Home


அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் ரழியல்லாஹு அன்ஹு

அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.583 - கி.பி.639) அவர்களின் இயற்பெயர் ஆமிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு அல்ஜர்ராஹ் என்பதாகும்.  உலகத்திலேயே சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற பத்து பேரில் இவர்களும் ஒருவர். பத்ருப் போரில் தம் தந்தை அப்துல்லாஹ்வை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தம் வாளுக்கு இரையாக்கினார்கள். உஹத் போரில் நபி (ஸல்) அவர்களின் உடலில் பாய்ந்திருந்த இரும்புத் துண்டுகளைத் தம் பற்களால் கடித்து இழுத்ததில் இவர்களின் இரண்டு பற்கள் விழுந்தன. மேலும் அவர்கள் சிறந்த போர் வீரராகவும், படைத்தளபதியாகவும், அனைத்து போர்களிலும் பணியாற்றி நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கையை பெற்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற சேவையாளர். இவர்களை நபி (ஸல்) அவர்கள் ”அமீனுல் உம்மத்” சமுதாயத்தின் நம்பிக்கையாளர் என்று கூறினார்கள்.

ஆரம்ப கால வாழ்வு

        அபூ உபைதா கி.பி.583 ஆம் ஆண்டு அப்துல்லாஹ் இப்னு ஜர்ராஹ் என்பவரின் மகனாக மக்காவில் பிறந்தார். குரைஷி குலத்தில் பனு அல்-ஹரித் இப்னு ஃபிஹ்ரின் பிரிவை சேர்ந்தவர். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மக்காவின் குரைஷிகளில் பிரபலமானவராகவும், குரைஷிகளிலேயே மிகவும் மென்மையான, நன்னடத்தையுள்ள, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள மனிதர்களில் அபூபக்கர் (ரழி) மற்றும் உஸ்மான் (ரழி) அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மிகச் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார்கள். இவர்கள் மக்காவில் வியாபாரம் செய்து வந்தார்கள்.

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றது

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதில் இறைவனிடமிருந்து வஹியை பெற்று பிரச்சாரத்தை ஆரம்பித்த ஆரம்ப கால்த்தில், அபூபக்ர்(ரழி) தனக்கு மிக நம்பிக்கைக்கு உடையவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், அர்கம் இப்னு அபீ அர்கம், அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களுடன்,  இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார் என்றும் வாக்குறுதி அளித்து, இஸ்லாத்தில் இணைந்த சிறப்புக்குரியவர்கள்.  சந்தேகமில்லாமல் இஸ்லாம் என்னும் கோட்டையை அந்த அரபு மண்ணிலே கட்டப்படுவதற்குத் தூண் போல நின்றவர்கள் இவர்கள்.

முதல் ஹிஜ்ரத் அபிசீனியா பின்னர் மதீனா

        இஸ்லாத்தின் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு, மக்கத்து குரைஷிகள் அளித்த அவமானங்களும் அடக்குமுறைகளும் கடுமையான அனுபவத்தை அபூ உபைதா(ரலி) அவர்களுக்கு அளித்தது. எனவே அபிசீனியாவிற்க்கு (எத்தியோப்பியா) முதல் ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்  குழுவில்  இவர்களும் இணைந்து ஹிஜ்ரத் செய்தார்கள்.

        கி.பி.623 இல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பொழுது அபூ உபைதா (ரழி) அவர்களும் அபிசீனியாவில் இருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களை (மக்காவாசிகளை), மதீனாவில் வாழ்ந்து வந்த அன்சாரி தோழர்களுடன் சகோதரர்களாக இணைத்து வைத்தார்கள். மதீனாவில் முஹம்மது இப்னு மஸ்லாமா(ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) அவர்களை சகோதரர்களாக ஆக்கினார்கள்.

பத்ரு போர்

        கி.பி 624 ஆம் ஆண்டில் பத்ரு போர் நடந்து கொண்டிருக்கின்றது. எதிரிகளின் நடுவே அபூ உபைதா (ரழி) நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதர் இவரிடம் வம்புக்கென்று போர் புரிய வருகின்றார். இவரும் அந்த மனிதரைத் தவிர்த்து மற்ற பக்கம் கவனம் செலுத்தும் பொழுதெல்லாம், இவரை அவமதிக்கும் நோக்கிலேயே இவர் முன் வந்து வம்புக்கிழுக்கின்றார். இவரும் மீண்டும் மீண்டும் அந்த மனிதரைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றார். இறுதியில் அவருடன் மோதியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அந்த எதிரியின் தலையில் தனது வாளைப் பாய்ச்சி அவரது தலையை இரு கூராக்கி, நிலத்திலே வெற்றுடலாக வீழ்த்துகின்றார். அபூ உபைதா (ரழி) அவர்களை இந்தளவு சினம் கொள்ளச் செய்த அந்த மனிதர் யாரென்று கருதுகின்றீர்கள்?! உங்களால் யூகிக்க முடிகின்றதா? அபூ உபைதா (ரழி) அவர்களின் வாளுக்கு இரையான அந்த மனிதர் வேறு யாருமல்ல, அபூ உபைதா (ரழி) அவர்களின் தந்தையார் தான் அந்த மனிதராவார். அபூ உபைதா (ரழி) பற்றி குர் ஆனில் இறைவன் பின் வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (ஸூரத்துல் முஜாதலா 58:22)

