Home


ஜைத் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு

        நபித்தோழரான இவர் மதீனாவில் கஸ்ரஜ் குலத்தில் தோன்றியவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த புஆத் சண்டையில் இவருடைய தந்தை இறந்து விட்டார். அப்பொழுது இவருக்கு வயது ஆறு. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த சமயம் இவர் பற்றி நன்றாக ஓதத் தெரிந்தவர் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் இப்னு தாபித் (ரழி) ஓதுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார். மேலும் இவர் பல சூராக்களை மனனமாக்கி இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னர் பத்ரு போரில் கைப்பற்றப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து இவர் அரபி எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

பல மொழிகளை கற்றுக் கொள்ள அண்ணலாரின் அன்பு கட்டளை

        இவர் பதினாறு வயதினராயிருக்கும் பொழுது இவரை யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியையும், அதன் பின்னர் சிரிய மொழிகளைக் கற்றுக் கொள்ளுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பணிக்க, இவர் யூதர்களின் மொழியை 15 நாட்களிலும், சிரிய மொழியை 17 நாட்களிலும் கற்றுத் தேர்ந்தார்கள். மேலும் இவர் கிரேக்க, ஃபார்ஸி, கிப்தி, அபிசீனிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்ததாய் மஸ்வூதி தம்முடைய தன்பீஹில் குறிப்பிடுகிறார். வெளிநாட்டினருக்கும், யூதர்களுக்கும் இவரைக் கொண்டே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மடல்கள் தீட்டினார்கள்.

வஹியை (வேத வெளிப்பாடு) எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராக நியமனம்

        நபித்தோழர்கள் மத்தியில் மாபெரும் அறிஞராகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மொழி பெயர்ப்பாசிரியராகவும் விளங்கிய ஜைத் (ரழி) அவர்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் சிறந்து விளங்கினார்கள். இதனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை (வேத வெளிப்பாடு) எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நியமித்திருந்தார்கள். ஏதேனும் ஒரு வசனம் இறங்கி விட்டால் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களை அழைத்து வரச் சொல்லி அவ்வசனத்தைப் பதிவு செய்வார்கள். அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருக்கும் வசனங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். வசனங்கள் இறங்க இறங்க, இறங்கிய மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வாயோடு வாயாகக் கேட்டுத் தெரிந்து எழுதினார்.

தற்காலிக கலீஃபாவாக இவர்கள்

        உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய அலுவலகப் பொறுப்பைக் கவனிக்க இவரை தற்காலிகக் கலீஃபாவாக நியமித்து விட்டுச் சென்றார்கள். சிரியாவுக்கு பயணமான போதும் இவரையே தற்காலிக கலீஃபாவாக உமர்   (ரழி) அவர்கள் நியமித்து விட்டுச் சென்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களும் இவரை அவ்வாறு நியமித்திருக்கிறார்கள்.

திருக்குர்ஆனை எழுதியும், மனனம் செய்து பாதுகாத்தவர்கள்

        மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. மாண்புமிக்க “லைலத்துல் கத்ர்” இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப் பெற்று பூர்த்தி பெற்றது. திருக்குர்ஆன் இறங்கும் போதெல்லாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அதனைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். தம் தோழர்களில் நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். எழுதி முடிந்ததும் அவர்களிடம் வாசித்துக் காட்டப்படும். எழுதியவர்கள் சரியாக எழுதினார்களா இல்லையா என்று சரி பார்த்து உறுதி செய்யப்படும்.

        அக்காலத்தில் காகிதங்களாக அறியப்பட்டிருந்தவற்றில் எழுதச் செய்து பிறகு அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்கச் செய்தார்கள். ஒவ்வொரு தடவை மாமறை திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கும் போது எழுத்தாளர்களை கூப்பிட்டு இந்த வசனத்தை அல்லது இன்னின்ன வசனங்களை எந்த அத்தியாயத்தில் எப் பகுதியில் எழுத வேண்டுமோ அப்பகுதியில் எழுதச் செய்வார்கள். சிலர் திருக்குர்ஆனை தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்தும் பாதுகாத்தனர்.

        எழுதியும், மனனம் செய்தும், பாதுகாத்தவர்களில் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் மிக முக்கியமானவர். மேலும், அலீ இப்னு அபூதாலிப் (ரழி), உபை இப்னு கஅப் (ரழி), முஆவியா (ரழி), இப்னு மஸ்வூத் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) முதலிய நபித்தோழர்களெல்லாம் இந்த வரிசையில் எண்ணப்படுகின்ற முக்கிய எழுத்தாளர்களும், ஹாஃபிஸ்களுமாவார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில்..

        அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்த போது திருக்குர்ஆன் வெவ்வேறு சுவடிகளில் எழுதப்பட்டும் பலரது நெஞ்சங்களிலும மனனம் செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டது. வசனங்கள் மற்றும் அத்தியாயங்கள் யாவும் தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் தினச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது. ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை. அதற்குரிய தேவை அன்று ஏற்படவில்லை. ஏனெனில் வஹி (வேத வெளிப்பாடு) அன்று தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அதன் வரத்து அன்று நின்று விடவில்லை.

அபூபக்ர் (ரழி) அவர்களது காலத்தில்

        நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தில் மதமாற்றம் பற்றிய கொந்தளிப்பு எழுந்த போது இஸ்லாத்தை ஏற்றிருந்தத சிலர் அதை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியது. மதம் மாறியவர்களுடன் போரிடுவதற்கு அபூபக்ர் (ரழி) அவர்கள் முஸ்லிம் படைகளைத் திரட்டிக் கொண்டு ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு யமாமா போர் நடத்தினார். அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் தங்களுடைய இன்னுயிரை இழந்து ஷஹீதானார்கள்.

        ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களும் அந்த யுத்தத்தில் காயமடைந்தவர்களில் ஒருவராவார். நபித் தோழர்கள் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தது உமர் கத்தாப் (ரழி) அவர்களை பெரிதும் வாட்டியது. யமாமா யுத்தம் முடிந்ததும் உமர் கத்தாப் (ரழி) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து இது போன்ற யுத்தத்தில் கலந்து எஞ்சிய ஹாபிஸ்கள் யாவரும் உயிர் நீப்பதற்குள் திருக்குர்ஆனை ஒருங்கிணைத்து பாதுகாத்துக் கொள்ளும் பணியை துவக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இம்மாதிரி யுத்தம் நடைபெறும் பட்சத்தில் திருக்குர்ஆன் மனனம் செய்தவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தெரிவித்தார்.

        அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு உமர் (ரழி) அவர்கள் கூறிய விஷயத்தில் உடன்பாடு கொள்ளவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் எவ்வாறு செய்வது, நீங்கள் என்னிடம் அதை எவ்வாறு செய்யச் சொல்வீர்கள்? என்ற ரீதியில் அபூபக்ர் (ரழி) அவர்களுடைய சிந்தனை ஓடியது. உமர் (ரழி) அவர்கள் மீண்டும் எடுத்துக் கூறி, அபூபக்ர் (ரழி) அவர்களை ஏற்கச் செய்தார்கள். பிறகு, அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி திருக்குர்ஆனை தொகுத்து தரும் பொறுப்பை ஏற்கும் படி வேண்டிக் கொண்டார்கள்.

திருக்குர்ஆன் தொகுப்புப் பணியில் ஜைத் இப்னு தாபித் (ரழி)

        திருக்குர்ஆன் தொகுப்புப் பணிக்கு தகுதியானவர் ஜைத் இப்னு தாபித் (ரழி) என்பது அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிpந்தவர். காணாமல் பாடம் பண்ணியவர். எழுத்தறிவு பெற்றவர், சிந்திப்பதிலும், புரிந்து கொள்வதிலும் நிகரில்லாதவர். அதுமட்டுமல்ல, அண்ணல் நபி(ஸல்) அவர்களுடன் கடைசி வரையிலுமிருந்து திருக்குர்ஆனை இறுதியாகச் சரி பார்த்தவர். ஆகவே, இம்மாதிரித் தகுதிகள் அவரிடம் இருப்பதைத் தெரிந்து கொண்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

        “ஜைதே! நீர் ஓர் இளைஞர், உமது சிந்தனையிலும், ஆற்றலிலும் நாங்கள் சந்தேகம் கொள்ள மாட்டோம். நீர் முன்பு வஹீயை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது குர்ஆனின் பிரதிகள் யார் யாரிடம் இருக்கின்றன என்பதும் உமக்குத் தெரியும். ஆகவே, அதை ஒருங்கிணைத்து ஒன்றாகத் தொகுத்து விடும்” என்றார்கள். முதலில் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் பிறகு இப்பொறுப்பை நிர்வகிக்கத் தயாரானார்கள்.

