அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரிஸ் (ரழி)
அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரிஸ் (ரழி) (கி.பி.608- கி.பி.676) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களது குலத்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள். புத்திக்கூர்மையுள்ள மற்றும் நேர்மை மிக்கவரான இவர், மொழிகளிலும், இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
பனூ முஸ்தலக் கோத்திரத்தின் தலைவராக இருந்த ஹாரிஸ் பின் அபூழிரார் என்பவரின் மகளாக கி.பி.608 இல் ’முரைஸீ ’ என்ற இடத்திற்கு அருகில் பிறந்தார். அவருக்கு “பரா” என்று அவரது பெற்றோர் பெயரிட்டு வளர்த்தனர்.
ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு, அரேபியத் தீபகற்பத்தின் பெரும்பாலான பாகங்களில் இஸ்லாத்தின் வெளிச்சம் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இப்பொழுது மதீனாநகரம், இஸ்லாமியத் தலைநகரமாக மாற்றம் பெற்று, விரிந்து வளர்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆளும் மையப் புள்ளியாக மாறிவிட்டிருந்தது. மேலும், இஸ்லாமியப் படை நாலா பக்கங்களிலும் சென்று, இஸ்லாமிய உந்துதல்களினால் மாற்றம் பெற்ற அவர்களது உள்ளங்கள், வெற்றியைத் தவிர வேறு எதனையும் பெறுவதாக இல்லை என்ற நிலை உருவாகி விட்டிருந்தது.
இந்த நிலையில், பனூ குஸாஆ என்ற கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தின் மீதும், நபி (ஸல்) அவர்கள் மீதும் பற்றுக் கொண்டிருந்தாலும், அவர்களது கிளைக் கோத்திரத்தார்களான பனூ முஸ்தலக் மதீனாவின் மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டனர். பனூ முஸ்தலக் கோத்திரத்தின் தலைவனாக இருந்த ஹாரிஸ் பின் அபூழிரார் என்பவன் பயங்கரமான குடிகாரனாகவும், தனது செல்வம் மற்றும் பலத்தைக்கொண்டு கர்வம் பிடித்தவனாகவும் இருந்தான்.
இவனது மகள் பரா (ஜுவைரிய்யா) என்ற அழகுமங்கை இஸ்லாமிய எழுச்சிக்கு சற்று முன்பு தான் பிறந்திருந்தார். அவரது தந்தையாரின் வளமும், வசதிகளும் இவரை ஒரு இளவரசியாகவே மாற்றியிருந்தது. அந்தளவு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார். புத்திக்கூர்மையுள்ள மற்றும் நேர்மை மிக்கவரான இவர், மொழிகளிலும், இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். இத்தகைய குணங்கள் அரபுக்கள் மத்தியில் மிகவும் போற்றுதற்குரிய மரியாதைக்குரியனவாக இருந்தன. இத்தகைய நற்குணங்களைப் பெற்ற இவர், பனூ குஸாஆ கோத்திரத்து வாலிபரான முசாஃபா பின் ஸஃப்வான் என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்கள்.
ஹாரிஸ் பின் அபூழிரார் மதீனாவிற்கு எதிராகப் படைகளைத் திரட்டிக் கொண்டு வருவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தனது ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான புரைதா பின் ஹஸீப் (ரழி) என்பவரை அழைத்து, ஹாரிஸ் திரட்டிக் கொண்டிருக்கும் படைகளின் எண்ணிக்கை மற்றும் ஏற்பாடுகள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டு வரும்படி அனுப்பி வைத்தார்கள். புரைதா (ரழி) அவர்கள் ஹாரிஸ் அவர்களையும் இன்னும் அந்தக் குலத்து முக்கியஸ்தர்களையும் சந்தித்து, அதன் மூலம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்த் தயாரிப்பு ஏற்பாடுகளை உளவு பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த ஏற்பாடுகள் யாவும் மதீனாவின் மீது போர்தொடுப்பதற்காகத் தான் என்பதையும் அவர்களது பேச்சின் மூலமாகவும் அறிந்து கொண்டார். புரைதா (ரழி) அவர்கள், தனது உளவு நடவடிக்கைகள் மூலமாகத் தெரிந்து கொண்டதை அப்படியே நபி (ஸல்)அவர்களிடம் தெரிவித்தார்.
இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அழைத்து போருக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டதோடு, 700 படைவீரர்கள் தயாரானார்கள். அந்த 700 படை வீரர்களுடன் புறப்பட்ட நபி (ஸல்) அவர்களுடன், ஆயிஷா (ரழி) அவர்களும் உடன் சென்றார்கள்.
முரைஸீ என்ற இடம் பனூ முஸ்தலக் குலத்தவருக்கு மிகவும் முக்கியத்துவமான இடமாகும். இங்கிருந்து தான் இவர்களது குடிப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீரை அவர்கள் பெற்று வந்தார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை முன்னரே அடைந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள், அங்கிருந்து பனூ முஸ்தலக் கோத்திரத்தவருக்கு ஒரு செய்தியை அனுப்பி, அதில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படி அறிவித்திருந்தார்கள்.
இதனை ஏற்றுக் கொண்டு, அமைதியான வாழ்வு வாழ்வதை விட்டு, அந்தக் கோத்திரத்தவர்கள் போருக்கான அறிவிப்பை அறிவித்தார்கள். இந்த நிலையில், பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களில் ஒருவன் எறிந்த அம்பு ஒன்று முஸ்லிம்களில் ஒருவரது மீது பட்டவுடன், போர் வெடிக்க ஆரம்பித்தது. இப்பொழுது நபி(ஸல்) அவர்கள் தனது துணைத் தளபதிகளுக்கு உத்திரவிட ஆரம்பித்தார்கள்.
பத்து பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்கள் கொல்லப்பட்டார்கள், நூற்றுகணக்கானோர் பேர்கைதிகளாகப் பிடிபட்டார்கள். அன்னை ஜுவைரிய்யா (ரழி) அவர்களது கணவரான முசாஃபா பின் ஸஃப்வான் அவர்களும் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட கைதிகளில் பெண்களும் இருந்தார்கள். முஸ்லிம்கள் இரண்டாயிரம் ஒட்டகங்களையும், ஐயாயிரம் ஆடுகளையும் கைப்பற்றினார்கள்.
வெற்றி பெற்று மதீனா திரும்பியவுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் முஸ்லிம்களுக்கிடையே பங்கு வைக்கப்பட்டன. அன்றைய நாளின் வழக்கப்படி, கைதிகளாகப் பிடிபட்ட ஆண்களும், பெண்களும் அடிமைகளாகப் பங்குவைக்கப்பட்டார்கள். அதன்படி ஜுவைரிய்யா (ரழி) அவர்கள், புகழ்மிக்க நபித்தோழரான ஸாபித் பின் கைஸ் அன்ஸாரி (ரழி) அவர்களுக்கு அடிமையாகக் கொடுக்கப்பட்டார்கள். ஜுவைரிய்யா (ரழி) அவர்களின் அழகினால் அனைவரும் பிரமித்து போய் நின்றார்கள். அழகு மட்டுமல்ல, ஒரு உயர் குலத்தில் பிறந்து, அந்தக் குலத்தின் தலைவனின் மகளாக வாழ்ந்து வந்தவரும் ஆகையால், பார்ப்பதற்கு அழகாகவும், வனப்பு மிக்கவராகவும் இருந்தார்கள். இந்தநிலையில், தான் அடிமையாகக் கொடுக்கப்பட்டது குறித்து, ஜுவைரிய்யா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையீடு செய்தார்கள்.