உஹத் போர்

        கி.பி.625 ஆம் ஆண்டில், உஹத் போரில் அபூ உபைதா (ரழி) அவர்களும் பங்கேற்றார். இரண்டாம் கட்ட யுத்தத்தில், காலித் இப்னு வலீத்தின் குதிரைப்படை முஸ்லிம்களை பின்புறத்திலிருந்து தாக்கி,  இஸ்லாமிய படைகளின் வெற்றியை தோல்வியாக மாற்றிய போது, முஸ்லீம் வீரர்களில் பெரும்பாலோர் போர்க் களத்திலிருந்து விரட்டப்பட்டனர், மற்றும் சிலர் கடைசி வரை உறுதியாக போரிட்டு கொண்டு இருந்தனர். அதில் அபூ உபைதா (ரழி) அவர்களும் ஒருவர், அவர் குரைஷி வீரர்களின் தாக்குதல்களில் இருந்து முஹம்மத நபி (ஸல்) அவர்களை பாதுகாத்தார். அந்த நாளில், அபூ உபைதா(ரழி) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கன்னங்களில் ஊடுருவிய கவசத்தின் இரண்டு இணைப்புகளை பிரித்தெடுக்க முயன்றபோது தனது முன் பற்களில் இரண்டை இழந்தார்.

அன்னை ஆயிஷா (ரழி) தனது தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரழி) கூறியதாக அறிவிக்கிறார்கள்:

‘‘உஹத் போரன்று மக்கள், நபி (ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறிவிட்டார்கள். பின்பு நான் தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். நபியவர்களின் முகம் தாக்கப்பட்டிருந்ததால் அவர்களது முகக்கவசத்தின் இரண்டு ஆணிகள் கண்ணுக்குக் கீழ் பகுதியில் புகுந்து விட்டன. நான் அதை எடுக்க விரும்பினேன்.

அப்போது அபூ உபைதா (ரழி) ‘‘அபூபக்ரே! அல்லாஹ்விற்காக கேட்கிறேன். அதை நான் தான் செய்வேன்'' என்று கூறினார். பின்பு அபூ உபைதா (ரழி), நபியவர்களுக்கு வலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வாயால் அதை மிக மென்மையாக எடுக்க முயற்சித்தார். பிறகு, அதை நபி அவர்களின் முகத்திலிருந்து பல்லால் கடித்து எடுத்தார். அதனால் அவரது முன் பல் விழுந்து விட்டது. இரண்டாவது ஆணியை அகற்ற நான் விரும்பினேன். அப்போதும் அபூஉபைதா (ரழி) ‘‘அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். நான் தான் அதையும் எடுப்பேன்'' என்று கூறி, முன்பு செய்தது போன்றே மிக மெதுவாக எடுத்த போது அபூ உபைதாவின் இன்னொரு பல்லும் விழுந்து விட்டது.  (ஜாதுல் மஆது, இப்னு ஹிப்பான்)

தொடர்ந்து போர்களில் பங்கேற்பு

        கி.பி.627 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் அகழிப் போரிலும் அதை தொடர்ந்து பானு குரைஷின் படையெடுப்பிலும் பங்கேற்றார். பின்னர் மதீனாவின் அருகிலுள்ள கிராமங்களை சூறையாடிய தஃலிபா மற்றும் அன்மார் பழங்குடியினரைத் தாக்கி அழிக்கப் புறப்பட்ட ஒரு சிறு படையின் தளபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

        கி.பி.628 ஆம் ஆண்டில் அவர் ஹுதைய்பியா ஒப்பந்தத்தில் பங்கேற்றார், மேலும் இந்த ஒப்பந்தத்தின் சாட்சிகளில் ஒருவரானார். அதே ஆண்டின் பிற்பகுதியில், அவர் கைபருக்கான பிரச்சார நோக்கோடு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றார்.

சலாசில் போர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

        கி.பி 629 ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட பொழுது, மிகப் பிரபலமான படைத்தளபதிகளுள் ஒருவராக அங்கே அபூ உபைதா (ரழி) அவர்களும் இருந்தார்கள். கைபரை வெற்றி கொண்ட பின் நபி (ஸல்) அவர்கள் தனது படைகளை அம்ர் இப்னு அல்ஆஸ் (ரழி) அவர்களது தலைமையில் சலாசில் என்ற இடத்திற்கு அனுப்பினார்கள். எதிரிப் படையணிகளை மதிப்பீடு செய்த அம்ர் இப்னு அல்ஆஸ் (ரழி) அவர்கள் மேலும் அதிகப்படியான படையினரை அனுப்பி வைக்குமாறு நபி(ஸல்) அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் நமது அபூ உபைதா (ரழி) அவர்களது தலைமையில் மிகச் சிறப்புப் பெற்ற தோழர்களான அபூபக்ர் (ரழி) மற்றும் உமர் (ரழி) போன்றோர்களையும் அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் அபூ உபைதா (ரழி) அவர்கள் எத்தகைய உயர் தலைமைப் பண்புகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை விளங்க முடியும்.

