Home


அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி)

மைமூனா பின்த் ஹாரிஸ் அல் ஹிலாலிய்யா (ரழி) (கி.பி.594- கி.பி.673) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் இயற்பெயர் பரா என்பதை நபி(ஸல்) அவர்கள் மைமூனா என்று மாற்றினார்கள். மைமூனா (ரலி) அவர்கள் இறையச்சம் மிக்க பெண்மணியாகத் திகழ்ந்ததோடு, நற்பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும் திகழ்ந்ததோடு, உறவுகளைப் பேணக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதரியாவர்.

மைமூனா பின்த் ஹாரிஸ்(ரழி) ஆரம்ப வாழ்வு

        மக்கா பனூ ஹிலால் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த ஹாரிஸ் இப்னு ஹஸன் என்பவருக்கும், யேமன் ஹிம்யார் என்னும் கோத்திரதைச் சார்ந்த் ஹிந்த் பின்த் அவ்ப் என்பவருக்கும் மகளாக மக்காவில் கி.பி 594 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்ரோர் பரா என்று பெயரிட்டழைத்தனர். இவருக்கு உம்முல் ஃப்ழ்ல் லுபாபா குப்ரா, லுபாபா சுஃரா, அஸ்மா மற்றும் உஸ்ஸா ஆகிய சகோதரிகளும் இருந்தார்கள்.

        உம்முல் ஃபழ்ல் லுபாபா குப்ரா என்ற சகோதரி பிரபலமான நபித்தோழரான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவர், கதீஜா (ரழி) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.

        அன்னை மைமூனா (ரழி) அவர்கள் மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டதோடு, இஸ்லாமிய உயிர்த்தியாகிகளையும், போர் வீரர்களையும், அறிஞர் பெருமக்களையும் கொண்டதொரு பாரம்பர்யத்தில் உதித்தவருமாவார்.

அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களை மணமுடிக்கு முன்பாக, மசூத் பின் அம்ர் பின் உமைர் தகஃபீ என்பவரை மணந்திருந்தார்கள், இருவருக்குமிடையே ஏற்பட்ட மணப் பொறுத்தமின்மை காரணமாக விரைவிலேயே அவர்களது மணவாழ்வு முடிவுக்கு வந்தது. அதன் பின் இரண்டாவது கணவராக, அப்துர் ரஹம் பின் அப்துல் உஸ்ஸா ஆம்ரி குரைஷி என்பவரை மணந்து கொண்டார்கள். திருமணமான சில நாட்களிலேயே இவர் இறந்ததன் பின், இளமையிலேயே விதவையான சோகத்துக்கு ஆளானார்கள் மைமூனா அவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் திருமணம்

        ஹிஜ்ரி 7 ம் வருடம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா செய்யும் நிமித்தமாகச் சென்றார்கள். அங்கு உம்ரத்துல் கழாவை முடித்த பின்னர் மக்காவில் தங்கி இருந்தார்கள்.

        அன்னையவரின் சகோதரிகளுள் ஒருவரான லுபாபா குப்ரா அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களைத் திருமணம் செய்திருப்பதால், மைத்துனரும் இன்னும் நபி (ஸல்) அவர்களுக்கு சிறிய தந்தையுமான அப்பாஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மைமூனா அவர்களை மணந்து கொள்ளும்படிக் கோரும் போது மறுக்க மாட்டார்கள் தானே என்று நினைத்தார்கள், அவர்கள் நினைத்தது போலவே, நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, மணமுடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.

        அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசி விட்ட பின், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் கூறி, திருமண ஏற்பாட்டைக் கவனிக்கும் படிக் கோரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்ரா வை நிறைவு செய்து விட்டு ஓய்வாக இருந்து கொண்டிருக்கும் பொழுது, மைமூனா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் வந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, தன்னையும் அறியாமல், ''இந்த ஒட்டகமும், இந்த ஒட்டகத்தை ஓட்டி வருபவரும் நபி (ஸல்) அவர்களுக்கு அற்பணமாகட்டும்'' என்று சந்தோஷத்தில் கூறி விட்டார்கள். எனவே, இதன் மூலம் தன்னையே அன்பளிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு, அற்பணித்துக் கொண்டவர்கள் தான் அன்னை மைமூனா (ரலி) அவர்கள்.

        நபி (ஸல்) அவர்கள் உம்ராவை நிறைவு செய்து விட்டபின், மக்காவில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள். அப்பொழுது, நான்காவது நாள் அதிகாலையில் ஹாதிப் பின் அப்துல் உஸ்ஸா என்பவரும், அவருடன் சில இறை நிராகரிப்பாளர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நாம் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பிரகாரம், உங்களது உம்ராவை நிறைவேற்றிய பின் நீங்கள் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும், அதன்படி நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்' என்று கூறினார்கள்.

இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு கிளம்பி விடுவதாக நபி (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள், இன்னும் தனது திருமண விருந்தில் கலந்து கொள்ளும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். எங்களுக்கு, இந்த விருந்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கு இல்லை, நீங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவதொன்றையே நாங்கள் விரும்புகின்றோம் என்று அந்தக் குறைஷிகள் கூறினார்கள்.

இதற்குப் பின் அங்கிருக்க விரும்பாத நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து கிளம்பி, மக்காவை விட்டும் ஒன்பது மைல் தொலைவில் உள்ள ”சரிஃப்” என்ற இடத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு, அங்கேயே தனது திருமண விருந்தை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் அடிமையான அபூ ரஃபி அவர்கள் ஒட்டகத்தில் வைத்து மைமூனா (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். இங்கு வைத்துத் தான் நபி (ஸல்) அவர்கள், பரா என்ற பெயரை மாற்றி மைமூனா என்ற பெயரைச் சூட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களைத் தான் இறுதியாக மணந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அன்னைக்கு 26 வயது தான் ஆகி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை அடைந்தவுடன், நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே ஒரு வீடு அன்னையவர்களுக்காக கட்டப்பட்டு, அங்கே அன்னையவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர்கள், அன்னையவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.

அன்னை மைமூனா (ரழி) அவர்களின் சிறப்புகள்

அன்னையவர்கள், தனது தொழுகையை நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் வைத்து நிறைவு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், மக்கா ஹரம் பள்ளியைத் தவிர்த்து, ஏனைய பள்ளிகளில் தொழுவதைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவது ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற காரணத்தினால், அவ்வாறு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். மக்காவில் உள்ள ஹரத்தில் ஒரு முறை தொழுவதானது மற்ற பள்ளிகளில் தொழுவதைக் காட்டிலும், ஒரு லட்சம் மடங்கு சிறப்பானது.

ஒரு வருடத்தில் பல குழுக்கள் மதீனாவிற்கு வந்திருந்தன. அவ்வாறு வந்த குழுக்களில் பனூ ஹிலால் கோத்திரத்தவரும் வந்திருந்தனர். அந்தக் கோத்திரத்தாருடன் அன்னையவர்களின் சகோதரியின் மகனான ஸியாத் பின் அப்துல்லா பின் மாலிக் ஆம்ரீ அவர்களும் வந்திருந்தார்கள். இவர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருக்கும் நேரத்தில் தனது சிற்றன்னையான மைமூனா (ரழி) அவர்களைச் சந்திக்குமுகமாக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தனது வீட்டிற்குத் திரும்பி வந்த நபி (ஸல்) அவர்கள், மைமூனா (ரழி) அவர்களுக்கு அருகில் முன்பின் தனக்குத் தெரியாத நபர் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும், மைமூனா (ரழி) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டிருப்பதையும் பார்த்து நின்றார்கள். அப்பொழுது, அன்னை மைமூனா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இவர் எனது சகோதரியின் மகன், உங்களைச் சந்திக்க வந்த குழுவினருடன் வந்திருக்கின்றார் என்று அறிமுகப்படுத்தினார்கள். மிகவும் சந்தோஷமடைந்த நபி (ஸல்) அவர்கள், அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஒருநாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள், அதே போன்றே மாலையிலும் காணப்பட்டார்கள். மறுநாளும் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டார்கள். அப்பொழுது, உங்களைக் கவலைப்படச் செய்தது என்னவென்று மைமூனா (ரழி) அவர்கள் வினவினார்கள். அதற்கு, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றார்கள், அவர்கள் வருவதாகக் கூறிச் சென்ற நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை. இவ்வாறு என்றுமே நிகழ்ந்ததில்லை என்று கூறினார்கள். பின்பு, படுக்கைக்குக் கீழாக நாய்க் குட்டி ஒன்று படுத்திருப்பது தெரிந்தது. அதனை விரட்டி விட்டு, அது படுத்துக் கிடந்த இடத்தை தண்ணீரைக் கொண்டு கழுவியும் விடப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்த திசையின் பக்கமாக, உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகை தந்து விட்டார்கள். பின், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், தாங்கள் கூறிச் சென்ற நேரத்திற்கு வராததன் காரணமென்னவென்றும், இது போல் எப்பொழுதும் நிகழ்ந்ததல்லவே..! என்றும் விசாரித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ''நாயும், உருவப்படங்களும் எங்கே இருக்கின்றனவோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

