ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற வேண்டும் துஆ
ரப்பி அவூதுபிக மின் ஹமஸாதிஷ் ஷயாத்தீன்.
வ அவூதுபிக ரப்பி அய்யஹ்ளுரூன்.
ஸூரத்துல் முஃமினூன் 23: 97,98
பொருள் :
"என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். (23:97) என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" (23:98)
விளக்கம் :
என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். (23:98) என அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறைவன் திருக்குர் ஆன் வாயிலாக கற்றுக் கொடுத்த துஆ.
ஷைத்தானிடமிருந்து காப்பாற்று :
மறைவாக உள்ள ஜின் இனத்து ஷைத்தான்களை நற்குணங்கள் வாயிலாகவோ, நல்லுபதேசங்கள் மூலமாகவோ எதிர் கொள்வது இயலாது. அல்லாஹுவின் பாதுகாப்புக் கிட்டினாலே தவிர அவைகளிடமிருந்து தப்ப முடியாது. எனவே அத்தீய சக்திகளின் இன்னல்களிலிருந்து விடுபட இறைவன் “நபியே! கூறுவீராக: என்னுடைய இரட்சகா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” என்று பிரார்த்திக்குமாறு ஸூரத்துல் முஃமினூன் 97, 98 ஆம் திருவசனங்கள் வாயிலாக பணிக்கிறான்.
(மஆரிஃப் ஷஃபீஉ 06:331)
மனங்குமுறும் போதும், வெஞ்சினம் பொங்கும் போதும், வெறியுணர்வு தலையெடுக்குந் தருணங்களிலும் இத் திருவசனப் பிரார்த்தனையை ஓதுமாறு நம்பிக்கையாளர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.