ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழியல்லாஹு அன்ஹு)
ஸுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 594 - கி.பி. 656) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருங்கிய உறவினரும், தோழரும் ஆவார்கள். “ஒவ்வொரு நபிக்கும் சில சீடர்கள் (ஹவாரிய்யீன்கள்) உள்ளார்கள். என்னுடைய ஹவாரி (சீடர்) ஸுபைர் இப்னு அவ்வாம்” என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் ஒரு சிறந்த குதிரை வீரர், பொதுவாக ஒரு தனித்துவமான மஞ்சள் தலைப்பாகை அணிந்திருப்பார். நபி (ஸல்) அவர்கள் நடத்திய போர்களிலெல்லாம் இவர் கலந்து கொண்டு வீரத்துடன் போர் செய்துள்ளார். நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு இவ்வுலகில் நன்மாராயம் கூறப்பெற்ற பத்து பேரில் இவரும் ஒருவர்.
பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
அன்னை கதீஜா (ரழி) அவர்களின் சகோதரர் அவ்வாம் இப்னு குவைலித் அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களின் தகப்பனாரின் தங்கை ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும் மகனாக மக்கா நகரில் கி.பி 594 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது, ஒரு வயது வந்தவருடன் சண்டையிட்டு அவரை மிகவும் கடுமையாக அடித்து, அந்த மனிதனின் கை உடைந்தது. அப்போது கர்ப்பமாக இருந்த ஸஃபிய்யா, அந்த நபரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
ஜுபைரின் இளம் வயதில் அவரது தந்தை அவ்வாம் மரணமடைந்தார். இவர் செய்யும் தவறுகளுக்கு அவரது தாயார் இவரை கடுமையாக தண்டிப்பது வழக்கம். அருகில் உள்ளோர் அந்த சிறுவனை ஏன் அடித்து கொல்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த அம்மையார் “ அப்பொழுதுதான் இவன் கவனமாகவும், புத்திசாலியாகவும், போரில் தைரியமாக இருப்பான்” என்று கூறினார்கள்.
இஸ்லாமியராக இணைவு மற்றும் ஹிஜ்ரத்
அபூபக்ர் (ரழி) அவர்களின் வழிகாட்டலில் முதலில் இஸ்லாத்தில் இணைந்த ஐந்தாவது வயது வந்த ஆண் என்று கூறப்படுகிறது. மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு கி.பி 615இல் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்காவில் உள்ள இணைவைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள் என்று கேள்விப்பட்டு கி.பி619இல் அபீஸீனியாவில் இருந்து மக்காவுக்குத் திரும்பியவர்களில் ஸுபைர் (ரழி) ஒருவராக இருந்தார், ஆனால் அவர்கள் மக்காவை நெருங்கிய போது, அந்த தகவல் தவறானது என்று அவர்கள் அறிந்தார்கள்.” பின்னர் கி.பி.622இல் நடைபெற்ற ஹிஜ்ரத்தில் பங்கு பெற்று மதீனா சென்றடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் நடத்திய போர்களிலெல்லாம் இவர் கலந்து கொண்டு வீரத்துடன் போர் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் சகோதரி அஸ்மா (ரழி) அவர்களை மண முடித்து கொண்டு இந்த வழியிலும் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினர் ஆனார்.
நபி(ஸல்) அவர்களின் கீழ் இராணுவ நடவடிக்கைகள்
பத்ரு போர்
மதீனாவிலிருந்து பத்ரு போருக்கு போகும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன் தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் இரண்டு குதிரைகளே இருந்தன. ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறி மாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறி மாறி பயணம் செய்தனர்.
படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர் தான்குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.
அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅதுஇப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். பின்னர் போரில் சண்டையிட்டு உமையாவின் உபைதா இப்னு சயீத்தை கொன்றார்கள்.