இத்துணை தலைமைப்பதவிக்குத் தகுதியானவராக இருந்தும், இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் போட்டி பொறாமைகளைப் போன்றதொரு இழி குணங்களுக்கு உட்பட்டு, ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் விழாமல் தங்களைக் காத்துக் கொண்ட அவர்களது நற்பண்புகளுக்கு இந்த சலாசில் போர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அபூ உபைதா (ரழி) அவர்கள் தனது படையணியுடன் சலாசிலை அடைந்தவுடன், அங்கே மொத்தப் படைகளுக்கும் யார் தலைமை தாங்குவது என்றதொரு பிரச்னை எழுந்தது. இப்பொழுதுள்ள தலைவர்களாக இருந்தால், தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தை இரண்டாகப் பிளந்திருப்பார்கள். ஆனால் அபூ உபைதா (ரழி) அவர்களோ, தன்னுடைய தலைமைப் பதவியை விட்டு இறங்கி, தானே முன் வந்து அம்ர் இப்னு அல்ஆஸ் (ரழி) தலைமையில் போரில் கலந்து கொள்ளச் சம்மதித்தார்கள். இதன் மூலம் மிகச் சிறந்ததொரு முன்னுதாரணமிக்க தோழராக அபூ உபைதா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

கொடுக்கப்பட்ட பணியின் மீது கவனம்

கி.பி.629 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், செங்கடலை ஒட்டிய பகுதியில் சென்று கொண்டிருந்த குரைஷிகளின் வணிகக் கூட்டத்தை எதிர் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 300 பேர் கொண்ட படையணிக்கு, அபூ உபைதா (ரழி) அவர்களைத் தளபதியாக நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்த படையணிக்குத் தேவையான உணவாக சிறிதளவே பேரீத்தம் பழங்கள் இருந்தன. அந்தப் பழங்களை ரேஷன் அடிப்படையில் தன் தோழர்களுக்கு அபூ உபைதா (ரழி) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்து வந்தார்கள்.

 ஒரு சமயத்தில் ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு ஒரு பேரீத்தம் பழம் வீதம் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். அதனை அடுத்து அந்தப் படையணி கை வசம் வைத்திருந்த அனைத்து பேரீத்தம் பழங்களும் தீர்ந்து போன தன் பின், அங்கு கிடைத்த இலை தலைகளைத் தின்று கொண்டு, தங்களது வாழ்க்கையை நகர்த்திய அந்தப் படையணிகள், எந்தவித முக்கலையும் முனகலையும் வெளிப்படுத்தாமல், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் மீது மிகவும் கவனமாக இருந்து, தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றினார்கள்.

அப்பொழுது, இவர்களது இந்தத் தியாகத்தைக் கௌரவிக்கும் பொருட்டு, இறைவன் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த கடலின் ஓரம் ஒரு பெரிய மீனை ஒதுங்கச் செய்தான். அந்த மீனைப் பிடித்து, மொத்த படையணியினரும் தங்களது பசியைப் பதினைந்து நாட்கள் போக்கிக் கொண்டார்கள். அந்த மீனின் விலா எலும்பின் வட்டத்தில் ஒரு ஒட்டகம் நுழையும் அளவு பெரிய மீன்.

இவர்களது இந்தப் பண்புகள், தவக்கல்த்து அலல்லாஹ் அதாவது இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்தது, அவனிடமே தங்களது அனைத்து அலுவல்களின் நன்மை தீமைகளை ஒப்படைத்து விடக் கூடிய பண்பைப் பறைசாற்றுவதாக இருந்தது, இதன் மூலம் அவர்களது ஈமானின் – இறை நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. இன்னும் தன் மீது பொறுப்பைச் சுமத்தி நேர்மையோடும், வாய்மையோடும் காரியமாற்றும் முஸ்லிம்களை இறைவன் என்றுமே கைவிட மாட்டான் என்பதையும் இந்தச் சம்பவம் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

மக்கா வெற்றி - தைஃப் மற்றும் தபூக் முற்றுகை

        கி.பி.630 ஆம் ஆண்டில், முஸ்லீம் இராணுவம் மக்காவைக் கைப்பற்றியபோது, நான்கு வெவ்வேறு பாதைகளில் இருந்து நகரத்திற்குள் நுழைந்த நான்கு பிரிவுகளில் ஒன்றை அபூ உபைதா(ரழி) தலைமை தாங்கி வழிநடத்தினார்.  அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் ஹுனைன் போர் மற்றும் தைஃப் முற்றுகை ஆகியவற்றில் பங்கேற்றார். நபி(ஸல்) அவர்களின் கட்டளையின் கீழ் அவர் தபூக் பிரச்சார முற்றுகை போர் நடத்தினார். தபூக் போரிலிருந்து அவர்கள் திரும்பியதும், நஜ்ரானில் இருந்து ஒரு கிறிஸ்தவ தூதுக்குழு மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தின் மீது அக்கறை காட்டியதுடன், இஸ்லாமிய சட்டங்களின்படி மத விஷயங்களிலும் பிற பழங்குடி விவகாரங்களிலும் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு நபரை அனுப்புமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களை ”அமீனுல் உம்மத்” சமுதாயத்தின் நம்பிக்கையாளர் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

