ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள்)
இது ஷவ்வால் மாதம் முதல் நாள் அன்று முஸ்லிம்களால் கொண்டாடப்படும் திருநாள். சங்கைமிக்க ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காகப் பகல் முழுவதும் பசித்திருந்து, இரவில் பெரும் பகுதி தொழுதும், துதித்திருந்தும் கழித்தவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசைப் போன்றது இப்பெருநாள். இறைவனுக்காக ஒரு மாதம் முழுவதும் பசித்திருந்த பின் வருவதால் இந்தப் பெருநாளுக்கு அதிக மதிப்பு உண்டு.
இந்தப் பெருநாளை ஷவ்வால் மாத முதல் பிறையைப் பார்த்த பின்னரே கொண்டாட வேண்டும். மகிழ்ச்சியைக் சுமந்து வரும் பெருநாளைக் கொணருவதால் இந்த ஷவ்வால் மாத முதல் பிறை அதிகம் வரவேற்பைப் பெறும். அறியாமைக் கால அரபிகள் இம்மாதத்தை அவ்வளவு சிறப்பாகக் கருதவில்லை. இந்த மாதத்தில் அவர்கள் திருமணங்கள் கூடச் செய்ய மாட்டார்கள். இந்த மூட நம்பிக்கையைத் தகர்த்தெறிவதற்காகத் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை இம்மாதத்தில் மணந்து கொண்டார்கள்.
ஷவ்வால் மாத முதல் நாளின் சிறப்பு
இந்த ஷவ்வால் மாத முதல் நாளின் சிறப்பை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். “(ஷவ்வால் மாதத் துவக்க நாளாகிய) பெருநாள் காலை பிறந்ததும் அல்லாஹ் தன் அமரர்களை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்புகிறான். அவர்கள் மண்ணகம் இறங்கி ஊர்களின் ஒவ்வொரு தெரு முனைகளிலும் நின்று கொண்டு மனிதர்களை நோக்கிக் கூவுகின்றனர். ’முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்களே! அருள் புரிந்தாளும் உங்களின் இறைவனின் சமூகம் செல்லுங்கள். அவன் தான் அருளைச் சொரிகிறான்; பெரும் வெகுமதிகளை வழங்குகிறான். பெரும் பாவங்களை மன்னிக்கின்றான்’ என்று, அவர்களின் கூவலை மனிதர் ஜின் தவிர்த்து மற்றைய படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன.”
இப் பெருநாளின் பெருமை
இந்த பெருநாள் புலர்ந்ததும் முஸ்லிம்கள் குளித்துப் புத்தாடை புனைந்து நறுமணம் பூசி பள்ளி வாயில்களுக்கும், ஈத்கா வென்னும் பெருநாள் தொழுகைக்கென்றே இருக்கும் திறந்த வெளிகளுக்கும் சாரை சாரையாகச் செல்வர். அப்பொழுது இறைவன் தன் அமரர்களைப் பார்த்து, “தொழிலாளி தன் வேலையை முழுவதும் முடித்த பின் அவனுக்கு என்ன வழங்க வேண்டும்?” என வினவுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இரட்சகனே! அந்தத் தொழிலாளிக்கு முழுக் கூலியையும் கொடுத்து விட வேண்டும்.” என்று விடை கொடுப்பர்.
உடனே இறைவன், “வானவர்களே! நீங்கள் அனைவரும் சாட்சியாக இருங்கள்!! அவர்கள் நோற்ற ரமலான் மாத நோன்பையும், தொழுத தராவீஹ் தொழுகையையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். அவர்களின் பாவங்களையும் நான் மன்னித்து விட்டேன். இதுவே நான் அவர்களுக்கு அளிக்கும் நற்கூலியாகும்.” இது இறைவன் தன் அமரர்கள் மூலம் அவர்களை சாட்சியாக வைத்துக் கூறியது.
ரமலான் மாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட தன் உத்தம அடியார்களைப் பார்த்து அவன் நேரிடையாகக் கூறுவது இது: “என் அடியார்களே! என்னிடமே கேளுங்கள்!! என் மேன்மை, மரியாதையின் மீது ஆணையாக இந்தக் கூட்டத்தில் வைத்து இம்மை, மறுமைக்கான நன்மைகள் அனைத்தையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன். என் வல்லமையின் மீது ஆணையாக, நான் உங்களை இழிவுபடுத்த மாட்டேன், இன்று என் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் மன்னிக்கப் பட்டு விட்டீர்கள், நீங்கள் என்னைத் திருப்திப் படுத்தினீர்கள், நான் உங்களைக் கொண்டு திருப்தியுற்றேன்.” இவ்விதம் இறைவன் கூறுவான். அதைக் கேட்டு அமரர்கள் மனமகிழ்ந்து அந்நாளைத் தாமும் கொண்டாடுவர். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இந்த வாக்கே போதும் இப் பெருநாளின் பெருமையை விளக்குவதற்கு.
தக்பீர் முழக்கம்
அன்று இளங்காலையிலிருந்தே பள்ளிகளிலிருந்தும், ஈத்காக்களிலிருந்தும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’ (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாருமில்லை. இன்னும் அல்லாஹ் மிகப் பெரியவன், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது) என்னும் தக்பீர் முழக்கம் எழும்பத் துவங்கி விடும்.
பெருநாள் தொழுகை
பொழுது புலர்ந்து நண்பகல் வரை பெருநாள் தொழுகை தொழலாம். ஆனால் தொழுது கொண்டிருக்கும் போதே நண்பகல் வந்துவிடின் தொழுகை கூடாததாகிவிடும். இந்த தொழுகைக்கு பாங்கு சொல்லுவதில்லை. இகாமத்தும் கூறுவதில்லை.
