Home


யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய வரலாறு, “ஸூரத்து யூஸுஃப்” என்ற தனி அத்தியாயத்தில் குர்ஆன் ஷரீபில் தெளிவாகக் கூறியிருக்கிறது. 98 வசனங்களில் தொடர்வாக வரலாறு அதில் காணப்படுகிறது. இதல்லாமல் தனியாகக் குறிப்பிடப்படும் ஒரிரு வசனங்களும் உள்ளன. இவர் நபி யாகூப் (அலை) அவர்களின் அன்பு மகனாவார். அழகும், அருங்குணமும், ஒருங்கே பெற்றிருந்த நபி யூஸுஃப் (அலை) அவர்கள் மீது அதிக அன்பு பாராட்டி வந்தார்கள். இதனால் ஏனைய எல்லா சகோதரர்களுக்கும் யூஸுஃப் (அலை) அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது. பைபிளிலும், யூத கிரந்தங்களிலும் “ஜோசப்” என்ற பெயரில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், இத் திருமறை குர் ஆன்  கூறும் நபி யூஸுஃபின் வரலாறு, பைபிளில் உள்ள ஜோசப்பு கதையைப் போன்றதன்று.

நபி யூஸுஃப் (அலை) பிறப்பு

        நபி யூஸுஃப் (அலை) அவர்கள் பிறந்த இடம் “ஹாரான்”. இதனுடைய இன்றைய பெயர் கலீல். பலஸ்தீனத்திலுள்ள பள்ளத்தாக்கு. ஜெரூஸலத்திலிருந்து தென்மேற்கே 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவரது தாயார் பெயர் ராஹிலா.

        இறைதூதர் இப்றாஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை) அவர்களின் பேரனும், நபி யஃகூப் (அலை) அவர்களின் புதல்வருமான யூஸுஃப் (அலை) அவர்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றம் பெற்றிருந்தார்கள். “மனித அழகில் சரிபாதி நபி யூஸுஃபுக்கு அருளப்பெற்றிருந்தது.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

        இவர்கள் மீது நபி யஃகூப் (அலை) அவர்கள் அதிக அன்பு பாராட்டி வந்தார்கள். இதனால் ஏனைய எல்லா சகோதரர்களுக்கும் யூஸுஃப் (அலை) அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது. எனவே யூஸுபை எந்த வகையிலும் கொன்று விட சதியாலோசனை செய்தார்கள்.

அதிசயக் கனவு பற்றி திருமறையில்

        யூஸுஃப் (நபி, யஃகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில்,  (12:4.)

        (யஃகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார். (12:5.)

        தவிர, "(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஃகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உங்களுடைய இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார்கள்).  (12:6.)

மற்ற சகோதரர்களின் சதி பற்றி திருமறையில்

        12:8. (யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும்,

        12:9. ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள்.

        12:10. (அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.

விளையாட அனுமதி பெற்றது பற்றி திருமறையில்

        12:11. (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கிறோம்" என்றும்,

        12:12. "நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள்.

        12:13. (அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார்.

        12:14. அதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து),

        12:15. (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். "அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவீர்கள். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.

ஓநாய் அடித்துத் தின்றுவிட்டது பற்றி திருக்குர் ஆன்

12:16. அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து,

12:17. "எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

12:18. அன்றி, (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு "ஓநாய் அடித்துத் தின்ன) இல்லை" உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ் விடம் உதவி தேடுகிறேன்" என்று கூறினார்கள்.

கிணற்றிலிருந்து காப்பாற்றப் பட்டது குறித்து குர்ஆன் 

        12:19. பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

        12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர்.

எகிப்தில் அடிமையாக விற்றது பற்றி திருமறை

        12:21. (அவரை வாங்கியவரும், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்றுவிட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி "நீ இவரை கண்ணியமாக வைத்துக் கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம்முடைய (சுவீகாரப்) புத்திரனாக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற் காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கி யானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவனாக இருக்கிறான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.

        12:22. அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்க முடையவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலித் தருகிறோம்.

ஆசைக்கு இணங்க அழைத்தது பற்றி திருமறை

        12:23. அவரிருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை "வாரும்" என்றழைத்தாள். அதற்கவர், "(என்னை) அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாகவும்! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்" என்று கூறினார்.

        12:24. அவள் அவரைக் காதலிப்பதில் உறுதிகொண்டு விட்டாள்; அவர் தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் அவரும் அவளைக் காதலித்தே இருப்பார். எனினும், கெடுதல்களிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம்முடைய (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

சட்டை கிழிந்தது பற்றி திருமறையில்

        12:25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறம் கிழிந்துவிட்டது. அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக்கொள்ளக் கருதி) அவரை நோக்கி "உங்களுடைய மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு தண்டனை உண்டா?" என்று கேட்டாள்.

