யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இறைவன் அவர்களின் தள்ளாத வயதில் அவர்களுக்கு "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) நற்செய்தி வழங்கினான். பின்னர் வயது முதிர்ந்த மலடான அவரது தாயாரின் உடல் நலத்தை சீராக்கி அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை வாரிசாக வழங்கினான். இறைவனின் அருளாள் யஹ்யா (அலை) அவர்கள் சிறுவயதிலே சிறந்த ஞானத்தையும், இரக்கமுள்ள மனத்தையும், பரிசுத்தத் தன்மையும், பெற்று அதிகமான இறை அச்சமுடைய நிலையில், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவும் வளர்ந்து வந்தார்கள். அல்லாஹ் அவர்களை இளம் வயதில் நபியாக ஸிரியா சென்று மக்களை நேர்வழிப்படுத்துமாறும் ஏகதெய்வக் கொள்கையை விளக்கி அதன்படி இறைவணக்கத்தில் ஈடுபடச் செய்யுமாறும் ஏவினான். அவ்வாறு அவர்கள் ஸிரியா சென்று மக்களுக்கு அறப் போதனை செய்தார்கள்.
யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு
நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் வயது முதிர்ந்த நிலையில், அவர்களின் மனைவி ஈஷாஉவும் வயது முதிர்ந்து மலடாகவும், சந்ததியின்றி வருந்திய நிலையில் தனக்கு நல்லதொரு சந்ததியைத் தந்தருளுமாறு இறைவனை இறைஞ்சினார்கள். இவர்களின் வேண்டுகோளை அங்கீகரித்த இறைவன். தள்ளாத வயதிலும் யஹ்யா(அலை) அவர்கள் பிறக்கப் போவதைப் பற்றி இறைவன் நன்மாராயம் மொழிந்த பொழுது இவர்கள் அது பற்றித் தம் ஐயத்தைத் தெரிவித்தார்கள். அது கேட்டு இறைவன், “இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாதிருந்த பொழுது நான் உம்மைப் படைக்கவில்லையா?” என்று கேட்டான். பின்னர் இவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை வாரிசாக வழங்கினான்.
இவர்களை பற்றி திருக்குர்ஆனில்…
19:12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
19:13. அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார்.
19:14. அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
19:15. அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
இளம் பிராயத்தில்
யஹ்யா (அலை) இச் சொல்லின் பொருள் ‘உயிரூட்டுபவர்’ என்பதாகும். ஈஸா (அலை) அவர்கள் தோன்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் பிறந்து விட்டார்கள். ஈஸா (அலை) அவர்களை முதன் முதல் விசுவாசித்தவர்கள் இவர்களேயாவார்கள். யஹ்யா அலைஹிஸ்ஸலாம் இளம்பிராயத்திலிருந்தே இறைவனின் தியானத்தில் அதிகமதிகம் ஈடுபட்டார்கள். இளமையிலேயே இவர்கள் நபித்துவம் பெற்று விட்டனர். இறுதி வரை இவர்கள் மணமுடித்துக் கொள்ளவில்லை. கம்பளி உடையும், தொப்பியும் அணிந்து கொண்டு அல்லும் பகலும் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக இவர்களின் உடல் மெலிந்தது.
இறையச்சத்தின் காரணமாக அழுகை
யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவராயிருக்கும் போதே சர்வ காலமும் இறையச்சத்தின் காரணமாக அழுது கொண்டேயிருப்பார்கள். இதைப் பற்றி அன்னாரது தந்தை கேட்ட போது, “தீயாலான பாலைவனம் நரகத்தில் உள்ளது. அதனைக் கண்ணீரைக் கொண்டுத் தவிர வேறு எதனைக் கொண்டும் அணைக்க முடியாது என்று நீங்கள் கூறினீர்கள். அதனைக் கேட்டபிறகுதான் நான் அடிக்கடி அழுது கொண்டிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன்” என்றார்கள். அழுது அழுது இவர்களின் கன்னங்களில் வரைகள் ஏற்பட்டன. அது கண்டு பெரிதும் வருந்திய இவர்களின் அன்னை, அக்கண்ணீரை உறிஞ்சுவதற்கு இவர்களின் கன்னங்களில் பஞ்சை வைத்துக் கட்டினார்.
இறைவனின் மகிழ்ச்சி
தமது மகனின் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிய நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இதுபற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் சொன்னான், ‘ ஓ ஜகரிய்யாவே! நீங்கள்தானே எனது அச்சம் அதிகம் நிறைந்த எனது வலீயாக உள்ள மக்கட்பேறு கேட்டீர்கள்? உங்கள் வேண்டுகோள் படியே யஹ்யாவை எனது அச்சம் நிறைந்த வலீயாகவே படைத்துள்ளேன். அவரது அழுகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று. அதன்பிறகு ஜகரிய்யா நபி அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டார்கள்.
சிரியாவிற்கு நபியாக யஹ்யா (அலை)
அல்லாஹ் இவர்களை சிரியா சென்று மக்களை நேர்வழிப்படுத்துமாறும் ஏகதெய்வக் கொள்கையை விளக்கி அதன்படி இறைவணக்கத்தில் ஈடுபடச் செய்யுமாறும் கட்டளையிட,. அவ்வாறு இவர்கள் சிரியா சென்று மக்களுக்கு அறப் போதனை செய்தார்கள். மக்களிடையே மலிந்து கிடந்த துன்மார்க்க செயலகற்றி நன்மார்க்கத்தின் பால் கொணர்ந்தார்கள்.