உஹுத் போர்
உஹுத் போர்களத்தில் படையின் வலப்பக்கத்தில் முன்திர் இப்னு அம்ர் (ரழி) அவர்களையும், இடப்பக்கத்தில் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களையும், ஜுபைருக்கு உதவியாக மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்களையும் நியமித்தார்கள். காலித் இப்னு வலீதின் தலைமையிலுள்ள எதிரிகளின் குதிரைப் படைகளை எதிர்க்கும் பொறுப்பை இடப்பக்கத்தில் நிறுத்தியிருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
உஹுத் போரின் முதல் தீ பிழம்பு
இரு படைகளும் சமீபமாயின. சண்டையிட நேரம் நெருங்கியது. இணைவைப்பவர்களின் கொடியை ஏந்தியிருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா போரின் முதல் தீப்பிழம்பை மூட்டினான். தன்னுடன் நேருக்கு நேர் மோத முஸ்லிம்களை அழைத்தவனாக படைக்கு முன் வந்தான். இவன் குறைஷிகளில் மிகப்பெரிய வீரனாக இருந்தான். முஸ்லிம்கள் இவனை ‘கபிஷுல் கதீபா' (படையின் முரட்டுக் கடா) என்று அழைத்தனர். இவன் வீரம் மிகைத்தவன் என்பதால் முஸ்லிம்கள் இவனுக்கு முன் வரத்தயங்கினர். ஆனால், நபித்தோழர் ஸுபைர் (ரழி) சிங்கம் பாய்வது போல் ஓரே பாய்ச்சலாக இவன் மீது பாய்ந்து ஒட்டகத்தின் மீது அவனுடன் ஏறிக் கொண்டார்கள். அவனுடன் சண்டை செய்து அவனைப் பூமியில் தள்ளி வாளால் வெட்டிக் கொன்றார்கள். ஜுபைரின் வீர தீரத் தாக்குதலைப் பார்த்த நபியவர்கள் தக்பீர் முழங்க முஸ்லிம்கள் அனைவரும் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்கள் ஜுபைரைப் புகழ்ந்து ‘‘ஒவ்வொரு நபிக்கும் ஒரு விசேஷமான தோழர் இருப்பார். எனது விசேஷத்தோழர் ஜுபைராவார்'' என்று கூறினார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)
அதற்குப் பின் அவனது சகோதரன் கிலாஃப் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவன் மீது ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தினார்கள்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் காயம்பட்டு வீழ்ந்து கிடப்பது தெரிந்து. அந்த இடத்தைச் சுற்றிலும் அலி (ரழி) அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), தல்ஹா (ரழி), ஸுபைர் (ரழி) மற்றும் ஹாரித் (ரழி) ஆகியோர் சுற்றி நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினார்கள்.
அன்றைய தினம் அபூபக்ர், உமர், அலீ, ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னுஉபைதுல்லாஹ், அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், ஸஅதுப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு ரபீஃ, அனஸ் இப்னு நள்ர் (ரழி) இன்னும் இவர்களைப் போன்ற நபித்தோழர்களில் பலர் போரில் காட்டிய வீரம் இணை வைப்பவர்களின் உறுதியைக் குலைத்து அவர்களது தோள் வலிமையைத் தளர்வடையச் செய்தது.
அகழ் போர்
அகழிப் போரின் போது, ஸுபைர் (ரழி) ஒரு கர்ஜனை குதிரையில் சவாரி செய்தார். அவர் குரைஸா பழங்குடியினர் பற்றிய செய்திகளை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வர முன்வந்தார், அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு நபிக்கும் சில சீடர்கள் (ஹவாரிய்யீன்கள்) உள்ளார்கள். என்னுடைய ஹவாரி (சீடர்) ஸுபைர் இப்னு அவ்வாம்” என்று கூறினார்கள்.
கைபர் போர்
முஸ்லிம்கள் முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் நிலை குலைந்தனர். அலீஇப்னு அபூதாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர்.
மர்ஹபின் சகோதரன் யாசிர் ‘‘என்னுடன் சண்டை செய்பவன் யார்?'' என்று கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஸுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார். அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது மகனைக் கொன்று விடுவானே'' என்று கலங்கினார். அதற்கு நபி(ஸல்) ‘‘இல்லை உமது மகன் தான் அவனைக் கொல்வார்'' என்று கூறினார்கள். அவ்வாறே ஸுபைர் (ரழி) அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொண்ட யூதர்கள் அந்த கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி ‘ஸஅப்' என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம் கோட்டையைத் தங்களதுகட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.
இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு வந்தான். அவனை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் சண்டையிட வந்தான். அவனையும் ஸுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான். அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள் மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.
மக்காவைக் கைப்பற்றிய தினம்
நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூபல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான். உடனே நபியவர்கள் அலீ, மிக்தாத், ஸுபைர், அபூமர்ஸத் கனவி (ரழி) ஆகியோரை அழைத்து ‘‘நீங்கள் ‘காக்' என்ற தோட்டத்திற்குச் செல்லுங்கள் அங்கு ஒரு பெண் பயணி இருப்பாள் அவளிடம் குறைஷிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அதைக் கைப்பற்றுங்கள்!'' என்று கூறினார்கள்.
அவர்கள் விரைந்து சென்று அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) கூறியபடி அப்பெண் இருக்க, அவளை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறி அவளிடம் ‘‘உன்னிடமுள்ள கடிதம் எங்கே? என்று கேட்டார்கள். அவள் ‘‘என்னிடம் எக்கடிதமும் இல்லை'' என்றாள். அவர்கள் அவளது பயணச் சாமான்கள் அனைத்தையும் தேடினர். ஆனால், அதில் ஏதும் கிடைக்கவில்லை.
‘‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் பொய் கூற மாட்டார்கள், நாங்களும் பொய் கூற மாட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீயாக அக்கடிதத்தை கொடுத்து விடு அல்லது உனது ஆடையை களைந்து நாங்கள் தேடுவோம்'' என்று அலீ (ரழி) கூறினார்கள். அலீயின் பிடிவாதத்தைப் பார்த்த அப்பெண் ‘‘விலகிக் கொள்'' என்று கூற அலீ (ரழி) விலகிக் கொண்டார்கள். தனது சடையை அவிழ்த்து அதிலிருந்த கடிதத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் அதை நபியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
மக்காவிற்குள் நுழைந்த போது இடப்பக்கம் உள்ள படைக்கு ஸுபைர் இப்னு அவ்வாமை (ரழி) தளபதியாக்கி அவருக்கு ஒரு கொடியை வழங்கினார்கள். மக்காவின் மேல்புறமுள்ள ‘கதா' என்ற இடத்தின் வழியாக மக்காவுக்குள் நுழைந்து ‘ஹுஜ்ன்' என்ற இடத்தில் கொடியை நாட்டி தங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டார்கள். பின்னர் அவர் ஹுனைன் போரிலும் போராடினார்.
கலீபாக்கள் காலத்தில் ஆற்றிய பணி
கலீஃபா அபூபக்ர் (ரழி) அவர்கள் மதீனாவை பாதுகாக்க உருவாக்கிய புதிய படையில் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லா(ரழி) போன்ற முக்கியஸ்தர்களும் அடங்குவர். அவர்கள் ஒவ்வொருவரும் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட படையில் மூன்றில் ஒரு பங்கின் தளபதியாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் எந்தவொரு போர் சூழ்நிலையையும் எதிர்கொள்ளவில்லை.
கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் கீழ் எகிப்தை முஸ்லீம் கைப்பற்றிய போது -ஸுபைர் (ரழி) மிகவும் வெற்றிகரமான களத் தளபதியாக இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் தனது வாழ்வின் கடைசி தினங்களில் தனக்கு பின் கலீஃபாவை தேர்ந்தெடுப்பதற்காக அவர் ஸுபைர் (ரழி) மற்றும் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களை முறையாகத் தேர்ந்தெடுத்தனர்,
ஒட்டகப் போர்
உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழி வாங்குவதற்கு ஆயிஷா (ரழி) அவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்திற்கு முன் வந்தார்கள். இவர்களில் மக்காவின் கவர்னரும் கூட அடங்குவார். இந்த நிலையில் தல்ஹா (ரலி) அவர்களும், சுபைர் (ரலி) அவர்களும் மக்காவை அடைந்திருந்தார்கள். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மதீனாவில் உடனடி நடவடிக்கை ஒன்று அவசியப்படுவதாகவும், அவ்வாறானதொரு நடவடிக்கையை ஆயிஷா (ரழி) அவர்கள் எடுக்கும் பட்சத்தில், அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் வாக்குறுதியும் அளித்தார்கள். இன்னும், மதீனா இருக்கும் நிலையில் நீங்கள் இங்கு வருவதற்குப் பதிலாக பஸ்ரா நகருக்குச் செல்லுங்கள், அங்கும் இதற்கான ஆதரவுகளைத் திரட்டுங்கள் என்று இருவரும் அறிவுரை கூறினார்கள்.
உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதற்கு கலீஃபா அலி (ரழி) அவர்கள் தயாராகி விட்டார்கள் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். தல்ஹா, சுபைர் மற்றும் ஆயிஷா (ரழி) ஆகியோர்கள் எதனை வலியுறுத்திக் கொண்டிருக் கின்றார்களோ, அதற்கு அலி(ரழி) அவர்கள் உடன்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அப்துல்லா பின் சபாவின் ஆட்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அலி(ரழி) அவர்கள் அறிவிப்புச் செய்ததன் மறுநாள் சொல்லிய படியே, பஸ்ரா நகரை நோக்கி அலி (ரழி) அவர்களும் அவர்களது படையினரும் புறப்பட்டார்கள். இப்பொழுது மறு கூடாரத்திலிருந்து தல்ஹா (ரழி) மற்றும் ஸுபைர் (ரழி) அவர்களும் தங்களது படையினருடன் பஸ்ரா நகரை விட்டும் வெளிக் கிளம்பி வந்தார்கள். இந்த இரண்டு படைகளும் மூன்று நாட்கள் நேருக்கு நேர் நின்று கொண்டிருந்தன. அமைதிப் பேச்சு வார்த்தைகளும் நடந்துகொண்டே இருந்தன. மூன்றாவது நாள்!
இரண்டு தரப்பிலிருந்தும் உள்ள மிகப் பெரும் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தார்கள். அலி (ரழி) அவர்கள் தனது குதிரையின் மீதமர்ந்து கொண்டு முன்னே சென்றார்கள். மறு முனையிலிருந்து தல்ஹா (ரழி) மற்றும் ஸுபைர் (ரழி) ஆகியோர்கள் தங்களது குதிரைகளில் அலி (ரழி) அவர்களை நோக்கி வந்தார்கள். இரு குழுக்களும் நேருக்கு நேராக, இரண்டு அணிக்குதிரைகளின் கழுத்துக்கள் ஒன்றிணைந்து கொள்ள முகத்துக்கு முகம் பார்த்துப் பேசலானார்கள்.
ஓ ஸுபைர்! உங்களுக்கு நினைவிருக்கின்றதா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னை (க் குறித்து) நீங்கள் விரும்புகின்றீர்களா என்று உங்களிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு நீங்கள், 'ஆம்” என்றீர்கள் அல்லவா. அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், ஜுபைரே..! ஒருநாள் வரும், அப்பொழுது ஒன்று இல்லாததொரு விஷயத்திற்காக அலியுடன் நீங்கள் சண்டைக்கு நிற்பீர்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்களே ஞபாகமிருக்கின்றதா? என்று அலி (ரழி) அவர்கள் ஸுபைர் (ரழி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.
நிச்சயமாக..! நபி (ஸல்) அவர்கள் சொன்னது உண்மை தான். நான் இப்பொழுது நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவுபடுத்திக் கொண்டேன் என்றார்கள். இந்தக் கலந்துரையாடல்களுக்குப் பின், இரண்டு தரப்பாரும் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டார்கள். இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடல்கள் இரு தரப்பினரது மனதையும் இளக வைத்திருந்தது. நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் மூலமாக சிந்தப்படவிருக்கின்ற இரத்தங்கள், மற்றும் இஸ்லாமிய சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்தும் இரு தரப்பாரும் சிந்திக்கலானார்கள். ஆனால், அமைதிக்கான அறிகுறிகள் முழு அளவில் தென்படவில்லையே என்று இரு தரப்பார்களும் உணரத் தளைப்பட்டார்கள்.