தொழுகைக்காக இமாம் எழுந்து நின்றதும் நாமும் எழுந்து நின்று அவர் தக்பீர் கட்டியதும், நாமும் ‘இந்த பெருநாள் தொழுகையை அதிகப்படியான தக்பீர்களுடன் இந்த இமாமைப் பின் தொடர்ந்து அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன்’ என்று நிய்யத் செய்து கொண்டு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிக் கொள்ள வேண்டும்.
முதல் ரக் அத்திற்கு ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக் அத்திற்கு ஐந்து தக்பீர்களும் சொல்ல வேண்டும். இந்த தக்பீர் சொல்லும் போது தொழுகைக்குத் தக்பீர் கட்ட கையை உயர்த்துவது போல கையை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு தக்பீருக்கு இடையிலும் “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்று ஓதிக் கொள்ள வேண்டும். இத் ஷாபீயீக்களுக்குள்ள முறையாகும்.
ஹனபிகள் வாஜிபான (ஈதுல் பித்ர்) பெருநாள் தொழுகை இரண்டு ரக் அத்தை வாஜிபான ஆறு தக்பீரைக் கொண்டு இமாமுடன் சேர்ந்து தொழுகிறேன். என நிய்யத்துச் செய்து தக்பீர் கட்டி தனா ஓதிய பின்பு அல்லாஹு அக்பர் என்று மூன்று விடுத்தம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தக்பீர் சொல்லும் போதும் தஹ்ரீமாவுடைய தக்பீரைப் போன்று இரு கைகளையும் இரு காது சோனைக்கு நேராக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு தக்பீருக்குப் பின்னாலும் ‘சுப்ஹானல்லாஹ்’ என மூன்று முறை கூறும் அளவு தாமதிக்க வேண்டும். இதன் பின், அஊது, பிஸ்மி, ஸுரத்துல் பாத்திஹா அத்துடன் ஏதாவது ஒரு ஸுரத்து ஓதி ருகூஉ ஸஜ்தா செய்ய வேண்டும். பின்பு இரண்டாவது ரக் அத்திற்கு நிலைக்கு வந்து பிஸ்மி சொல்லி ஸுரத்துல் பாத்திஹாவும் வேறு ஒரு ஸுரத்தும் ஓதிய பின்பு முன்பு போல் கையை உயர்த்தி மூன்று தக்பீர் சொல்லி பின்பு நான்காவது தக்பீரில் கையை உயர்த்தாது ருகூஉவிற்கு தக்பீர் சொல்லி ருகூஉ, ஸஜ்தா செய்து தொழுகையை முடிக்க வேண்டும்.
தொழுகைக்குப் பின் குத்பா
பெருநாள் தொழுகை முடிந்ததும் தொடர்ச்சியாக தொழுகைக்குப் பின் இமாம் நிகழ்த்தும் “குத்பா”வை அவசியம் கேட்க வேண்டும். அதன் பின் இமாம் துஆ ஓதுவார், இந்த துஆவை மட்டுமல்லாமல் நம்முடைய விருப்பங்களை இறைவனிடம் கோரவும் செய்யலாம். ஏனெனில் பெருநாள் அன்று இறைவனின் அருள் கருவூலம் திறந்து விடப்படுகிறது என்று கூறப்படுகிறது.
“பித்ரா” என்னும் தர்மம்
இந்த பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன்னர் ‘பித்ரா’ என்னும் தர்மம் செய்வது அவசியம். அதனால் தான் இந்தப் பெருநாளுக்கு ‘ஈதுல் பித்ர்’ என்னும் பெயர் வந்தது. சிறியோர், பெரியோர் எல்லோர் மீதும் இந்த ‘பித்ர்’ வாஜிபு என்று எல்லா மத்ஹபுகளும் கூறுகின்றன. இந்த பித்ர் தனக்காகவும், தன்னுடைய சிறு குழந்தைகளுக்காகவும் கொடுப்பது கடமையாகும். தன் மனைவிக்காகவும், வயது வந்த தன் மக்களுக்காகவும் கொடுப்பது கடமை அல்ல.
பெருநாள் அன்று கிழக்கு வெளுத்தவுடன் ‘பித்ர்’ கொடுப்பது வாஜிபு என்று ஹனபி மத்ஹபிலும், ஷவ்வால் முதல் பிறை பார்த்தவுடன் இது வாஜிபாகிறது என்று ஷாபியீ மத்ஹபிலும் கூறப்பட்டிருக்கிறது. அதனைக் கொடுக்கத் தாமதித்தால் கொடுக்காது இருந்து விடலாகாது.
இந்த பித்ரை கடும் வறுமையில் வாடுபவர்களும், ஜகாத் வாங்கத் தகுதியுடையவர்களும் பெறலாம். நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னரே பித்ருடைய சதகா கடமையாக்கப்பட்டு விட்டது.
முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அவசியமான தங்களது தேவைக்கதிகமான ஜகாத் விதியாவதற்குரிய தொகையுடை யவர்களாயிருந்தால் (ஈதுல் பித்ரு) பெருநாள் அன்று பித்ரா கொடுப்பது வாஜிபாகும். ஹனபிகளாயிருப்பின் ஒரு நபருக்கு ஒன்றரைப்படி கோதுமையோ அல்லது அதன் கிரயமோ, ஷாபிகளாயிருப்பின் பழக்கத்தில் பிரதான உணவாகக் கொள்ளும் தானியத்தில் இரண்டு படி கொடுக்க வேண்டும். இந்த அளவுக்குச் சற்று அதிகமாகவே கொடுப்பது பேணுதலுடன் செய்வதாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.