஸல்) அவர்களிடம் தாங்கள் கொண்டிருக்கும் அன்பின் காரணமாக நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய நேரத்தில் தங்களுடன் இருக்க விரும்பியதன் காரணமாகவே இவ்வாறு செய்தார்கள். அன்னையர்களைப் பற்றி இறைவனே மிகவும் பெருமைப்படும்படியாக, கண்ணியமானவர்களாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பதைப் பாருங்கள் :

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. (33:32)

                அவர்கள் திட்டமிட்டமிட்டவாறே நடந்தது. தேனை விரும்பக் கூடிய நபி (ஸல்) அவர்கள் இப்பொழுது, நான் இனிமேல் தேனே சாப்பிட மாட்டேன் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சாதாரண மனிதராக நபி(ஸல்) அவர்கள் இருந்து இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று சொன்னால் அதனால் எந்தப்பிரச்னையும் எழப் போவதில்லை. ஆனால் இறைவனால் தடுக்கப்படாத ஒன்றை, இறைத்தூதராக இருப்பவர் எவ்வாறு தனக்குத் தடையாக்கிக் கொள்ள இயலும், அவ்வாறு தடையாக்கிக் கொள்வது அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இது சட்டமாகி விடுமே. எனவே, அவர்கள் அவ்வாறு கூறியது சரியல்ல என்று இறைவன் தனது திருமறையின் வசனத்தின் மூலம் உணர்த்தினான்.

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்?   மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்ககிருபையுடையவன். (66:01)

                இந்த வசனம் இறக்கியருளிய பின்பு, இனிமேல் நான் தேன் சாப்பிடப் போவதில்லை என்று சத்தியமிட்டதை முறித்தார்கள், அல்லாஹ்வின் அறிவுறுத்தலை ஏற்று அதற்காக பிராயச்சித்தம் தேடிக் கொண்டார்கள்.

                அன்னையவர்கள் தனது வீட்டினருகில், ஒரு சிறிய பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு, அதில் இறைவணக்கத்தில் அதிகம் ஈடுபடுவதில் ஈடுபட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூட சில சமயங்களில் அந்தப் பள்ளியில் தொழுதுள்ளார்கள். எந்த செய்கையையும் ஆரம்பிக்கு முன்னால் இறைவனது வழிகாட்டிலை நாடி தொழக் கூடியவர்களாகவும், தொழுகையின் மூலம் அதற்கான வழி முறைகளைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆலோசனை வழங்கினாலும் கூட, அதற்கான வழிகாட்டுதல்களை நாட்டத் தொழுகையின் மூலமாகப் பெற்றுக் கொள்ள, தொழுகையின் பக்கம் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

                இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள், உமர் (ரழி)அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது, தனது 53 ம் வயதில் மரணமடைந்தார்கள். தனது இறுதிக் காலம் நெருங்கி வருவதையும், தன்னைப் படைத்தவனை விரைவில் சந்திக்க இருப்பதையும் உணர்ந்த அன்னையவர்கள், தனது கபன் துணியைத் தான் தெரிவு செய்து விட்டதாகக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். தனக்காக கபன் துணி ஒன்றை உமர் (ரழி) அவர்கள் வழங்கினார்கள் என்று சொன்னால், ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டு மற்றதை தானம் வழங்கி விடுமாறு கூறி விட்டார்கள். இன்னும் அதிக வெட்க உணர்வு கொண்டவர்களாக அன்னையவர்கள் இருந்த காரணத்தால், அவர்கள் இறந்த பின்பு அவர்களது உடலை கபன் துணியினால் சுற்றப்பட்ட பின்பும், அவர்களது உடலுக்கு முன்பாக திரைச் சீலை தொங்க விடப்பட்டு, பிறரது கண்பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்தது.

                அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் மரணமடைந்து விட்ட பொழுது, அவர்களைக் குறித்து நினைவு கூர்ந்த ஆயிஷா (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எனது மனைவிமார்களில் மிக நீண்ட கைகளை உடையவர் தான் என்னை (எனது மரணத்திற்குப் பின்) முதலில் சந்திக்கக் கூடியராக இருப்பார் என்று கூறினார்கள். மற்ற அன்னையர்களுடன் ஒப்பிடும் பொழுது, அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் இயற்கையாக குள்ளமாக இருந்ததோடு, குட்டையான கைகளையே கொண்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் இந்த முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, அத்தனை அன்னையர்களும் தங்களது கைகளை மற்றவர்களது கைகளுடன் அளந்து பார்த்துக் கொண்டார்கள். ஆனால் மிக நீண்ட கை என்பது, பிறரது உதவிக்காக இரங்கும், தாராளப் போக்கு கொண்ட தான தர்மங்கள் வழங்கக்கூடியவர்கள் என்பதைத் தான் இங்கு உவமையாகக் குறிப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

                நபி(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பானது, அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் மரணமடைந்ததுடன் உண்மையானது. அதாவது,நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்த பின் இருந்த மற்ற அன்னையர்களில் அன்னை ஜைனப் (ரழி) அவர்கள் தான் முதலில் மரணமடைந்து நபி(ஸல்) அவர்களை முதலில் சந்தித்த மிக நீண்ட கைகளை உடையவர் ஆவார்.

                உமர் (ரழி) அவர்கள் முன்னின்று அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகை நடத்தினார்கள். அன்னையவர்களின் நெருங்கிய உறவினர்களான, உஸாமா பின் ஜைது (ரழி), முஹம்மது பின் அப்துல்லா பின் ஜஹ்ஷ் (ரழி), அப்துல்லா பின் அபீஅஹ்மது பின் ஜஹ்ஷ் (ரழி) மற்றும் முஹம்மது பின் தல்ஹா பின் அப்துல்லா (ரழி)ஆகியோர் சேர்ந்து அன்னையவர்களை மண்ணறைக்குள் இறக்கி வைத்தனர். அன்னையவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.
Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...