மைமூனா (ரழி) அவர்கள் கடன் வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரது குடும்பத்தவர்களில் ஒருவர், இந்தப் பழக்கம் குறித்து அவரிடம் வினவிய பொழுது, அதற்கு பதில் சொல்லாமல் இருக்கவில்லை, மாறாக, இவ்வாறு பதில் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஒரு முஸ்லிம் கடன் வாங்கி, அதனை அடைப்பதற்கு அல்லாஹ் நிச்சயமாக உதவுவான் என்று முழுமையாக நம்பிக்கை கொண்டானெனில், அல்லாஹ் நிச்சயமாக (அந்தக் கடனை அடைப்பதற்கு) எதிர்பாராத விதத்தில் இருந்து ஏற்பாடு செய்து தருவான்''.

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நோய் முற்றி இறுதி நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தக் கணத்தில், மைமூனா (ரழி) அவர்களது வீட்டில் இருந்தார்கள். பின்பு, தனது அனைத்து மனைவிமார்களையும் அழைத்து, தான் தனது இறுதி வாழ்வை ஆயிஷா (ரழி) அவர்களது இல்லத்தில் கழிக்க விரும்புவதாகக் கோரினார்கள். அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அன்னாரது மனைவிமார்கள் முழுமையாகத் திருப்தி கொண்ட நிலையிலேயே ஆயிஷா (ரழி) அவர்களின் இல்லத்தில் அவர்களது மடியில் படுத்திருக்கும் நிலையிலேயே மரணத்தையும் தழுவினார்கள். அவர்களது பாசத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களின் இல்லத்திலேயே நபி(ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்த அந்த நேர்த்தில், அவர்களது ஒன்பது மனைவிமார்கள் உயிருடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களாவான : ஆயிஷா (ரழி), மைமூனா (ரழி), ஸஃபிய்யா (ரழி), ஜுவைரிய்யா (ரழி), ஸவ்தா (ரழி), ஜைனப் (ரழி), உம்முஹபீபா (ரழி), உம்மு ஸலமா(ரழி) மற்றும் ஹஃப்ஸா (ரழி) ஆகியோர்களாவார்கள்.

மைமூனா (ரழி) அவர்கள் மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்த காரணத்தால், நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளை நன்கு மனனமிட்டிருந்தார்கள். நபிமொழிகளில், ஆயிஷா (ரழி) அவர்களின் பெயரால் அறிவிக்கப்பட்டவை 2200 நபிமொழிகளாகும். இவருக்கு அடுத்தபடியாக, உம்மு ஸலமா (ரழி) அவர்கள் 378 நபிமொழிகளையும், இவருக்கு அடுத்தபடியாக அன்னையவர்கள் 76 நபிமொழிகளையும் அறிவித்திருக்கின்ற நற்பேறு பெற்றவர்களாவார்கள்.

மைமூனா (ரழி) அவர்களின் இறுதி வாழ்வு

        கி.பி.673 ஆம் வருடம் முஆவியா (ரழி) அவர்கள் ஆட்சியாளராக இருந்து கொண்டிருந்த நேரத்தில் அன்னை மைமூனா (ரழி) அவர்கள் மரணமடைந்தார்கள். மக்காவில் வைத்து அன்னையவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அந்த இடத்தில் அவர்களது மனது நிலை கொள்ளாமல், எதையோ நினைத்து தவித்துக் கொண்டிருந்தது. அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்த இடமான மக்காவின் புறவெளிப்பகுதியான ”சரிஃப்” க்கு அன்னையவர்களை அன்னையவர்களது உறவினர்கள், எடுத்துச் சென்றார்கள். எந்த இடத்தில் தனது திருமண இரவை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கழித்தார்களோ, அந்த இடத்தை அடைந்தவுடன் அன்னையவர்களது உயிர் பிரிந்தது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''இறைவன் மீது சத்தியமாக..! மைமூனா (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள், இறையச்சமிக்கவர்களில் ஒருவராக அவர் இருந்தார், இன்னும் இரத்த உறவு முறைகளைப் பேணியவராகவும் அவர் இருந்தார்'', என்று கூறினார்கள்.

அன்னை மைமூனா (ரழி) அவர்களின் ஜனாஸா அவர்கள் மரணமடைந்த “சரிஃப்” என்ற இடத்தில், அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் தலைமையில், இறுதி (ஜனாஸா) தொழுகை நிறைவேற்றப்பட்டு, கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.