உண்மையை உணர்ந்த கணவர்

        12:26. (யூஸுஃப் அதனை மறுத்து) "அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: "அவருடைய சட்டை முன்புறம் கிழிந்திருந்தால் அவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (அன்றி)

        12:27. அவருடைய சட்டைப் பின்புறம் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்" (என்றார்).

        12:28. (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) "நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்களுடைய சதியே; நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது" என்று கூறி,

        12:29. (யூஸுஃபை நோக்கி) "யூஸுஃபே! நீங்கள் இதனை இம்மட்டில் விட்டுவிடுங்கள். (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்" என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) "நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார்.

அந்த ஊரில் இழிவாக பேசியது பற்றி திருமறை

        12:30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டினத்திலுள்ள பெண்கள் பலரும் (இதனை இழிவாகக் கருதி) "அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள (கேவலம்) ஒரு (அடிமை) வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்" என்று (இழிவாகப்) பேசலானார்கள்.

இழிவாக பேசியவர்களை பழிவாங்க விருந்து

        12:31. (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.

        12:32. அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள்.

யூஸுஃப் (அலை) அவர்களின் துஆ அங்கீகரித்தது

        12:33. அதற்கவர், "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார்.

        12:34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

சிறையில் யூஸுஃப் (அலை) அவர்கள்

        12:35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)

        12:36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) "நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன் "நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் உங்களை மிக்க (ஞானமுடைய) நல்லோர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீங்கள் எங்களுக்கு அறிவிப்பீராக!" (என்று கூறினான்).

கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும் ஞானம்

        12:37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) "நீங்கள் புசிக்கக் கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவும் (இக்கனவுகளின் பலன்) உங்களிருவருக்கும் நிறைவேறுவதற்கு முன்னதாகவும் (அக்கனவுகளின்) பலனை நீங்கள் அடைவதற்கு முன்னதாகவும் (அதனை) நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதனை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமை யையும் நிராகரிக்கும் மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.

        12:38. அன்றி, என்னுடைய மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

இரு சிறை தோழர்களின் கனவின் பலன்

12:41. (பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.)

12:42. அன்றி, அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக்கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் மறக்கடித்து விட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.

எகிப்தின் அரசரின் கனவுக்கு பலன் கேட்டு அறிவிப்பு

        12:43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார்.

        12:44. அதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள்.

சிறையில் இருந்த யூஸுஃப் கனவின் பலன் அறிவித்தது

        12:45. (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.)

        12:46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான்.

        12:47. அதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.

        12:48. அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைகளில் (விதைப்புக்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.

        2:49. அதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்).

யூஸுஃப் சிறை விட்டு வெளிவர மறுப்பு

        12:50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார்.

விசாரணையில் பெண்களின் சூழ்ச்சி வெளியானது

        12:51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் "அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை" என்று கூறி விட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (இதனை மறுத்து அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்" என்று கூறினாள்.

யூஸுஃபை தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக ஆக்கியது

        12:54. (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார்.

        12:55. (அதற்கவர்) "தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்" என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)

        12:56. யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.

பஞ்சம் ஏற்பட்டு யூஸுப்பின் சகோதரர்கள் வருகை

        12:57. எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)

        12:58. ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.

        12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா?

        12:60. நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார்.

        12:61. அதற்கவர்கள் "நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்" என்று கூறினார்கள்.

தந்தையிடம் அனுமதி கோரியது

        12:62. (பின்னர் யூஸுஃப்) தன் ஆட்களை நோக்கி "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அறிந்துகொண்டு (அதனை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.

        12:63. (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது "எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்" என்று கூறினார்கள்.

        12:64. (அதற்கு யஃகூப்) "இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்" என்று கூறிவிட்டார்.

புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதி

        12:65. பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு "எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்" என்று கூறினார்கள்.

        12:66. (அதற்கு அவர்களின் தந்தை) "நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன். ஆயினும், உங்கள் அனைவரையுமே (யாதொரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாலன்றி" என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே அதற்கு அவர் "நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்" என்று (கூறி புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.

தந்தையின் கட்டளை

        12:67. பின்னும் (அவர்களை நோக்கி) "என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் யாதொன்றையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்பு பவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்" என்றார்.