பஹ்ரைன் சென்று ‘ஜகாத்’ வசூலித்த பணி

        பஹ்ரைனுக்கு சென்று ‘ஜகாத்’ வசூலித்து வருமாறு நபி (ஸல்) அவர்கள், இவர்களுக்கு ஆணையிட அவ்விதமே இவர்கள் சென்று ஏராளமான பொருள்களை ‘ஜகாத்’ தாக வசூலித்து வந்தார்கள். அன்று அதிகாலையில் மதீனாவின் பள்ளிவாசலில் மக்கள் மகிழ்ச்சி பொங்க குழுமி இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அபூ உபைதா வெற்றிகரமாகத் திரும்பி வந்துள்ளதை நீங்களெல்லாம் அறிவீர்கள் போலிருக்கிறது” என்று அவர்களை நோக்கிக் கூற, “ஆம்” என்று ஒருமித்துத் தோழர்கள் பதிலுரைத்தனர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி,

“நீங்கள் அனைவரும், எதிர்பார்த்ததற்குமேல் அதிகமாகப் பெறப் போகிறீர்கள்.  இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் உங்களின் வருமையைப் பற்றி வருந்தவில்லை. நீங்கள் விரைவில் வளமான வாழ்வினராக ஆகப் போகிறீர்கள். எனவே உங்களின் வளத்தைப் பற்றித் தான் அஞ்சுகிறேன். வளம் ஏற்பட்டுவிடின் பொறாமையும் சந்தேகமும் ஏற்பட்டு உங்களை அழித்து விடுமே என்று தான் அஞ்சுகிறேன். இவ்வாறு தான் உங்களின் முன் சென்றோரெல்லாம் அழிந்தனர்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்களுடன் அபூ உபைதாவின் நெருக்கம்

        அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), அபூ உபைதா (ரழி) ஆகியோரே நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய ஆலோசகர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு ‘உளூச்’ செய்யத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தைப் பெற்றிருந்த அபூ உபைதா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ‘உளூச்’ செய்து எஞ்சிய தண்ணீரைத் தாம் ‘உளூச்’ செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இவர்களின் தலையின் மீது தம் கரத்தை வைத்து உரையாடியதன் காரணமாக அவர்களின் கரம் பட்ட முடியை இவர்கள் தம் ஆயுள் வரை இறக்காது வைத்திருந்ததோடு அதனை அடிக்கடி முத்தமிட்டும் வந்தார்கள்.

அபூபக்ர் (ரழி) கலீபாவாக தேர்ந்தெடுத்தல்

        அபூபக்ர் (ரழி) அவர்களைக் கலீபாவாகத் தேர்ந்தெடுப்பதில் உமர் (ரலி) அவர்களுடன் பெரும் பங்கு கொண்டவர்கள் இவர்களேயாவர். இவர்கள் மதீனாவாழ் உதவியாளர்களை நோக்கி, “இஸ்லாத்தைத் தழுவியவரில் முதன்மையானவராக இருந்த நீங்கள் முஸ்லிம்களிடையே பிளவேற்படுத்துவதிலும் முதன்மையானவராக இருக்க வேண்டாம்.” என்று கனிவுடன் வேண்டிக் கொண்டனர்.

        அப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் எழுந்து நின்று உமர் (ரழி) அவர்களையோ, அபூஉபைதா (ரழி) அவர்களையோ கலீபாவாகத் தேர்ந்தெடுக்குமாறு கூற உடனே அவ் விருவரும் சரேலென எழுந்து அபூபக்ர் (ரழி) அவர்களின் கரம் பற்றி ‘பைஅத்’ செய்து, “ தாங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு அத்தகுதி ஏது?” என்று கூறினர். பின்னர், மற்றவர்களும் முன் வந்து அபூபக்ர் (ரழி) அவர்களின் கைப் பிடித்து ‘பைஅத்’ செய்து அவர்களைக் கலீபாவாக ஏற்றுக் கொண்டனர்.