இப்பொறுப்பின் கம்பீரத்தையும், மகத்துவத்தையும் பற்றி

        இஸ்லாமிய மார்க்கம் எந்த திருக்குர்ஆனை அடிப்படை வேத நூலாக ஏற்கிறதோ அந்தக் திருக்குர்ஆன் அன்று பற்பல ஏடுகளில் எழுதப்பட்டிருந்தது. அவற்றை ஒரே தொகுப்பில் கொண்டு வருவதென்றால் அது அன்று மட்டுமல்ல என்றுமே சிரமமான வேலை தான். அம்மாதிரியான பொறுப்பை அன்று ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் செய்து முடித்தார். இப்பொறுப்பின் கம்பீரத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒரு தடவை ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

        “இன்று நான் திருக்குர்ஆனின் சுவடிகளை திரட்டி மனனம் செய்தவர்களையும் கொண்டு ஓதி சரிபார்த்து ஒரே ஒரு தொகுப்பில் ஒருங்கிணைத்து தர வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கின்றேன். இறைவன் மீது ஆணையாக என் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்புக்குப் பதிலாக ஒரு மலையைப் பெயர்த்து இன்னொரு இடத்தில் வைத்துவிட வேண்டுமென்று என்னிடம் பணித்திருப்பார்களேயானால் அது எனக்கு மிகவும் இலகுவாக இருந்திருக்கும்.”

        அதாவது, திருக்குர்ஆன் அத்தியாயங்களைத் தேடிப் பிடித்து தொகுத்து வழங்கும் போதும், மேலும் திருக்குர்ஆன் வசனங்களைக் கண்டறிந்து சரிபார்த்து அதனுடைய இடத்தில் வைக்கும்போதும் ஏற்படுகின்ற சிரமங்கள் ஒரு மலையைப் பெயர்த்து இடமாற்றம் செய்வதனால் ஏற்படும் கஷ்டத்தை விட கடினமானது. திருக்குர்ஆன் பால் கொண்ட மதிப்பச்சத்தின் காரணமாக அவர்கள் அப்படிக் கூறினார்கள். இறுதியில் இப்பொறுப்பை சரிவர நிறைவேற்ற இறைவனின் பேருதவி ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களுக்கு கிடைத்தது.

இப்பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்தார்.

        திருக்குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே அதனைப் பாதுகாப்போம் என்று இறைவன் கூறியதற்கேற்ப ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களுடைய பணி அமைந்தது. அதில் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். முழு வெற்றியும் ஈட்டினார். தம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை செம்மையாகச் செய்து முடித்தார். திருக்குர்ஆன் பகுதிகள் எங்கெங்கு யார் யாரால் பாதுகாக்கப்ட்டன, மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைப்படி அவர்கள் சொன்ன மாதிரி எங்கெங்கு எழுதி வைக்கபட்டிருந்ததோ அவற்றையே ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். பிறகு ஹாபிஸ்களில் யார் யார் தத்தம் இதயங்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்தார்களோ, அந்த ஹாபிஸ்களிடமிருந்து அவற்றை ஓதக் கேட்டு, பிறகு அவற்றை எழுதப்பட்டிருந்தவையுடன் ஒத்துப் பார்த்து சரி செய்து கொண்டார்கள் ஜைத் இப்னு தாபித் (ரழி). புனிதமான இப்பணியை ஏனைய நபித்தோழர்கள் அங்கீகரித்துப் பாராட்டினர். அன்று சமூகத்திலுள்ள எல்லா ஹாபிஸ்களும் காரிகளும் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களுடன் ஒத்துழைத்தனர். திருக்குர்ஆன் தொகுத்து வழங்குவதில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகும் இது. நபித்தோழர்கள் மத்தியில் இப்பணியை ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்தார்கள்.

மாமறைக்கு முஸ்ஹஃப் என்ற பெயர்

        அபூபக்ர் (ரழி) அவர்கள் திருக்குர்ஆன் முதன் முதலில் ஒரே தொகுப்பில் ஒருங்கிணைப்பதற்காக வேண்டி முயற்சித்த முதல் கலீஃபா ஆவார். அன்று முதல் திருக்குர்ஆனுக்கு முஸ்ஹஃப் (ஒரே ஏட்டில் தொகுக்கப்பட்டது) என்று பெயரிட்டு அழைத்தனர். அடுத்தபடியாக அபூபக்ர் சித்தீக் (ரழி) அதை ஒருங்கிணைக்க ஆவன செய்தார். அவருடைய ஆணைக்கேற்ப ஜைத் இப்னு தாபித் (ரழி) தொகுத்து வழங்கிய முஸ்ஹஃபானது அபூபக்ர் (ரழி) அவர்களிடமே இருந்தது. ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டு அபூபக்ர் (ரழி) அவர்கள் மரணமடைந்த போது உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலம் வரை அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) அவர்களிடம் குர்ஆன் எழுத்துப் பிரதி பாதுகாக்கப்பட்டன.

உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்

இஸ்லாத்திற்கு வெற்றிகள் குவிந்த வண்ணமிருந்தன. பல ஊர்களில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிமல்லாத பல ஊர்கள் வெற்றி கொள்ளப்பட்டன. அங்குள்ள மக்கள் அங்கு ஹாபிஸ்கள், காரிகளிடமிருந்து திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொண்டனர். மொழிகள் யாவும் உச்சரிப்பதிலும் பேச்சு வழக்கிலும் நகரத்துக்கு நகரம் மாறுபடும், வட்டாரத்துக்கு வட்டாரம் வித்தியாசமாக இருக்கும்.

பிரபல நபித்தோழர் ஹுதைபத்துல் யமான் (ரழி) அவர்கள் அன்று ஈராக்கில் தங்கியிருந்தார். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற வேறு நபித்தோழர்களும் தங்கியிருந்தனர். அவ்வூர் மக்கள் ஆளுக்கு ஆள் வித்தியாசமாக திருக்குர்ஆனை ஓதுவதை அவர் கவனித்தார். சிலர் தவறாக உச்சரித்து ஓதுவதையும் கவனித்தார். இப்படியே போனால் காலப் போக்கில் பிரச்னைகள் பல உருவாகக் கூடும் எனக் கருதினார். அரபி மொழியில் உள்ள உச்சரிப்பின் அழகும் இனிமையும் போய்விடும் என்று அவர் அஞ்சினார். ஆங்காங்கே உள்ள வட்டார வழக்கங்களின்படி திருக்குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்படும் பட்சத்தில், திருக்குர்ஆனில் குளறுபடிகள் தோன்ற வாய்ப்பு உண்டு என உணர்ந்து அமீருல் முஃமினீன் உஸ்மான் (ரழி) அவர்களிடம் இவர் தம் கருத்தைத் தெரிவித்தார்.

இதை அறிந்த உஸ்மான் (ரழி) அவர்கள் அல்லாஹ்விடம் உதவி கோரிய பிறகு மேலும் ஏனைய நபித்தோழர்களிடம் கலந்தலோசித்து விட்டு கீழ்க்காணும் முடிவுக்கு வந்தார்.

1. அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் முன்னர் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களுடைய உதவியால் தொகுத்து வழங்கிய திருக்குர்ஆனை அடிப்படையாக வைத்து ஒரே மாதிரியாக மொழி மரபைப் பேணி ஒரே ரீதியிலான உச்சரிப்பில் பிரதிகள் எடுப்பது.

2. அதை மட்டும் மக்கள் ஓதுவதில் கடைபிடிக்க வேண்டும் எனவும், அதிலுள்ளபடி காரிகள் (ஓதுகிறவர்கள்) யாவரும் ஓத வேண்டும் எனவும் எல்லா ஊர்களிலும் அறிவிப்புச் செய்வது.

அதற்கேற்ப அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களிடமிருந்த முஸ்ஹஃபை வாங்கி பிரதிகள் எடுத்தனர்.

அனைத்துப் பிரதேசங்களுக்கும் உஸ்மான் (ரழி) அவர்கள் இவ்வாறு கடிதம் எழுதினார்கள்

முஸ்லிம்களே! நான் இதோ அனுப்பித் தருகின்ற திருக்குர்ஆனின் சுவடிகளை மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள். பழைய சுவடிகள் ஏதேனும் இருப்பின் அதை தீயிட்டு அழித்து விடுங்கள். நானும் அவ்வாறே செய்கிறேன்.

இன்று உலக முஸ்லிம்களின் கைவசமிருக்கும் திருக்குர்ஆனை இதே மாதிரியான அமைப்பில் தொகுத்து வழங்கியவர் ஜைத் இப்னு தாபித் (ரழி).

ஜைது இப்னு தாபித் (ரழி) அவர்களுடைய மரணம்.

        குர் ஆனை ஒழுங்காக முறைப்படுத்திச் செப்பனிட்டதில் இவருடைய பங்கு மகத்தானதாகும். இவர் ஹிஜ்ரி 45 இல் காலமானார். இவருடைய ஜனாஸா தொழுகையை மர்வான் இப்னுல் ஹகம் முன் நின்று நடத்தினார்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.