        12:68. (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய யாதொரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்க வில்லை. (ஏனென்றால், புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதனை) அறிந்த வராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதனை) அறியாதவர்களாகவே இருந்தனர்.

புன்யாமீனை நிறுத்தி கொள்ள யூஸுஃப் செய்த உபாயம்

        12:69. அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடைய சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உங்களை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)

        12:70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்துவிட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கிறீர்கள்" என்று சப்தமிட்டான்.

        12:71. அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து "நீங்கள் எதை இழந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார்கள்.

        12:72. அதற்கவர்கள், "அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதனை எவர் (தேடிக்) கொடுத்தபோதிலும் அவருக்கு ஒரு ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி" என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.

பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?

        12:73. அதற்கு இவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். அன்றி, நாங்கள் திருடுபவர்களும் அல்ல" என்று கூறினார்கள்.

        12:74. அதற்கு அவர்கள் "நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டனர்.

        12:75. அதற்கவர்கள் "எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்" என்று கூறினார்கள்.

பொதிகளைச் சோதிப்பு

        12:76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதனை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலன்றி அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் (இருந்தே) இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும் விட மேலான கல்விமான்.)

அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்

        12:77. (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார்.

        12:78. அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) "அஜீஸை! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்" என்று கூறினார்கள்.

        12:79. அதற்கவர், எவரிடம் நம்முடைய பொருள் காணப்பட்டதோ அவரை அன்றி (மற்றெவரையும்) பிடித்துக்கொள்ளாது அல்லாஹ் என்னை காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நான் பெரும் அநியாயக்காரனாகி விடுவேன்" என்று கூறிவிட்டார்.

        12:80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) "உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில் அல்லது அல்லாஹ் எனக்கு யாதொரு தீர்ப்பளிக்கும் வரையில் இங்கிருந்து நான் அகல மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்" என்று கூறினார்.

தந்தையிடம் தகவல் தெரிவிப்பு

        12:81. (மேலும் அவர்களை நோக்கி) "நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே அன்றி (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;

        12:82. (நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)

        12:83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதனைத் தங்கள் தந்தை யஃகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் "நீங்கள் கூறுவது) சரியன்று! உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" என்று கூறிவிட்டு,

        12:84. அவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.

        12:85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரையில் (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்கள்" என்று கடிந்து கூறினார்கள்.

அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்

        12:86. அதற்கவர் "என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாத வற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.

        12:87. என்னுடைய மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்" என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.

யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள்?

        12:88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள்.

        12:89. (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்.

        12:90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) "மெய்யாகவே நீங்கள் யூஸுஃபாக இருப்பீரோ?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான் தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை" என்று கூறினார்.

        12:91. அதற்கவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)" என்று கூறினார்கள்.

இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள்.

        12:92. அதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார்.

        12:93. "நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார்.

இழந்த தன் கண் பார்வையை யஃகூப் (அலை) அடைந்து

        12:94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார்.

        12:95. (இதனைச் செவியுற்ற அவருடைய மக்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் உங்களுடைய பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.

        12:96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார்.

எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று அழைத்து செல்லல்

        12:97. (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள்

        12:98. அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

        12:99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று ("இறைவன் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று கூறினார்.

சிம்மாசனத்தின் மீது அமர்த்தி தாய் தந்தைக்கு மரியாதை

        12:100. பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார்.

        12:101. (அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)

யூஸுஃப் நபி (அலை) அவர்களின் இறுதி காலம்

        தம் அறிவுரைக்கிணங்கி ஒரே இறை வழிபாட்டை மக்கள் மேற்கொள்ளாதது கண்டு வெய்துயிர்த்த இவர்கள், தங்களுக்கு இறப்பை நல்குமாறு இறைவனிடம் இறைஞ்ச, அவ்விதமே இவர்கள் கி.மு 1792 இல் இறப்பெய்தினார்கள். தொடக்கத்தில் இவர்களது உடல் நைல் (நீல) நதியின் நடுவிலிருந்த மணல் திட்டில் அடக்கம் செய்யப்பட்ட போதினும், பின்னர் இவர்களின் இறுதி உரையின் படி மூஸா (அலை) அவர்கள் பனீ இஸ்ராயீல்களைப் பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்ற பொழுது ஒரு கிழவியின் உதவியால் அதனைக் கண்டு பிடித்து, எடுத்துச் சென்று பைத்துல் முகத்தஸில் நல்லடக்கம் செய்தார்.

திருமறையில் யூஸுஃப் கால மக்கள் நிலை

“இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) யாதொரு தூதரையும் அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறான்.” (40:34)


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...