        கலீபா பதவி ஏற்ற மறுநாள் அபூபக்ர் (ரழி) அவர்கள் வழக்கம் போல துணிகளைச் சுமந்து கொண்டு வாணிபம் செய்வதற்காகக் கடைத்தெரு சென்ற பொழுது அவர்களை வழியில் சந்தித்த உமர் (ரழி) அவர்கள். “தாங்கள் வாணிபம் செய்ய வந்தால் அரசாங்க அலுவல்களைக் கவனிப்பது யார்?” என்று வினவ, “நான் அரசாங்க அலுவல்களை மட்டும் கவனித்து வந்தால் என் குடும்பத்தைக் கவனிப்பது யார்?” என்று மறு வினா விடுக்க, அது பற்றி ஆலோசிக்க அபூபக்ர் (ரழி) அவர்களை அபூ உபைதா (ரழி) அவர்களிடமே அழைத்து வந்தனர் உமர் (ரழி) அவர்கள். இவர்களே அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு அகதிகளுக்கு அளிக்கப்படும் உபகாரச் சம்பளத்தின் அளவு (பைத்துல்மால்) பொது நிதியில் இருந்து கொடுத்து வர வேண்டுமென்று நிர்ணயம் செய்தனர்.

அபூபக்ர் (ரழி) அவர்கள்  கிலாஃபத்

        அபூபக்ர் (ரழி) அவர்கள் தம் கிலாஃபத்தின் போது சிரியாவிலுள்ள ஹமாஸ் பகுதியை வெற்றி கொள்ள இவர்களின் தலைமையில் தான் ஒரு படையை அனுப்பி வைத்தனர். அபூ உபைதா (ரலி) அவர்கள் படைத்தளபதியாக இருக்க, சிரியாவின் ஹமாஸ் பகுதியை அவரது படை வெற்றி கொண்டதன் பின்பு, அந்தப் பகுதிக்கு உபாதா பின் ஸாமித் (ரழி) அவர்களை மேற்பார்வையாளாராக நியமித்து விட்டு, தனது படையை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு, செல்லும் வழியில் உள்ள சிறு சிறு குழுக்களை வெற்றி கொண்டதன் பின், லஸாக்கியா என்ற நகரை அடைந்து அந்த நகரின் கோட்டையை முற்றுகையிடுகின்றார்கள்.

        இந்த முற்றுகைப் போரும் அதன் பின் நடந்த சம்பவங்களும் இன்றும் இராணுவதிட்டமிடல் வரலாற்றில் மிகச் சிறந்த உத்தியாகப் போற்றப்படுகின்றன. அந்தநகரின் கோட்டையை முற்றுகை இட்ட அபூ உபைதா (ரழி) அவர்களது ராணுவம், அந்தக்கோட்டையைச் சுற்றிலும் பதுங்கு குழிகளை வெட்டி வைக்கின்றது. அதன் பின் தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, அந்த நகரின் ஒதுக்குப் புறத்திற்குத் தனது படையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார். தங்களது கோட்டை முற்றுகை கை விடப்பட்டது பற்றி அறிந்து கொண்ட அவர்கள், கோட்டையின் கதவுகளைத் திறந்து தங்களது வழக்கமான அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் இரவானதும் தங்களது கோட்டைக் கதவுகளை மூடி விடுகின்றனர்.

இரவின் இருளைப் பயன்படுத்திக் கொண்ட அபூ உபைதா (ரழி) அவர்களது படையினர், தாங்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த பதுங்கு குழிகளில் சென்று தங்களை மறைத்துக் கொள்கின்றனர். மீண்டும் காலைப் பொழுது புலர்ந்த பின் அந்த கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும், குழிகளில் பதுங்கி இருந்த அபூ உபைதா (ரழி) அவர்களது படையினர் கோட்டைக்கு உள் சென்று கோட்டையை மிக எளிதாகக் கைப்பற்றி விடுகின்றனர். இத்தைகய போர் யுக்தியை முதன் முதலாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், நமது அபூ உபைதா (ரழி) அவர்களாகத் தான் இருக்கமுடியும்.

யர்மூக் போர்

        யர்மூக் என்றொரு ஆறு, இந்த ஆறு ஜோர்டான் நதியை அடைந்து இன்னும் முப்பது மைல்கள் வளைவாக ஓடி யர்மூக் என்ற இடத்தை அடைந்து பின்பும் அது தனது பயணத்தைத் தொடர்கின்றது. அங்கிருந்த மிகப் பெரிய சமவெளிப் பகுதிகளிலும் பாய்ந்தோடுகின்றது. இந்த சமவெளிப் பகுதி தான் யர்மூக் என்றழைக்கப் படுகின்றது. இந்த இடத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில் மிகப் புகழ் வாய்ந்ததொரு போர் நடந்தது.

        இந்தப் போரில் 2லட்சம் படைவீரர்களைக் கொண்ட ரோமப் படை, வெறும் 40 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட இஸ்லாமியப் படையினருடன் மோதியது. ஈராக்கிலிருந்து மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு யர்மூக் என்ற அந்த இடத்தை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அடைந்த பொழுது, முஸ்லிம்கள் பல தலைமைகளின் கீழ் சிதறி சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டு போர் செய்து கொண்டிருக்கின்ற தர்ம சங்கடமான சூழ்நிலையைக் கவனிக்கின்றார்கள். கவலை யடைகின்றார்கள். முஸ்லிம் படைகள் அபூஉபைதா (ரழி), யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரழி), சர்ஜீல் பின் மஸானா (ரழி), இன்னும் நான்காவதாக அம்ர் பின் ஆஸ் (ரழி) ஆகிய தலைவர்களைக் கொண்ட சிறு சிறுபடைகளாக நின்று போர் செய்து கொண்டிருப்பதைக் காண்கின்றார்கள்.

அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தலைமையின் கீழ் போர்

        இவர்கள் அனைவரும் முதலில் ஒருங்கிணைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், மிகவும் கவலை தோய்ந்தவர்களாக ஒரு மிகச் சிறந்த உரை ஒன்றை நிகழ்த்துகின்றார்கள். இந்த உரை இன்றைய கால கட்டத்திலும் நம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய உரையாக இருந்து கொண்டிருக்கின்றது.

        நமது எதிரிகள் மிகச் சிறந்த தயாரிப்புகளுடனும், இன்னும் நம்மை விட பன்மடங்கு படையினருடன் அதிக எண்ணிக்கையிலும் நம் முன் நின்று கொண்டிருக்கின்றார்கள். நம்மை அழித்தொழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்படி சிறு சிறு குழுக்களாக இருந்து கொண்டிருப்பது உங்களை எதிர்க்கும் எதிரிகளுக்கு மிகச் சாதகமான அம்சமாகப் போய் விடும், அவர்கள் நம்மை எளிதில் வீழ்த்தி விடுவார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் படைவீரர்கள், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது ஆலோசனைப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைமையின் கீழ் போரிடுவது என்றும் முடிவாகியது. இப்பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் ஒற்றுமையாக ஓரணியாக ஒரு தலைமையின் கீழ் நின்று போரிடத் தீர்மானித்து, எதிரிப் படையினரை ஊடறுத்துச் சென்று வெற்றியை நோக்கிப் போரிடுகின்றார்கள். முதல் நாள் போர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ்போராடுவது என்று தீர்மானமாகியது, இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனக்குள்ள அனுபவத்தின் மூலமாக, முஸ்லிம் படையணியினருக்கு பயிற்சி அளித்து போருக்குத் தயார்படுத்துகின்றார்கள்.

போரில் வெற்றி மற்றும் மதீனாவில் இருந்து வந்த கடிதம்

        இரண்டு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையாகப் போர் நடைபெறுகின்றது. முதல்நாளிலேயே ரோமர்களது படை ஒரு லட்சம் போர் வீரர்களை இழக்கின்றது. வாட்களின் இரைச்சலும், அடிபட்டவர்களின் ஓலங்களும் திரும்பும் திசை எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் ரோமப் படைகளை ஊடறுத்துச் சென்று காலீத் பின் வலீத் (ரழி) தலைமையில் மிகவும் சுறுசுறுப்பாக போர் புரிந்து கொண்டிருந்த பொழுது, தலைநகர் மதீனாவிலிருந்து வந்த தூதர் ஒருவர் ஒரு கடிதத்தைக் கொண்டுவருகின்றார். மதீனாவிலிருந்து வந்த அந்தத் தூதர் தான் கொண்டு வந்த கடிதத்தை அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடம் ஒப்படைக்கின்றார். கடிதத்தை வாங்கிய அபூ உபைதா (ரழி) அவர்கள், அதனை யாரிடமும் கூறாமல் தனது சட்டைப்பையில் வைத்துக் கொள்கின்றார்.

        இப்பொழுது முஸ்லிம்கள் ரோமர்களை வெற்றி கொண்டு விட்டனர், அந்தக் காட்சியை படைத்தளபதியாக இருந்த காலித் பின் வலீத் (ரழி) பார்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் மிகவும் மரியாதையுடன் மதீனாவிலிருந்து வந்த தபாலை அவரிடம் அபூஉபைதா (ரழி) அவர்கள் ஒப்படைக்கின்றார்கள். கடிதத்தை படித்து முடித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்து விட்ட செய்தியை அறிந்து மிகவும் கடுமையான சோகத்திலாழ்ந்து விடுகின்றார்கள்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)

        மேலும் அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரழி) அவர்களை அடுத்து, உமர் (ரழி) அவர்களை மக்கள் தங்களது அடுத்த கலீபாவாகத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, படைத்தளபதிப் பொறுப்பில் இருந்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நீக்கி விட்டு, அந்த இடத்தில் அபூ உபைதா (ரழி) அவர்களை மீண்டும் நியமனம் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்த மாத்திரத்திலேயே உடனே தனது பொறுப்பை அபூ உபைதா (ரழி) அவர்களுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு, அபூஉபைதா (ரழி) அவர்களது தலைமையின் கீழ் போர் புரியத் தயாராகி விட்டார்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். இன்னும், அபூ உபைதா (ரழி) அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது அருட்கொடைகளை சொறியட்டும். கடிதம் வந்தவுடனேயே ஏன் நீங்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை?