அலி (ரழி) அவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது குறித்து, மிகவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தனது கூடாரத்திற்குத் திரும்பினார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு அடித்துக் கொண்டு இரத்தம் சிந்துவது தவிர்க்கப்பட்டு விட்டது என்றே அலி (ரழி) அவர்கள் கருதலானார்கள். இன்னும் யாருக்கு எதிராகவும் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடக் கூடாது, அதாவது ஒரு அம்பைக் கூட எறியக் கூடாது என்று கடுமையான உத்தரவை தனது படையினருக்கு அலி (ரழி) அவர்கள் கடுமையான கட்டளையிட்டார்கள். அன்றைய இரவில், யா அல்லாஹ்..! இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதனின்றும், அதன் கொடுமைகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இரவு வந்தது. இரவின் நிசப்தத்தில் இரண்டு படைகளும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அப்துல்லா பின் சபா வும், அவனது ஆட்கள் மட்டும் தூங்கவில்லை. இரவு முழுவதும் சதிகளைப் பற்றிய திட்டமிடுதலில் கழித்தார்கள். இது தான் நமது கடைசிச் சந்தர்ப்பம் இதனை நழுவ விடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்கள். இரவின் இருள் இன்னும் விலாகமல் இருந்தது. ஆனாலும் அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வாட்களின் பேரிரைச்சல் எங்கும் சூழ ஆரம்பித்தது. யாருமே நினைத்துப் பார்த்திராத திடீர்க் குழப்பம். சபா வும் அவனது ஆட்களும், திடீரென ஆயிஷா (ரழி) அவர்களின் படையினரின் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். விரைவில், முழு அளவிலான யுத்தம் ஆரம்பமாகி விட்டது.
திடீரென ஏற்பட்ட இந்தக் குழப்பத்தைப் பார்த்து, தல்ஹா (ரழி) மற்றும் ஸுபைர் (ரழி) ஆகியோர் செய்வதறியாது நின்றார்கள். என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்று தன்னுடைய ஆட்களைப் பார்த்து தல்ஹா (ரழி) கேட்க, அலியினுடைய ஆட்கள் நம்மைத் தாக்குகின்றார்கள் என்ற பதில் வந்தது.
என்ன இது நாம் இப்படி நடக்குமென்று நினைத்தும் கூட பார்க்கவில்லையே..! முஸ்லிம்களினுடைய இரத்தம் சிந்தப்படாமல், அலி ஓய மாட்டார் போலிருக்கின்றது, இந்தப் பயம் எமக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது என்று தல்ஹா கருதத் தலைப்பட்டார். இங்கு, தல்ஹா எதனை நினைத்தரோ அதனையே அந்த முகமாமில் இருந்த அலி (ரழி) அவர்களும் கருதலானார்கள்.
ஸுபைர் (ரழி) மரணம்
போர்க்களத்தை விட்டும் ஓடிய ஸுபைர் (ரழி) அவர்கள், இப்பொழுது மக்காவை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருந்தார். பயணத்தின் இடையில் ஒரு பள்ளத்தாக்கில் தொழுவதற்காக தனது பயணத்தை ஸுபைர் (ரழி) அவர்கள் இடைநிறுத்தினார்கள். தொழுகையில் தனது முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அம்ர் பின் ஜர்மூஸ் என்பவர் ஸுபைர் (ரழி) அவர்களின் தலையைக் கொய்து விட்டார். அவரைக் கொலை செய்ததோடு நில்லாமல், ஸுபைர் (ரழி) அவர்களின் கையைக் கொய்து, அலி (ரழி) அவர்களிடம் கொண்டு வந்தார். அலி (ரழி) அவர்களின் எதிரியான ஸுபைர் (ரழி) அவர்களைக் கொலை செய்ததற்காக கலீஃபா அவர்கள் தனக்குச் சன்மானம் தருவார் என்று அவர் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அலி (ரழி) அவர்களிடமிருந்து கடுமையான வசைகளைத் தான் பெற்றுக் கொள்ள முடிந்தது அவரால். இந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர், பலமுறை நபி (ஸல்) அவர்களின் முகாமில் இருந்து எதிரிகளுக்கு எதிராக வாள் பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன் என்று கூறிய அலி (ரழி) அவர்கள், கொலைகாரர்களுக்கு நரகமே சித்தமாகட்டும் என்று கத்தினார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.