Home


அப்துல்லாஹ் இப்னு ரவாஹா 

ரழியல்லாஹு அன்ஹு

        மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ரவாஹா இப்னு தலபாஹ் என்பவரின் மகன். இஸ்லாமிய பிரச்சாரத்தின் தொடக்க காலத்தில் மக்காவில்  இரண்டாவது அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய அன்சாரிகள் பன்னிருவரில் இவரும் ஒருவராவார். இவர் சிறந்த வீரர் மட்டுமல்லாது  எழுதப்படிக்கத் தெரிந்த சிலரில் ஒருவராகவும் இருந்தார். எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைத் தங்களின் எழுத்தராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

இவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த நன்மதிப்பு

        இவருடைய கவிதை மேதைக்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவருக்கு நன் மதிப்புக் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இவரின் கவிதைகளை  ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு மாலிக் ஆகியோரின் கவிதைகளுக்கு நிகராக அண்ணல் ந்பி (ஸல்) அவர்கள் கருதியதாகக் ‘கிதாபுல் அகானீ’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைஷிகளை அவர்களின் உருவத் தொழும்பின் பொருட்டுத் தம் கவிதையில் இவர் இழித்துரைத்தார் என்றும் மற்ற இருவருமோ அவர்களின் தீயசெயல்களுக்காக அவர்களைத் தம் கவிதைகளில் இழித்துரைத்தனர் என்றும் கூறப்படுகிறது. இவர் எழுதியதாகவுள்ள ஐம்பது கவிதைகள் வரை இப்னு ஹிஷாம் எழுதிய ‘சீரத்துர் ரசூலுல்லாஹ்’ வில் காணப்படுகின்றன.

மறுமையைப் பற்றிய கவலையில் இவர்களின் அழுகை

        ஒரு நாள் இவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டு இவரின் மனைவியும் அழவே, “ஏன் அழுகிறாய்?” என்று வினவினார் இவர். அதற்கு அவள், “நீங்கள் எதற்காக அழுகிறீர்களோ அதற்காக நானும் அழுகிறேன்” என்றாள். உடனே இவர், “மறுமையில் அனைவரும் நரகத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்பொழுது நான் அதனைக் கடந்து விடுவேனா அல்லது விழ்ந்து விடுவேனா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் உங்களை விரும்புகிறோம்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த புதிதில் ஒரு நாள் தம் கழுதை மீதேறிச் சென்ற பொழுது வழியில் நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையைச் சந்தித்து அவனை இஸ்லாத்தின்பால் அழைத்தனர். அப்பொழுது அவன், “முஹம்மதே! உம்மிடம் எவரும் வரின் அவரை இஸ்லாத்தின்பால் அழையும். உம்மை எவரும் இங்கு அழைக்காத பொழுது ஏன் வீணே வந்து தொந்தரவு செய்கிறீர்?” என்று கூறினான். அது கேட்டுப் பொறாத அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களிடம் வந்து அருளுரை பகருங்கள்! நாங்கள் உங்களை விரும்புகிறோம்; நேசிக்கிறோம்” என்று கூறினார். தம் நண்பராகிய இவர் இவ்வாறு கூறியது அப்துல்லாஹ் இப்னு உபையைத் தூக்கி வாரிப் போட்டது. “ஒருவனின் நண்பன் அவனுடைய விரோதியாகி விட்டால் அவன் விரைவில் தன்னுடைய விரோதிகளால் அழித்தொழிக்கப்படுவான்” என்று கூறினான் அவன்.

உமர் (ரழி) அவர்கள் தடுத்ததும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததும்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்ராச் செய்யப் புறப்பட்டுச் சென்று மக்காவிற்குள் நுழைந்த பொழுது, “இறைதூதருக்கு வழிவிடுங்கள், இன்றேல் உங்களைக் கொன்றொழித்து விடுவோம்” என்று இவர் உரத்த குரலில் பாடியதைக் கேட்டு, “இத்தருணத்தில் இவ்வாறு பாடுவது நல்லதல்ல” என்று கூறி உமர் (ரழி) அவர்கள் தடுத்தனர் என்றும் அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களும் ஒப்பினர் என்றும் ஒரு வரலாறு கூறுகிறது, ஆனால் நஸயீயிலும் திர்மிதீயிலும், “உமரே! அவர் பாடட்டும், தடுக்காதீர்! உருவத்தொழும்பர் முன் இவ்விதப் பாடல்களைப் பாடுவது அம்பெய்வதைவிட வன்மையானதாகும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்தா படையெடுப்பின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை

        மூத்தா படையெடுப்பின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ஜைத் (ரழி), ஜஃபர் (ரழி) ஆகியவர்கள் இறந்துவிடின் அப்படையணிக்குத் தலைமை தாங்குமாறு பணிக்கப்பட்டார் இவர். அச்சமயம் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கித் தங்களுக்கு அறிவுரை நல்குமாறு வேண்டிய பொழுது, “நீங்கள் தொழுகை குறைவாக உள்ள பகுதிக்குச் செல்கிறீர்கள், எனவே உங்கள் தொழுகையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினர் அவர்கள். மீண்டும் அறிவுரை வழங்குமாறு இவர் வேண்ட, “அல்லாஹ்வை நினைவு கூருங்கள். உங்களின் மனப்பூர்வமான இறைஞ்சுதல் அனைத்தையும் அவன் நிறைவேற்றி வைப்பான்” என்று கூறினர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

இஸ்லாமிய படையணியை பயணம் அனுப்பி வைத்த பொழுது

        இதன் பின் இஸ்லாமியப் படையணியை தன்யத்தூல் விதாவில் வைத்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பயணம் அனுப்பி வைத்த பொழுது, “அல்லாஹ் என் பவம் பொறுத்து இப்போரில் மாள்பவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவானாக!  அப்பொழுது என் அடக்கவிடத்தைக் கடந்து செல்பவர்கள், “வீராதி வீரரான இப்னு ரவாஹாவே! நீர் நேர்மையாளராகவும், வெற்றியாளராகவும் இருந்தீர். அதே போன்று இறைவன் உம்மை மறுமையிலும் ஆக்குவானாக!” என்று இறைஞ்சி விட்டுச் செல்வார்களாக!” என்று பாடினார்.