        அமீனுல் உம்மா அபூ உபைதா (ரழி) அவர்கள் கூறினார்கள் :

படைக்களத்தில் நாங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்னும் நீங்கள் ரோமப் படைகளுக்கு நடுவே முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் உங்களைத் தடுக்கவும் விரும்பவில்லை. நாம் இந்த உலகத்தின் அதிகாரத்தை வேண்டி நிற்பவர்களல்ல, மாறாக, இந்த உலகத்தில் கடமையாற்ற வந்தவர்கள். அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தை நாடி கடமையாற்றக் கூடிய நாம் அனைவரும் சகோதரர்களே! என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிலைக் கூறினார்கள்.

உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்

        உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது காலித் (ரழி) அவர்கள் யர்மூக் என்னும் இடத்தில் அடைந்த வெற்றி சிரியாவை இஸ்லாமியப் பிறைக் கொடியின் கீழ் கொண்டு வந்தது. காலித் (ரழி) அவர்களுடன் சேர்ந்து இவர்கள் வடக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்று சிரியாவின்  கடைசி எல்லையையும் அடைந்தனர். சிரியாவின் தலைநகர் நீண்ட நாள் முற்றுகையிடப்பட்டது.

        டமாஸ்கஸ் நகரம் வெற்றி கொள்ளப்பட்ட பின்பு தளபதி அபூ உபைதா (ரழி) அவர்கள், கலீஃபா உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு மடல் எழுதி அனுப்புகின்றார்கள், அந்த மடலில் உமர் (ரழி) அவர்களே, டமாஸ்கஸ் நகர மக்கள் தங்களது வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள், உங்களிடம் தான் தங்களது நகரின் சாவியை ஒப்படைப்போம் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். எனவே, உடன் டமாஸ்கஸ் வரவும் என்ற செய்தியை அனுப்புகின்றார்கள். பைத்துல் முகத்தஸ், திமிஷ்க், ஹிம்ஸ் ஆகிய நகர்களையும், பாரசீக நாடு முழுவதையும், வெற்றி கொண்ட பெருமை இவர்களையே சாரும்.

        அபூ உபைதா (ரழி) அவர்களின் மடல் கிடைத்தவுடன், உமர் (ரழி) அவர்கள் சிரியாவிற்குப் பயணமாகின்றார்கள். தன்னை வரவேற்கக் காத்திருந்தவர்களிடம் எங்கே எனது சகோதரன் என்று உமர் (ரழி) கேட்கின்றார்கள். யார் உங்களது சகோதரன் என்று மக்கள் ஆச்சரியத்தோடு வினவ, அபூ உபைதா (ரழி) அவர்கள் தான் என்று பதில் கூறவும், அவர் அண்மித்து வந்து கொண்டிருப்பதை மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். உமர் (ரழி) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களைக் கட்டித்தழுவி, பின் இருவரும் அபூ உபைதா (ரழி) அவர்களது இல்லத்திற்குச் செல்கின்றார்கள்.

அபூ உபைதா (ரழி) அவர்களின் ஆடம்பரமில்லாத அந்த எளிய குடிசையைச் சுற்றி தன்னுடைய பார்வையைச் செலுத்திய உமர் (ரழி) அவர்கள், அங்கு வாளும், அம்பும், வில்லையும் தவிர வேறொன்றையும், இந்த உலக வாழ்வின் எந்த அலங்காரத்தையும் அங்கு அவரால் காண முடியவில்லை. ஆச்சரியமடைந்த உமர் (ரலி) அவர்கள், அபூஉபைதா (ரலி) அவர்களே! நீங்கள் ஒரு மிகப் பெரிய பொறுப்புக்குரியவராக நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், உங்களுக்காக நீங்கள் எதனையும் செய்து கொள்ளவில்லையே! என்று வினவுகின்றார்.

இப்பொழுது நீங்கள் இங்கு எதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களோ, இதுவே என்னுடைய இந்த வாழ்க்கைக்குப் போதுமானதாகும் என்று அபூ உபைதா (ரழி) அவர்கள் பதில் கூறவும், இதைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன், இந்த அடிப்படைத் தகுதிகளுடனும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு நன்னம்பிக்கைக்கு உரியவராகவும் என்றைக்கும் நீங்கள் நிலைத்து, உண்மையாளராக இருங்கள் என்று வாழ்த்தினார்கள்.

ஆளுநர் அபூ உபைதா (ரழி) அவர்களின் கவலை

        இவர்கள் சிரியாவின் ஆளுநராக இருக்கும் பொழுது ஒரு நாள் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை ஒருவர் கண்டு, அதற்கான காரணம் வினவிய பொழுது, “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் வருங்காலப் பெருவெற்றிகளைப் பற்றி முன்னறிவிப்புச் செய்து, ‘நான் இறக்கும் பொழுது எவ்விதம் இருக்கிறாரோ அவ்விதமே எனக்குப் பின்னரும் இருப்பவரே என் அன்பிற்கு மிகவும் உரியவர்’ என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன். நான் இப்பொழுதிருக்கும் நிலையைக் கண்டு நான் மறுமையில் அவர்களின் கண்களில் எவ்வாறு விழிப்பது என்று கவலையாக இருக்கிறது” என்று கூறினர்.