நான் ஒரு குலத்தலைவனின் மகள், எனது போதாத நிலைமை மணிமுடி தலைகுப்புற விழுந்து, மணலில் புதைந்து போய் விட்டது. ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் நான் விடுதலையாவதற்காக தங்கத்தை மாற்றாகக் கொடுத்திருக்க வேண்டும், நான் அந்தத்தங்கத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்? என்று வாதிட ஆரம்பித்தார்கள். இன்னும் நான் எவ்வாறு ஒரு அடிமை வாழ்வை வாழ முடியும்? என்று அவர்கள் கேட்டார்கள். ஜுவைரிய்யா அவர்களின் நிலைமையை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், கேட்டார்கள்..,
உங்களது மீட்பு தொகையை நான் செலுத்தி விடும்பட்சத்தில், நீங்கள் சுதந்திரமான பெண்ணாகவும், இன்னும் எனது குடும்பத்தவர்களின் ஒருவளாகவும் ஆகச் சம்மதித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். இந்த மாதிரியான ஒரு கோரிக்கையை அவர் தனது கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நபி (ஸல்) அவர்களின் இந்த கோரிக்கையை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்த ஜுவைரிய்யா அவர்கள், உடனே அதற்குச் சம்மதித்தார்கள். அதன் பின் அவர்கள் அடிமை என்ற நிலையிலிருந்து சுதந்திரமானவராக விடுதலை செய்யப்பட்டதோடு, இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவரை மணமுடித்துக் கொண்டார்கள்.
ஜுவைரிய்யா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அறிந்தநபித்தோழர்கள், மிகவும் சந்தோஷமடைந்தவர்களாக பனூ முஸ்தலக் கோத்திரத்து அடிமைகளாக தங்களிடம் இருந்தவர்கள் அனைவரையும் விடுதலையும் செய்துவிட்டார்கள். இதன் மூலம், அன்னையவர்கள் சுதந்திரமான பெண்மணியாக மட்டும்மாறவில்லை, இறை நம்பிக்கையாளர்களின் தாயாகவும் ஆனார்கள். நபி (ஸல்) அவர்களை மணமுடிப்பதற்கு முன் அன்னையவர்களின் பெயர் பரா என்றிருந்ததை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஜுவைரிய்யா என்றுமாற்றினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் முதன் முதலில் ஜுவைரிய்யா (ரழி) அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களது அழகைக் கண்டு பிரமித்துப் போனார்கள். இன்னுமொருமுறை இவ்வாறு கூறினார்கள். அவரைப் போன்றதொரு தனது குலத்தவர்களுக்கு அருட்கொடையாக வந்த ஒருவர் யார் தான் இருக்கின்றார்கள், அவரால் இறைவன் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விடுதலையாவதற்கு அருட்கொடைகளைப் பொழிந்தான். அதிகமான தன்னுடைய நேரங்களைத் தொழுகையில் கழித்துக் கொண்டிருக்க கூடியவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, கலீஃபாவாகப் பதவியேற்ற அபூபக்ர் (ரழி) அவர்கள், அன்னையவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்டதொரு தொகை ஒன்றை நிர்ணயித்து, அவர்கள் செலவினங்களுக்காகக் கொடுத்து வந்தார்கள். ஆனால்உமர் (ரழி) அவர்களது காலத்தில், மற்ற அன்னையவர்களுக்கு 12 ஆயிரம்திர்ஹம்கள் என்றும், அன்னை ஜுவைரிய்யா (ரழி) அவர்களுக்கும், அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களுக்கும் 6 ஆயிரம் திர்ஹம்கள் என்றும் பிரித்தார்கள். ஆனால் இதனை அன்னையவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். மற்றவர்கள், ஹிஜ்ரத்செய்து வந்ததன் காரணமாக இவர்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகப் பங்குபெறத் தகுதியுடையவர்கள் என்று உமர் (ரழி) அவர்கள் இதற்கு விளக்கமளித்தார்கள்.
இதில் தலையிட்ட ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களுக்கிடையில் எந்தவித பாரபட்சத்தையும் காட்டவில்லை என்றுகூறினார்கள். ஆயிஷா (ரழி) அவர்களது விளக்கத்தை அடுத்து, உமர் (ரழி) அவர்கள்தனது முடிவை விலக்கிக் கொண்டு, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகையைவழங்கினார்கள்.
அன்னையவர்கள் தனது 65 வது வயதில் ரபீஉல் அவ்வல் மாதம் ஹிஜ்ரி 50ல், முஆவியா பின் அபீசுஃப்யான் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது மரணமடைந்தார்கள். மதீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த மர்வான் பின் ஹகம் அவர்கள், அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகையை ஜன்னத்துல் பக்கீயில் வைத்து முன்னின்று நடத்தினார்கள்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.