        இதே போன்ற பாடலை இவர் வழி முழுவதும் பாடிக்கொண்டு வருவதை இவருடன் வாகனத்தில் வீற்றிருந்த இளைஞர் ஸைத் இப்னு அர்க்கம் கேட்டு தேம்பித் தேம்பி அழுதபொழுது, “மகனே! எனக்கு இறைவன் மார்க்கத்திற்காக உயிர் தியாகம் செய்த நற்பேற்றினை நல்கி, உலகக் கவலைகளை விட்டும் என்னை அப்புறப்படுத்துங்கால் நீ ஏன் அழுகிறாய்? அது நல்லதல்லவா?” என்று கூறிக் கீழே இறங்கி இரண்டு ‘ரக் அத்’ தொழுதார். பின்னர் ஜைதை நோக்கி, “மகனே! இறைவன் என் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வான்” என்று கூறினார்.

நம் படை சிறிதெனினும் நம் மார்க்கம் மகத்தானதல்லவா?

        ஓரிலட்சம் படையினருடன் ரோமானியப் பேரரசர் கெய்ஸரே தலைமை தாங்கி வந்துள்ளார் என்ற செய்தி எட்டியதும் முஸ்லிம்கள் கலங்கிய பொழுது, “ஏன் கலங்குகிறீர்கள்? நாம் நம் உயிரை இறைவன் பாதையில் தியாகம் செய்ய வல்லவா வந்துள்ளோம். நம் படை சிறிதெனினும் நம் மார்க்கம் மகத்தானதல்லவா? எனவே துணிவுடன் முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி அல்லது வீர மரணம் நமக்குக் கிடைக்கப்போகிறது” என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார் இவர்.

        போர்க்களத்தில் ஸைத் (ரழி) இறக்க அதன் பின் ஜஃபர் (ரழி) வீரப்போர் செய்து இறப்பெய்தினார். மூன்று நாட்களுக்குப் பின் ஒரு இறைச்சித் துண்டை வைத்துக் கடித்துக் கொண்டிருந்த இவர், “என்ன! ஜஃபர் இறந்து விட்ட பின் நீ உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டுள்ளாயா?” என்று தம்மையே தாம் இழித்துரைத்து விட்டு இஸ்லாமியக் கொடியைத் தூக்கிக் கொண்டு முன்னால் பாய்ந்தார். அப்பொழுது எதிரியின் வாளினால் வெட்டப்பட்ட இவரின் விரல் ஒன்று தொங்கிக் கொண்டு  ஆடிய பொழுது அதனைத் தம் காலில் வைத்து மிதித்து பிய்த்தெறிந்தார்.

ஆசைகள் அனைத்தையும் துறந்து சுவனத்தை மட்டுமே விரும்பி இன்னுயிர் நீத்தார்

        இதன் பின் எதிரியின் மகத்தான படை பலத்தைக் கண்டு இவருக்கு திகில் ஏற்பட்ட பொழுது, “இப்னு ரவாஹாவே! நீ உன் மனைவி மீதுள்ள அன்பால் போர் செய்யத் தயங்கின் அவளை இக்கணமே முக்காலும் மண விடுதலை செய்துவிட்டேன். உன் அடிமைகள் மீதுள்ள பாசத்தால் நீ போர் செய்யத் தயங்கின் அவர்கள் அனைவரையும் இப்பொழுதே விடுதலை செய்து விட்டேன். உன்னுடைய ஈச்சஞ்சோலைகளின் மீதுள்ள பற்றால் நீ போர் செய்யத் தயங்கின் இக்கணமே அவை அனைத்தையும் அறம் செய்துவிட்டேன்.” என்று தமக்கே தாம் கூறிக்கொண்டார். பின்னர் தம் குதிரையிலிருந்து இறங்கி, “என் ஆன்மாவே! நீ சுவனத்தை விரும்பவில்லை போல் தோன்றுகிறது. எனவே உன்னைக் கீழே இறக்கி விட்டேன்” என்று கூறினார். அதன் பின் இவர் தம்மை நோக்கி, “நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று நீ சண்டை செய்யத்தான் வேண்டும். உனக்கு சுவனம் புக ஆசை இல்லையா? இன்று நீ சாகாவிட்டாலும் ஒரு நாள் சாகத்தானே வேண்டும்” என்று பாடினார்.

        இப்பொழுது இவரின் உறவினர் ஒருவர் ஒரு இறைச்சித் துண்டை இவரிடம் கொடுத்து, “தங்களின் வளைந்த முதுகு நிமிரும் பொருட்டு இதனைச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறிய பொழுது அதனை வாங்கி வாயில் வைக்கப் போகும் சமயம் எதிரிகள் பாய்ந்து வரும் அரவம் கேட்டு அந்த இறைச்சித் துண்டை வீசி எறிந்து விட்டு முன்னே பாய்ந்து எதிரிகளுடன் வீரப்போர் செய்து உயிர் நீத்தார்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.