சிரியா முழுவதும் ஒருவித பிளேக் நோய்

        அபூ உபைதா (ரழி) அவர்களின் கீழ் இருந்த முஸ்லிம்களின் படைகள், சிரியா மற்றும் அதன் சுற்றுப் புறங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருந்த உச்சக்கட்ட வேளையில், சிரியா முழுவதும் ஒருவித பிளேக் நோய் பரவியது. இத்தகைய கொடுமையான நோயை இதற்கு முன் அந்த மக்கள் அனுபவித்ததே கிடையாது. இன்னும் அந்த நோய்க்கு அதிகமான மக்கள்  இரையாகிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் படை வீரர்களில் 20,000 பேர்களின் உயிர்களைக் கொள்ளை கொண்டு சென்றது. வியாதியுற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் ஈடுபட்ட இவர்களுக்கு அந்நோய் தொற்றியது. இதனைக் கேள்விப்பட்ட கலீபா உமர் (ரலி) அவர்கள், அபூஉபைதா (ரழி) அவர்களை மதீனாவிற்கு வரும்படி ஒரு கடிதத்துடன் ஒரு தூதரை சிரியாவுக்கு அனுப்பி வைத்து, உங்களுடன் நான் ஒரு முக்கியமான விசயமாகக் கலந்துரையாட வேண்டியதிருக்கின்றது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள்.

        உமர் (ரழி) அவர்களே! நீங்கள் என்ன விசயமாக என்னிடம் கலந்துரையாட விரும்புகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் முஸ்லிம்களின் படையணியில் இருந்து கொண்டிருக்கின்றேன், இன்னும் அவர்கள் இப்பொழுது  மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, என்னைத் தனித்துப்பிரித்து அவர்களை கையறுநிலையில் விட்டு விட்டு வர நான் சம்மதிக்க மாட்டேன். இன்னும் அவர்களது முடிவும், என்னுடைய முடிவும் இறைவனுடைய கைகளில் இருக்கின்றது. உமர் (ரழி) அவர்களே! என்னருமை கலீஃபா அவர்களே! உங்களது கட்டளைக்கு மறுப்புத் தெரிவிக்க நேர்ந்து விட்டதே! என்பது குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன் என்று உமர்(ரலி) அவர்களுக்கு பதில் அனுப்பி விடுகின்றார்கள்.

அபூ உபைதா (ரழி) தன்னுடைய கடைசி நிமிடங்களின் பொழுது தன்னுடைய தோழர்களை அழைத்துக் கூறினார் : என்னருமைத் தோழர்களே! உங்களுக்கு நான் சில அறிவுரைகளை விட்டுச்செல்கின்றேன். அதனைப் பின்பற்றும் காலமெல்லாம் பாதுகாப்பையும் இன்னும் அமைதியையும் பெற்றுக் கொள்வீர்கள். அவையாவன:

தொழுகை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள்

ரமளான் மாதத்தில் நோன்பிருங்கள்

(குர்பானி) அறுத்துப் பலியிடுதலையும் இன்னும் தான தர்மங்களையும் செய்து கொள்ளுங்கள்

ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்

உம்ராவையும் செய்யுங்கள்

உங்களுக்குள் நன்மையை ஏவிக் கொள்ளுங்கள்

உங்களது ஆட்சியாளர்களின் நலத்திற்கும் இன்னும் உங்கள் மீது நீதமாக நடந்து கொள்ளவும் விரும்புங்கள்.

உங்களது ஆட்சியாளர்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள்

உங்களது கடமைகளை நிறைவேற்றும் பொழுது கவனமாக இருங்கள், அந்த கடமையைநிறைவேற்றுவதனின்னும் இந்த உலக ஆசாபாசங்கள் உங்களை மயக்கி விட வேண்டாம்.

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள்! ஒரு  மனிதனுக்கு ஆயிரம் வருடங்களாக அவனது ஆயுளை நீட்டித்துக் கொடுத்த போதிலும், என்றாவது ஒருநாள் அவன்.., நான் உங்கள் முன் கிடக்கின்றேனே இதைப் போல அவன் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். அந்த மரணத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பித்திட இயலாது.

உங்கள் மீது என்னுடைய ஸலாம் உண்டாகட்டும். அல்லாஹ்வினுடைய கருணையும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்.

பின் அபூ உபைதா (ரழி) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் பக்கம் திரும்பி,

இந்த மக்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்துங்கள் (அதாவது, எனக்குப் பின் என்னுடைய பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்) என்றார்கள்.

இன்னும் சில வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவரை மரணம்  தழுவிக்கொண்டது. (இன்னா லில்லாஹி  வஇன்னாஇலைஹிராஜிஊன்.)

        கி.பி. 639 இல் அம்வாஸ் என்னும் இடத்தில் பிளேக் நோயால் இறப்பெய்தினர். தற்பொழுதய ஜோர்டானில் இவர்களது அடக்கதளம் உள்ளது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...