சிரியாவின் அதிபதிக்கு திருமணம்
யஹ்யா (அலை) அவர்கள் காலத்தில் சிரியாவில் யூதர்களின் அதிபதியாக ஹர்தோஸ் என்பானிருந்தான். அவனது மனைவியின் பெயர் மலிகா. அவள் முதுமையடைந்திருந்தாலும் பனீ இஸ்ரவேலர்கள் அவளை மிகவும் கொண்டாடி வந்தனர். தனக்கு வயதாகி விட்டதால், தன்னை தனது புருஷன் ஒருவேளை புறக்கணித்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, அவளது மூத்த கணவனுக்குப் பிறந்த அழகான மகளை தம் புருஷனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனது புருஷனோடு தானும் கடைசி வரை வாழ்ந்து வரலாம் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, மெதுவாக தனது புருஷனுடன் ஆலோசனை செய்ததில் அவனும் சம்மதித்துவிட்டான். என்றாலும் மார்க்கத்தீர்ப்பு இந்த உறவு முறைக்கு சாதகமாக இருக்கிறதா? என்று கண்டறிய விரும்பினான்.
யஹ்யா (அலை) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு
மார்க்கத்தீர்ப்பை யாரிடம் கேட்பது என்று ஆலோசனை கேட்டதில் அனைவரும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொன்னார்கள். அவர்களை வரவழைத்து, இதுபற்றி கேட்டான். அதற்கு அவர்கள் “இந்த உறவுமுறை அறவே கூடாத ஒன்று. இயற்கைக்கு முரணானது. இறை ஆணைக்கு மாறானது. வேறுபெண்ணை மணமுடித்துக் கொள்ளவும்” என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி அரசனின் மனைவிக்கு எட்டியது. அவளது ஆத்திரத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. தனது திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எப்படியும் ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து திட்டமிட்டாள்.
காணிக்கையாக யஹ்யா (அலை) அவர்களின் தலை
அந்தத் திட்டப்படி ஒருநாள் தனது புருஷனோடு சந்தோஷமாக இருந்த நேரம் பார்த்து அரசனுக்கு மதுவை அளவுக்கதிகமாக கொடுத்தாள். அவன் நிலைதடுமாற ஆரம்பித்தான். திட்டமிட்டபடி அவள் மனைவி தனது மூத்ததாரத்து மகளை நன்றாக அலங்கரித்து முழு போதையிலிருந்த தனது கணவன் முன்னால் அவளை வரச் செய்தாள். அவளது பேரழகைக் கண்டதும் அரசனது மதி மயங்க ஆரம்பித்தது. மகளை அணைத்துக் கொள்ள அவள் அருகே நெருங்க ஆரம்பித்தான்.
ஏற்கனவே தாய்சொல்லி தந்தபடி அவள் அதற்கு நிபந்தனை போட்டாள். என்னை நெருங்க வேண்டுமென்றால் காணிக்கையாக யஹ்யா நபியின் துண்டித்த தலை என் முன்னால் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றாள்.
தலையை துண்டிக்க ஆணை
மதுபோதையிலும், பெண் ஆசையிலும் மதி மயங்கிய அரசன் தனது சேவகர்களை அழைத்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எங்கிருந்தாலும் கண்டு அவரது தலையை துண்டித்து தன் முன்னால் கொண்டுவர ஆணையிட்டான்.
அச்சமயம் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, அவர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறி “நீங்கள் விரும்பும்பட்சத்தில் இந்த நாட்டையே தலைகுப்புற புரட்டி அழித்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.
விதிப்படியே நடக்கட்டும் என்ற யஹ்யா (அலை)
இந்த அரசனால் கொல்லப்பட வேண்டும் என்று எனது விதியில் எழுதப்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள் யஹ்யா அலைஹிஸ்ஸலாம். அதற்கு “ஆம்” என்றார்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள். அப்படியாயின் நான் அதற்கு எதிர்த்து என்ன பயன்? விதிப்படியே நடக்கட்டும் என்று கூறினார்கள். அச்சமயத்தில் அரசனின் சேவகர்கள் வந்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிரசை துண்டித்து தம்மோடு எடுத்துச் சென்று விட்டார்கள்.
தலை பேசியும் கேட்காத அரசன்
அரசன் முன் அந்த சிரசு வைக்கப்பட்டதும் அரசன் அதைக் கூர்ந்து நோக்கினான். அந்த துண்டிக்கப்பட்ட சிரசிலிருந்து “அந்தப் பெண்ணை நீ மணப்பதோ, அவளருகில் நெருங்குவதோ கூடாது. கூடாது” என்று முணுமுணுக்கும் சப்தம் அவனது செவிகளில் மெதுவாக ஒலித்தது.
அந்த அரசனின் மனைவி அந்தப் பெண்ணை அந்த அரசனோடு திருமணம் செய்து வைத்து விட்டாள். உடனே எழுந்த ஒரு சூறாவளிக் காற்று அந்த அரசனை அலக்காக தூக்கி பாலைவனத்தில் வீசி எறிந்தது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு சிங்கம் அவனைக் கொன்று தின்றுவிட்டது.
டமஸ்கஸில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது
யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நேர்ந்த கதி மக்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் கொதித்தெழுந்தனர். இது அடுத்த நாட்டு அரசனின் காதுக்கும் எட்டியது. இதுதான் சமயம் என்று பார்த்த அவன் உடனே படையெடுத்து அரசியையும், அவள் மகளையும் கொன்று அரசிற்கு ஆதரவாக இருந்த பனீ இஸ்ரவேலர்களையும் சிரச் சேதம் செய்து விட்டான். யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித உடல் டமஸ்கஸில்(திமிஷ்கில்) அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....