உக்காஷா இப்னு மிஹ்ஸன் ரழியல்லாஹு அன்ஹு
நபிதோழர்களில் ஒருவரான இவர்களின் முழுப்பெயர் உக்காஷா இப்னு மிஹ்ஸன் இப்னு ஹர்த்தான் இப்னு கைஸ் என்பதாகும். இவர் பனீ அஸத் கிளையைச் சேர்ந்தவர். துவக்கத்திலேயே இஸ்லாத்தைத் தழுவிய மதீனாவின் ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். பத்ரு போரில் இவர்களின் வாள் ஒடிந்து விடவே, இவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரக்கிளையை கொடுத்து போரிட கூறினார்கள். அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா (ரழி) போரிட்டார். பின்னரும் இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எவ்விதக் கேள்வி கணக்குமின்றி சுவனம் செல்வோரில் தாமும் ஒருவராக இருக்குமாறு இறைஞ்ச வேண்டினார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நீரும் ஒருவரே” என்று நன்மாராயம் மொழிந்தனர்.
பத்ரு போரில் உக்காஷா (ரழி)
இப்போரில் உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் வாள் ஒடிந்து விடவே, அவருக்கு நபி (ஸல்) மரக்கிளை ஒன்றைக் கொடுத்து “உக்காஷாவே! இதன் மூலம் நீர் போரிடுவீராக” என்றார்கள். உக்காஷா நபி (ஸல்) அவர்களிடமிருந்து தனது கையில் வாளை வாங்கியவுடன் அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா போரிட்டார். அவ்வாளுக்கு ‘அல்அவ்ன்’ (உதவி) என்று பெயர் கூறப்பட்டது. இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள்.
“உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்ற பழமொழி
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “என்னைப் பின்பற்றியவர்கள் எழுபதாயிரம் பேர் எவ்விதக் கேள்வி கணக்குமின்றி சுவனம் செல்வர்” என்று கூறியபொழுது “எழுபதாயிரமா?” என்று உமர் (ரழி) அவர்கள் வினவ, “ஆம் ஒவ்வோர் ஆயிரத்துடனும் எழுபதாயிரம்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அப்பொழுது இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி தாமும் அவர்களில் ஒருவராக இருக்குமாறு இறைஞ்ச வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நீரும் ஒருவரே” என்று நன்மாராயம் மொழிந்தனர். இதைக் கேட்ட மற்றொருவர் தமக்கும் அப்பேறு கிடைக்க இறைஞ்சுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களை வேண்டிக் கொள்ள, “உக்காஷா உம்மை முந்தி விட்டார்.” என்றார்கள் அவர்கள். பிற்காலத்தில் ஒருவர் மற்றவருக்கு முன்னர் ஒரு செயலை ஆற்றிவிடின் “உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று கூறுவது ஒரு பழமொழி போன்று ஆகிவிட்டது.
லஹ்யான் போர் (ஹிஜ்ரி 6, ரபீவுல் அவ்வல்)
லஹ்யான் கிளையினர் தான் ‘ரஜிஃ’ என்ற இடத்தில் பத்து நபித்தோழர்களை வஞ்சகமாகக் கொலை செய்தனர். இவர்களது இல்லங்களும் இருப்பிடங்களும் மக்காவிற்கு மிக அருகில்தான் இருந்தன. மக்காவிலோ இஸ்லாமிற்கு எதிரியாக இருக்கும் குறைஷி மற்றும் அரபு குலத்தவர்கள் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மக்கா எல்லை வரை சென்று லஹ்யான் இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றமாகக் கருதவில்லை.
நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட லஹ்யானியர் அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். எவரும் முஸ்லிம்களின் கையில் அகப்படவில்லை. நபியவர்கள் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறு சிறு குழுக்களை அனுப்பி தேடும்படி பணித்தார்கள். ஆனால், எவரையும் பிடிக்க முடியவில்லை. நபியவர்கள் அங்கிருந்து ‘உஸ்ஃபான்’ என்ற இடம் வரை சென்றார்கள். அங்கிருந்து ‘குராவுல் கமீம்’ என்ற இடத்திற்கு பத்து குதிரை வீரர்களை அனுப்பினார்கள். தான் வந்திருக்கும் செய்தி குறைஷிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். பின்பு அங்கிருந்து தனது தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள். இவ்வாறு நபியவர்கள் பதினான்கு நாட்கள் தங்களது படையுடன் சுற்றிவிட்டு திரும்பினார்கள். மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் அனுப்பினார்கள்.
உக்காஷா (ரழி) தலைமையில் ஒரு படைக்குழு
உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’ என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகிரில் நபியவர்கள் அனுப்பினார்கள். ‘கம்ர்’ என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.
உக்காஷா (ரழி) அவர்கள் போரில் ஷஹிதாக்கப்பட்டார்கள்.
இறுதியாக அபூபக்ர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கி.பி.630 அக்டோபர் மாதம் (ஹிஜ்ரி 9) இல் உத்ரா மற்றும் பாலியில் பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் கலந்து கொண்டார். நடந்த அந்த போரில் உக்காஷா (ரழி) அவர்கள் வீரமரணம் எய்தினார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.